கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் பாகம் - 02

“வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடி கொண்டார் “

முதலில் கடவுளின் அன்பை பார்ப்போம்..

“கடவுளுக்கு கண் இல்லையா ? “ நம்ம கஷ்ட்டம் கடவுளுக்கு எங்கே தெரியப்போகிறது “ “ அவரு கடவுளு நம்ம யாரு சாதாரண மனுசன் “ இதைப்போல எத்தனையோ கமெண்ட் நம்மவர்கள் ஏன் நாமே ஒரு சில சூல்நிலையில் சொல்லியிருப்போம்...

சரி.. தன் ஆவியை ஊதி தன் சாயலாகவும் பாவனையாகவும் படைத்த முதல் மனிதன் பாவத்தில் விழுந்தான். கடவுள் கூட இருந்து வழி நடத்தியும் இஸ்ராயேல் மக்கள் பாவத்தில் விழுந்தார்கள். எத்தனையோ இறைவாக்கினர்கள் மூலமாக பேசியும் மீண்டும் மீண்டும் மனிதர்கள் தன் பலவீனத்தால் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுந்தார்கள்.

 கடவுளும் “ திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்” என்று நினைக்காமல் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துக்கொண்டே இருந்தார்.பாவங்கள் கூடிக்கொண்டே போயின குறைந்த பாடில்லை.. ஒரு நிலையில் சோர்வு அடைந்தார்..சற்று வெறுப்பும் அடைந்திருப்பார். சரி நானே மனிதனாக பிறக்கின்றேன். உங்கள் பாவத்திற்காக நிந்தையும் கொடிய வேதனையும் அனுபவித்து அவமான மரணமான சிலுவையில் மரிக்கின்றேன்.. அப்போதாவது மனம் மாறுவீர்களா? திருந்துவீர்களா? பாவத்தை விட்டுவிடுவீர்களா? சாத்தானை விட்டுவிடுவீர்களா? என்று பாவமான இவ்வுலகில் பரிசுத்தரான பரமன் ஒரு பரிசுத்த தாயின் உதிரத்தில் தோன்றி மனிதரானார்... வார்த்தை மனுவுருவாகி நம்மிடையே குடி கொண்டது..

இது ஒரு எல்லையற்ற அன்பு.. துவக்கமும் முடிவும் இல்லாத அன்பு.. பாவத்தில் வீழ்ந்து கிடந்த உலகத்தை மீட்க தானே மனிதனாகி உதித்த அன்பு…

இப்போது மாதாவின் அன்பை பார்ப்போம்..

“ எவன் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன ? நான் சந்தோசமா இருந்தா போதும் என் குடும்பம் நல்லா வாழ்ந்தா போதும் “ என்று நினைத்தார்களா ? இல்லை. இன்று நம்மில் பலரின் மன நிலை இப்படியே. தனக்காக மட்டும் வாழ்பவர்கள்தான் அதிகம் இந்த மண்ணில். சுய நலமான அன்பே அதிகம் இவ்வுலகில்..

ஆனால் நம் பரிசுத்த தாயார் மக்களைப்பற்றி கவலைப்பட்டார். பாவிகள் குறித்து வேதனைப்பட்டார். கடவுளுக்கு உண்டான மக்கள் குறைவதையும், சாத்தானின் மக்கள் அதிகரிப்பையும் குறித்து வேதனையும் கவலையையும் அடைந்தார். கடவுளுக்குன்டான மக்களை அதிகரிக்கும் முனைப்புடன் பலவித ஒறுத்தல்முயற்சிகள், தவங்கள் செய்து எப்போதும் ஜெபித்தில் வாழ்ந்து வந்தார். மூன்று வயதிலேயே தன் பெற்றோர்களால் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தாலும் தன் விலைமதிப்பில்லா கற்பையும் கடவுளுக்கு காணிக்கையாக அர்ப்பணிந்திருந்து நாள்தோறும் ஜெபத்திலும் தவத்திலும் வாழ்ந்து வந்தார்கள்...

