பாவிகளின் அடைக்கல ஜெபம்.

பரலோக பூலோக இராக்கினியே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ நான் நாலாபக்கமும் துன்பப்பட்டு, அண்ட ஓர் ஆதரவின்றி, மோட்ச நெறியை விட்டு பாவச் சேற்றில் அமிழ்ந்து நிற்கிறேன். சூது கொண்ட பசாசு ஒருபக்கம் என்னை தொந்தரை செய்கிறது. பெரிய பூலோகம் தன் மாயையால் என்னை அலைக்கழிக்கிறது. விஷமேறிய உடலோ என்னை எந்நேரமும் சஞ்சலப்படுத்துகிறது. நான் உமது திருமகனுக்கு என் பாவத்தால் விரோதியானதால் என் இருதயத்தில் பயங்கரமுண்டாயிற்று. இப்படிப்பட்ட வேலையில் நான் எங்கே ஆதரவடைவேன்?

என் பாவக்கொடுமையின் காற்றால்  இழுக்கப்பட்ட  தூசு போலானேன். அரவின் வாய்த் தேரை போலானேன். ஆலைவாய்க் கரும்பு போலானேன். அன்னையில்லாப் பிள்ளை போலானேன். புலியின் கைபட்ட பாலகன் ஆனேன். நான் பாதாளத்தில் ஒளிந்தாலும் அங்கேயும் ஆண்டவர் என் குற்றத்தைக் காண்கிறாரே, பூமியில் எந்த மூலையில் போனாலும் என் பாவம் என்னைத் தொடர்வதால் எனக்குத் திகிலும் கிலேசமும் இன்றி வேறு என்ன உண்டு? இறைவனுடைய நீதிக்குப் பயப்படுகிறேன். நீர் இறைவனுடைய தாயும் மனுக்குலத்திற்கு அரசியுமானதால் உமது அடைக்கலத்தில் ஓடி வந்தேன்.

என் பாவத்துக்காக அழுது வியாகுலப்பட்ட தாயே! என் பேரில் இரங்கி நான் படும் துயரை மாற்றி எனக்காக உம்முடைய திருமகனை மன்றாடும். எனக்கு பூமியும் அதன் செல்வா சுகங்களும் வேண்டாம். மகிமையும் மாட்சிமையும் வேண்டாம். சரீர இன்ப சுகமும், புகை போல் மறையும் பேர் கீர்த்தியும் வேண்டாம். என் ஆண்டவரும், அவர் இராச்சிய பாரமும் எனக்கு அகப்பட்டாலே போதும் அப்பாக்கியத்தை நினைத்து நினைத்து அனலில் விழுந்த புழுப்போல் துடிக்கிறேன். அம்பு தைத்த மான் போல் அலறுகிறேன். காட்டில் இராக்காலத்தில் அகப்பட்ட பிள்ளையைப் போல் திகைத்து நிற்கிறேன்.

நீர் சகல புண்ணியங்களைக் கொண்ட ஆண்டவளுமாய் இரக்கம் நிறைந்த என் தாயுமாகையால் அக்கினி பற்றி வேகும் வீட்டில் அகப்பட்ட பிள்ளைக்கு கை கொடுப்பார் போல் நீர் எனக்கு இத்தருணத்தில் கை கொடும் . கடலில் நீந்தி அமிழ்ந்தித் திரிபவர்க்கு கப்பற்காரர் உதவுமாப்போல் , நீர் எனக்கு இந்த ஆபத்தான வேளையில் உதவ வாரும் . சீக்கிரமாக வாரும். தயையோடும் இரக்கத்தோடும் வாரும் . நான் இறைவனுக்கு ஏற்காத பாதகனென்றாலும் , நான் உம்மை நோக்கி நீட்டிய கை பதறுவதைப் பாரும் . நீர் பாவிகளுக்குத் தஞ்சமென்று எல்லாரும் சொல்லுகிறார்களே ; உம்மை அண்டி ஆதரவடையாமல் போனவர்கள் இல்லையே .

ஆகையால் பாவிகளின் பாவியாகிய என் மேல் இரக்கம் வைத்து என்னையும் ஆதரிக்கச் சீக்கிரமாய் வாரும் . தாமதம் பண்ணாதேயும். வேதம் சொல்லுவதெல்லாம் முழுமனதோடு விசுவசிக்கிறேன். என் நம்பிக்கை எல்லாம் ஆண்டவருக்குப் பின் உமது பேரில் வைக்கிறேன். உமது திருநாட்களை எல்லாம் உத்தம பிரகாரம் அனுசரிக்கிறேன். அற்பப் பாவத்தை முதலாய் கட்டிக் கொள்ள மனதில்லை. எந்நேரமும் உமது திருமகனுமாய் எனது அன்புள்ள இரட்சகருமாய் இருக்கிற இயேசுநாதருக்குப் பிரியப்படுவேனோ என்கிற பயமேயன்றி எனக்கு வேறே பயமில்லை . சுதந்திரத்தாயே! உமது தஞ்சமென்று ஓடி வந்த என்னை தைரியமுள்ளவ(னா)ளாக்கி உலக காரியங்களில் எனக்குப் பெரிய கசப்புண்டாக்கி உல்லாசமான ஆனந்த ஞானக் கடலில் மூழ்க அனுக்கிரகம் பண்ணியருளும்.

ஆமென்.