கர்த்தர் கற்பித்த ஜெபம் - விளக்கம்.

பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே : உமது சர்வ வியாபகத்தால் பரலோக பூலோகத்தை நிரப்புகிறவரே, எங்கும் நிறைந்திருக்கிறவரே, உமது மகிமையினால் அர்சிஷ்டவர்களிடத்திலும், உமது நீதியினால் நரகவாசிகளிடத்திலும் , உம்முடைய வரப்பிரசாதத்தினால் நல்லவர்களிடமும் , உமது சகிப்புத் தன்மையால் பாவிகளிடத்திலும் இருக்கிறீர் . நாங்கள் உம்மிடம் தங்கி இருந்து உம்மையே நினைக்கவும் , உம்முடைய உண்மையான மக்கள் வாழ வேண்டிய முறையில் நாங்கள் வாழவும் , நாங்கள் உம்மையே நோக்கி நாடவும் ,எங்கள் சத்துவத்தைஎல்லாம் கூட்டி உம்மையே நாங்கள் தேடவும் , எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும் . நீர் மனுக்குலத்தின் தந்தை . ஏனெனில் எல்லாவற்றையும் உருவாக்கிக் காப்பாற்றுகிறீர் . விசேஷமாய் எங்களை இரட்சித்தீர். பாவிகளுக்கு நீர் இரக்கமுள்ள தந்தை . நீதிமான்களின் நண்பரான தந்தை . மோட்சவாசிகளுக்கு மகிமையுள்ள தகப்பன்

உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக : " கர்த்தரின் நாமம் பரிசுத்தமும் பயங்கரமானதுமென்றார் தாவீது அரசர் . " பக்தி சுவாலகர் , ஞானாதிக்கர்களுடைய வாழ்த்துக்களினால் மோட்சம் முழங்குகிறது " என்றார் இசையாஸ் . பரிசுத்தரான மாட்சிமை நிறைந்த கர்த்தாவே , உம் குணாதிசயங்களை உலகெலாம் அறிய வேண்டும் . யூதர்கள் முதலிய பிற மதத்தினர் உம்மை அறிந்து ஆராதிக்க வேண்டும் . எல்லா மக்களும் உயிருள்ள விசுவாசத்தோடும் ,அசையாத நம்பிக்கையோடும் , கொழுந்து விட்டு எரியும் நேசத்தோடும்  எல்லாப் பொய்க் கோட்பாடுகளையும் எறிந்து விட்டு உமக்கு ஊழியம் செய்து உம்மை மகிமைப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்

உம்முடைய இராச்சியம் வருக : மரணத்திற்குப் பின் உம்முடைய அரசாளும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டும் வண்ணம் இப்போது உம் வரப்பிரசதத்தால் எங்கள் ஆன்மாவில் அரசாளும் . மோட்சத்தில் சம்மனசுக்கள் உமக்குக் கீழ்ப்படிவது போல உலகில் மனிதர்கள் யாவரும் உமக்கே கீழ்ப்படிந்து வருவார்களாக . மோட்ச ராஜ்ஜியம் எங்களுக்கு கிட்டும்படி கேட்கிறோம் . அச்சந்தோஷத்தையும் மகிமையையும் ஆசித்து வேண்டிக் கொள்ளுகிறோம் . மோட்ச அரசில் நாம் சேர வேண்டுமானாலும் , பிறரைச் சேரச் செய்ய வேண்டுமானாலும் முதன் முதலில் வரப்பிரசாதத்தினால் அந்த ராச்சியத்தை நாம் உள்ளத்தில் தாபிக்க வேண்டும்

உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக :
மனிதர்கள் இறைவனுடைய சித்தம் , தீர்மானம் நிறைவேறாமல் தடுத்துவிடுவார்கள் என்ற பயம் நமக்கில்லை. நாம் கேட்பது யாதெனில் " பிதாவே , நாங்கள் உமது சித்தத்தோடு ஒத்துழைக்கும் பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருளும். இவ்வுலகில் என்னிலோ, மற்றவர்களிடமோ என்னென்ன நடந்தேற நீர் சம்மதிக்கிரீரோ , அவைகளைஎல்லாம் நாங்கள் பொறுமையாய் ஏற்றுக் கொள்ள கிருபை செய்தருளும் " உம் கற்பனைகளினால் , ஏவுதலினால், சம்மதத்தினால் என்னென்ன நடைபெற நீர் ஆசிக்கிறீரோ , அவைகளெல்லாம் எங்களிலும் , எங்களாலும் , மேலும் நடைபெறக் கிருபை கூரும்.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும் : நம் ஆத்துமத்தின் ஜீவியத்திற்கோ , சரீரத்தின் ஜீவியத்திற்கோ தேவையான யாவற்றையும் கடவுளிடம் இருந்து கேட்க வேண்டும் . ஆண்டவரே , நாங்கள் தரித்திரர் , ஒன்றும் இல்லாதவர்கள் , ஒன்றுக்கும் ஆகாதவர்கள் , உம் பராமரிப்பு ஒன்றையே நாங்கள் நம்பி வாழ்கிறோம் . எங்களுக்கு இவ்வுலகில் வேண்டிய உணவையும் உறைவிடத்தையும் உடையையும் நாங்கள் கேட்கிறோம் . சுகமான வாழ்வையோ, விருந்து உணவையோ , கம்பீரமான உடையையோ கேட்கவில்லை . எங்களுக்குத் தேவையானதைக் கேட்கிறோம். உலகப் பொருட்கள் மேல் எங்களுக்குப் பற்றில்லை .அவைகளைச்  சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணமும் இல்லை . நாளையை நினையாத குழந்தைகளைப் போல இன்றைக்கு வேண்டிய உணவைக் கேட்கிறோம் . நாளைக்கு வேண்டியதை நீர் பார்த்துக் கொள்வீர். உம்முடைய உதவி ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் தேவை . நாள்தோறும் நாங்கள் உமது அடைக்கலத்தை நம்பி வாழ்வோம் . எனக்கு மாத்திரம் இவைகளைக் கேட்கவில்லை. எங்கள் உற்றார் , உறவினர்களுக்காகவும் , எங்கள் ஊராருக்காகவும் , எங்கள் நாட்டாருக்காகவும் கேட்கிறோம் . இக்காலம் அகதிகளின் நாள் . இக்காலத்தில் தவிக்கும் கோடிக்கணக்கான அகதிகளுக்கு உணவு , உடை , உறைவிடம் தந்தருளும் தேவ பிதாவே

எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் : 
பாவி, கடன்காரன். இறைவனுக்கு கடன் செலுத்த வேண்டியவன். நாம் கட்டிக்கொண்ட எல்லா பாவங்களுக்காகவும் மனஸ்தாபத்தோடு , தாழ்மையோடு , நம்பிக்கையோடு மன்னிப்பு கேட்க வேண்டும் . பிதாவே எங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களை உமக்காக நாங்கள் மன்னிக்கிறோம் . இரக்கமுள்ள பிதாவே , அன்புள்ள பிதாவே , நீரும் எங்கள் பாவங்களை மன்னிக்கத் தயை புரியும்

எங்களைச் சோதனையில் விழ விடாதேயும் : பிதாவே சோதனையை ஜெயிப்பதால் உம்மிடம் எங்களுக்குள்ள அன்பைக் காட்டுவோம் . சோதனையில்லாவிடில் நாங்கள் அகங்காரிகளாகி விடுவோம் . சோதனை வந்தால் அதை வெல்ல எங்களுக்கு உதவி செய்யும்

தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும் : பஞ்சம் படை கொள்ளை நோய்களினின்று எங்களைக் காப்பாற்றும் . சண்டைக்கு ஆயத்தமான இடி எங்கும் முழங்குகிறது . யுத்தம் வேண்டாம் ஆண்டவரே! பேய் எங்களுக்குத் தீமை ; எங்களுடைய சத்துரு . ஆண்டவரே எங்கள் அருகிலிருந்து அவனை ஓட்டியருளும்!

ஆமென்.