“எப்போது மீட்பர் வருவார். இஸ்ராயேல் மக்களுக்கு எப்போது மீட்பு கிடைக்கும்.. கடவுள் திருவுளம் எப்போது நிறைவேறும் அந்த நாட்கள்தான் எப்போது...மக்களுக்கு தன் பாவங்களிலிருந்து விடுதலை எப்போது கிடைக்கும்.. அது கூடிய சீக்கிரம் கிடைக்க வேண்டும் மக்கள் மகிழ்ச்சியாக தூய்மையாக கடவுளின் பிள்ளைகளாக பாவமின்றி வாழ வேண்டும்..

அதற்காக நான் ஜெபிப்பேன்..தவமிருந்து ஜெபிப்பேன் அதற்காக நான் என்னையே தர வேண்டுமானாலும் தருவேன் என்று தன்னை பற்றி கவலை கொள்ளாமல்.மக்களை பற்றியே கவலை கொண்டார்.. அவரின் ஜெபத்தாலும், தவத்தாலும் அவள் தூய்மையாலும் குறிக்கப்பட்ட ஆண்டுகளுக்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே கடவுள் மீட்பை, மீட்பரை தந்து விட்டார். காரணம் நம் அன்னை தன்னையே கடவுளின் பரிகாரபீடமாகவும், பலிப்பொருளாகவும் மாற்றியதால் உலகத்தை மீட்க வேண்டிய பரிகாரப்பலிப் பொருளான இயேசு அந்த புனிதமிக்க மாமரி மூலமாக நமக்குக்கிடைக்க கடவுள் திருவுளம்பற்றினார்.

அன்னை மரியாள் இல்லை என்றால் மீட்பு இல்லை. கிறிஸ்தவம் இல்லை ஏன் கிறிஸ்துவே இல்லை..இது கொஞ்சம் மிகையாக தெரிந்தாலும் அதுதான் உண்மை. அதனால்தான் நாமெல்லாம் கடவுளுக்கு நன்றிகடன் பட்டவர்கள். கடவுள் மட்டும் அன்னை மரியம்மாளுக்கு நன்றி கடன்பட்டவர். இது மாதாவைத்தூற்றித் திரியும் பிரிவினைகளுக்கு எங்கே விளங்கப்போகிறது.

கடவுள் ஒரு பட்டணத்தை அழிக்கும் முன் இறைவாக்கினர் கடவுளிடம் நடத்திய பேரம் நினைவுக்கு வருகிறது..” 40 பேர், 20 பேர், 10 பேர், 5 பேர், எனக்குறைந்து இத்தனை நல்லவர்கள் இருந்தால் அழிக்காமல் விட்டுவிடுவீரா ‘ எனக்கேட்டும் நல்லவர்கள் இல்லாததால் பட்டணம் அழிக்கப்பட்டுவிடுகிறது...

நம் பரிசுத்த தேவதாய் மட்டும் இவ்வுலகில் பிறக்காதிருந்தால் இந்த உலகம் எப்போதோ கல்லறையாக மாறியிருக்கும்.

ஜெபம்: கடவுளின் மாபெரும் அன்பையும், அன்னையின் உன்னத அன்பையும் நினைத்துப்பார்க்கும் போது...நாங்கள் மனிதர்களிடமும், அல்லது பொருட்கள் அல்லது ஆசை, இச்சை இவைகளிடம் வைத்திருக்கும் அன்பு அல்லது முக்கியத்துவம் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது...தூசி, பதர் போன்றதாகிவிடுகிறது...

“தன்னைத்தானே நேசிப்பது போல பிறரையிம் நேசிப்பது“ என்ற உம்முடைய வார்த்தை எங்களுக்கு அவ்வளவு கடினமாக இருக்கிறது.. இறைவன் இயேசு நம் உள்ளத்தில் பிறக்கவேண்டுமென்றால், நம் கடினத்தன்மை இளகித்தான் ஆக வேண்டும்..பிறரை நேசித்துதான் ஆக வேண்டும்..ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.. அதற்குண்டான ஆற்றலை தர ஜெபிப்போம்.. “ 

அருள் நிறைந்த மரியே வாழ்க !