பசி, தாகம்

"திருப்தி அடைந்திருப்பவர்களே உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில் பசியாயிருப்பீர்கள்" என்றார் நம் ஆண்டவர் (லூக். 6:25). 

அவரது உவமையில் திவெஸ் என்னும் பணக்காரன் நரகத்தில் கடும் தாகத்தால் அவதிப்பட்டு, ஆபிரகாமை நோக்கி, "பிதாவாகிய ஆபிரகாமே, என்பேரில் இரக்கமாயிருந்து, லாசர் தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரச் செய்யும்படி அனுப்பியருளும்..." என்று மன்றாடினான் (லூக். 16:24). 

விசேஷமாய், பிறர்சிநேகம் மறந்து, தன் இச்சைகளுக்குரிய காரியங்களையே எப்போதும் நாடித் தேடி, உலகத் திருப்தி கொண்டு அலைந்த மனிதனுடைய ஆத்துமம் அகோர பசியாலும் தாகத்தாலும் வாட்டப்படும்.

“அவர்கள் சாப்பாட்டுக்கு அலைவார்கள்; திருப்தியடையாமல் முறுமுறுத்துக் கொண்டிருப்பார்கள்” (சங். 58:15).

இவை தவிர ஒவ்வொருவனும் தான் கட்டிக் கொண்ட பாவத்துக்குத் தக்க விதமாய் விசேஷ வேதனை அனுபவிப்பான். எந்தப் புலன்களால் பாவம் கட்டிக் கொண்டானோ அந்தப் புலன்களில் குறிப்பாக அதிகம் சித்திரவதை செய்யப்படுவான். 

"நரக நெருப்பானது சரீரத்தின் சகல அவயவங்களிலும் பிரவேசித்து, அதிகக் குற்றமுள்ளது எது என்று தேடி, அதற்கு அதிகமாய் வேதனை வருத்துவிக்கக் கூடிய அக்கினி" என்று அர்ச். அகுஸ்தீனார் சொல்கிறார். 

"அவனவன் கிரியைகளுக்குத் தக்கபடியே சர்வேசுரன் அவனவனுக்குப் பதிலளிப்பார்" (உரோ. 2:6).