பாத்திமா காட்சிகள் - அழியாத உடல்

தன் மரணத்திற்குப் பின் பாத்திமாவுக்குத் திரும்பிச் செல்வதாக ஜஸிந்தா கூறியிருந்தாள். அதுவும் நடந்தேறியது.  

பிரான்சிஸின் சரீரத்தையும், ஜஸிந்தாவுடைய சரீரத்தையும் பாத்திமாவில் அவர்களுக்கென அமைத்த புதிய கல்லறைக்கு எடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டது. 

பாத்திமா மேற்றிராணியாரின் முன்னிலையில் ஜஸிந்தாவின் உடல் இருந்த ஈயப்பெட்டி 15 ஆண்டுகளுக்குப் பின் 1935, செப்டம்பர் 12-ம் நாளன்று திறக்கப்பட்டது. 

பிரான்சிஸின் உடல் இருந்த பெட்டியும் திறக்கப்பட்டது. பிரான்சிஸின் எலும்புகள் மட்டும் காணப்பட்டன.  ஆனால் ஜஸிந்தாவின் முகம் அழியாமல் உறங்குவது போல் அழகுடன் காணப்பட்டது.

பெட்டியைத் திறந்தபோது, தன் மகளின் முகத்தைப் பார்க்கும் பாக்கியம் ஜஸிந்தாவின் தாய் ஒலிம்பியாவுக்குக் கிடைத்தது. அவள் தந்தை மார்ட்டோவும் கண்டார். கூட்டத்தின் நிமித்தம் அவரால் சரியாகப் பார்க்க முடியவில்லை.

ஜஸிந்தாவின் உடல் அவ்ரம் பட்டணத்திலிருந்து கோவா தா ஈரியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒரு பலிபூசை ஒப்புக் கொடுக்கப்பட்டது.

அதன்பின் பிரான்சிஸ், ஜஸிந்தா ஆகிய இருவரின் பூச்சியமான எஞ்சிய பொருட்களையும் பாத்திமாவில் அடக்கம் செய்தார்கள். 

அக்கல்லறையின் மேல், தேவ அன்னை தரிசனமளித்த ஜஸிந்தா, பிரான்சிஸ் ஆகியோரின் பூதவுடல்கள் இங்கு அடக்கப் பெற்றுள்ளன என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.

தாவீது இராஜாவுடைய உப்பரிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.