உத்தரிக்கும் ஸ்தலம் -4 :

புனித தந்தை பாத்ரே பியோவின் அனுபவங்கள்

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்கள் அடிக்கடி பாத்ரே பியோவை சந்திக்க வருவார்கள் என்பதை பல நிகழ்ச்சிகளில் அறிகிறோம். அவரது பூசைகளில் அவர்களுக்கு ஒரு மிக முக்கியமான பங்கு இருந்தது. தந்தை பியோவின் உதவியைக் கேட்கவும், இந்த அநித்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவருக்கு நன்றி செலுத்துவதற்காகவும் அவர்கள் அடிக்கடி அவரை சந்திக்க வந்தார்கள். 1922-ல் ஆயர் ஆல்பெர்ட்டோ கோஸ்டா என்பவர் அவரிடம், அவர் எப்போதாவது உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஓர் ஆன்மாவைப் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்ட போது :

“ அவர்களை எவ்வளவு அதிகமாக பார்த்திருக்கிறேன் என்றால், இப்போதெல்லாம் அவர்களைக் கண்டு நான் பயப்படுவதேயில்லை “ என்றார் பியோ.

தந்தை பிரான்செஸ்கோ நெப்போலிட்டானோ தரும் சாட்சியம் :

1945-ம் வருடம் சகோதரர் பியெத்ரோ என்பவர் தம் அறைக்குள் நுழைந்த போது அங்கே அவரது எழுது மேஜை மேல் ஓர் இளம் துறவி அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்தத் துறவி தியானத்தில் இருப்பவரைப் போல தலையை தொங்க போட்டபடி அமர்ந்திருந்தார். சகோதரர் பியேத்ரா அவரை அழைத்து அவர் யார் என்று கேட்டபோது, அவர் திடீரென மறைந்து விட்டார். அரண்டு போன சகோதரர் தந்தை பியோவிடம் தலைதெறிக்க ஓடினார். இருவரும் அவரது அறைக்குள் திரும்பி வந்து உள்ளே நுழைந்தவுடன், தந்தை பியோ, “ ஓ இவரா! இந்த இளம் துறவி இந்த அறையில் தம் உத்தரிக்கிற ஸ்தலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிற ஒரு பரிதாபத்திற்குரிய நவ துறவி. ஆனால் கவலைப்படாதீர்கள் இனி அவர் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார். நீங்களும் இனி அவரைக் பார்க்க மாட்டீர்கள் “ என்று சகோதரருக்கு ஆறுதல் கூறினார். இந்த முறை அந்த சகோதரரின் கண்களுக்கு அந்த இளம் துறவியின் ஆன்மா தெறியவில்லை.

தந்தை பிரான்செஸ்கோ நெப்போலிட்டானோ, பாத்ரே பியோவின் தந்தை க்ராஸியோவிடமிருந்து கேட்ட நிகழ்ச்சி ஒன்று :

1926-ம் ஆண்டு க்ராஸியோ தன் மகனோடு ஒரு சில நாட்கள் தங்கினார். அவருக்கு பத்தாம் அறை எண் ஒதுக்கப்பட்டது. அவர் அறைக்குள் நுழைய முயன்ற போது இரண்டு துறவிகள் கதவுக்கு முன்னால் நின்று அவர் உள்ளே செல்ல விடாமல் தடுத்தார்கள். அவர் தாம் யார் என்று அவர்களுக்கு சொல்லியும் பயன் இல்லை. அவர்களை தள்ளிக்கொண்டு உள்ளே போக முயன்ற போது அவர்கள் திடீரென மறைந்து விட்டார்கள்!. பயந்து போன அவர் மகனிடம் சென்று நடந்ததை கூற, தந்தை பியோ, “ அப்பா, பயப்படாதீர்கள். அவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள இரு பரிதாபத்திற்குரிய துறவிகள். அர்ச்.பிரான்சிஸின் சபை விதிக்கு கீழ்ப்படியாமல் இருந்த இடத்தில் அவர்கள் தங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தை அனுபவிக்கிறார்கள்.” என்றார் சர்வ சாதாரனமாக

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – நூல், கிடைக்குமிடம் மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி. புத்தக தொடர்புக்கு சகோ.பால்ராஜ் Ph: 9487609983, சகோ.ஜேசுராஜ் Ph: 9894398144

குறிப்பு : கீழ்ப்படியாமைக்கு தண்டனையை பார்த்தீர்களா…!!!! கீழ்ப்படிதல் எவ்வளவு இன்றியமையாதது என்று. தாழ்ச்சி உள்ள இடத்தில்தான் கீழ்ப்படிதலும் இருக்கும்..

நூல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள, மரியாதைக்குரிய அம்மா பாத்திமா மேரி, கோவை 9994649553;

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !