தந்தை பியோவும் காவல் சம்மனசுகளும் -2 :

தம் ஞானக்குழந்தைகள் தமக்கு செய்திகள் அனுப்ப விரும்பினால், அவர்களுடைய காவல் தூதரிடம் அச்செய்திகளைச் சொல்லி அனுப்பும்படி அவர்களிடம் கூறுவது அவருடைய வழக்கம். தம் சொந்த தூதரை மட்டுமின்றி , மற்றவர்களின் காவல் தூதர்களையும் காணவும், அவரோடு உரையாடவும் அவர் பேறு பெற்றிருந்தார். இனி பியோவின் வாழ்வில் காவல் தூதர்களோடு தொடர்புடைய சில சம்பவங்களைக் காண்போம்..

“ காவல் தூதர்கள் தந்திகளை விட வேகமானவர்கள் “

பார்ப்பரா வார்ட் என்பவள் கருப்பை நீர் கட்டிகளை அகற்றும் சிகிச்சைக்காக லண்டனிலுள்ள அர்ச்.ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அவள் கணவர் பெர்னார்ட்டோ இது பற்றி பாத்ரே பியோவுக்கு தந்தி அனுப்பச் சென்றார். மருத்துவமனைக்கு அவர் திரும்பி வந்தபோது வரவேற்பரையில் இருந்த ஊழியர் அவரை அழைத்து, பார்பராவுக்கு வந்திருந்த மலர்களையும், தந்தியையும் அவரிடம் தந்தார். 

தந்தியில்: “ உன் நோய் பற்றி அறிந்து வருந்துகிறேன். உனக்காக வேண்டிக்கொள்கிறேன் “ என்று இருந்தது..

மறு முறை பெர்னார்ர்டோ ரோட்டோண்டோவுக்கு வந்து பாத்ரே பியோவை சந்தித்தபோது, பார்பரா குணமாகி விட்டதைக் கூறி அவருக்கு நன்றி தெறிவித்தார். மேலும் தாம் தந்தியடித்து விட்டு திரும்பி வருவதற்குள் பதில் தந்தியும் மலர்களும் அனுப்ப அவரால் எப்படி முடிந்தது என்று கேட்டதற்கு, பியோ தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு,

“ தந்தியா ! காவல்தூதர்கள் அதைவிட வேகமானவர்கள், செலவும் கிடையாது “ என்றார்.

அடுத்த அனுபவம் :

“ அந்தக் காவல் தூதர்களையெல்லாம் நீங்கள் காணவில்லையா?“

பாத்ரே அலெஸியோ என்பவர் 1959 முதல் 1961 வரைலும் அதன் பின் 1965 முதல் 1968 வரையிலும் தந்தை பியோவின் உதவியாளராக இருந்தார்.

ஓரு நாள் மாலையில் பாத்ரே அலெஸியோ தந்தை பியோவிடம் வராந்தாவில் அமர்ந்திருந்தார். அவர் பியோவிடம் ஏதோ கேட்க முற்பட்டபோது, பியோ அவரைத் தடுத்து,

“ தம்பி, நான் வேலையாயிருப்பது உமக்குத் தெறியவில்லையா?” என்றார்.

அலெஸியோவுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரத்திற்குப் பிறகு பியோ அவரிடம்:

“ என் ஞானக் குழந்தைகளின் காவல் தூதர்கள் அவர்களுடைய செய்திகளோடு வந்து போய்க்கொண்டிருந்ததை நீங்கள் காணவில்லையா?” என்று சர்வ சாதாரணமாகக் கேட்டார்.

நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், கிடைக்குமிடம் மாதா அப்போஸ்தலர் சபை, தூத்துக்குடி. புத்தக தொடர்புக்கு மாதா அப்போஸ்தலர் சபை சகோ.பால்ராஜ் Ph: 9487609983, நண்பர் ஜேசுராஜ் Ph: 9894398144

சிந்தனை : காவல் தூதர்களைக் காணவேண்டுமானால் எந்த அளவுக்கு தூய்மை முக்கியம். அப்போ எந்த அளவுக்கு தூய்மையோடு தந்தை பியோ வாழ்ந்து வந்திருக்கிறார். ஆண்டவருடைய திருக்காயங்களை ஐம்பது ஆண்டுகளாக தன் உடம்பில் சுமந்தவராயிற்றே.. அவரிடம் தூய்மை இருக்காதா என்ன? அத்தகையை தூய்மையை நம் உள்ளத்திலும் பெற தந்தை பியோ வழியாக மன்றாடுவோம் - ஆமென்

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !