இன்றைய புனிதர் - ஜனவரி 21 - ரோம் நகர புனிதர் ஆக்னெஸ் ***


ரோம் நகர புனிதர் ஆக்னெஸ்

(St. Agnes of Rome)

கன்னி, மறைசாட்சி:

(Virgin and Martyr)

பிறப்பு: கி.பி. சுமார் 291

இறப்பு: கி.பி. சுமார் 304

ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள்

(Eastern Catholic Churches)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Churches)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglican Communion)

லூதரனியம்

(Lutheranism)

ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை

(Oriental Orthodox Churches)

முக்கிய திருத்தலங்கள்: 

"புனித ஆக்னெஸ் ஃபோரி லி முரா தேவாலயம்" மற்றும் "அகோன் என்னும் இடத்திலுள்ள புனித ஆக்னெஸ் தேவாலயம்" (இரண்டும் ரோம் நகரிலுள்ளன).

(Church of Sant'Agnese fuori le mura and the Church of Sant'Agnese in Agone, both in Rome)

நினைவுத் திருவிழா: ஜனவரி 21

சித்தரிக்கப்படும் வகை: 

செம்மறி குட்டி, மறைசாட்சியின் உள்ளங்கை

(A Lamb, Martyr's Palm)

பாதுகாவல்: 

கற்பு/ தூய்மை (Chastity); திருமண ஒப்பந்தமானோர் (Betrothed couples); தானியங்கள் (Crops); தோட்டக்காரர்கள் (Gardeners); சிறுமிகள் (Girls); பெண் வழிகாட்டிகள் (Girl Guides); மரியன்னையின் குழந்தைகள் (Children of Mary); கன்னியர் (Virgins); நியூ யார்க் (New York); ஃப்ரெஸ்னோ நகரம் (The City of Fresno); ரோம் நகரிலுள்ள 'கொலேஜியோ கேப்ரனிகா' (Colegio Capranica of Rome); பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர் (Rape Victims); "ரோக்வில் சென்டர்" மறை மாவட்டம் (The Diocese of Rockville Centre)

புனிதர் ஆக்னெஸ், கிறிஸ்தவ விசுவாசத்துக்காக கொல்லப்பட்ட ஒரு மறைசாட்சியும், கன்னியும் ஆவார். இவர் அனைத்து கிறிஸ்தவப் பிரிவுகளிலும் புனிதராகப் போற்றப்படுகிறார். திருப்பலியில், அர்ச்சிஷ்ட மரியன்னையுடன் இணைந்து பெயர் குறிப்பிடப்பட்டு போற்றப்படும் ஏழு பெண் புனிதர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.

தொடக்க காலம்:

பழங்கால கிறிஸ்தவ மரபுகளின்படி, ரோம் நகரில் உயர்குல குடும்பத்தில் ஏறக்குறைய கி. பி. 291ம் ஆண்டு ஆக்னெஸ் பிறந்தார். ஆக்னெஸ் என்ற இலத்தீன் வார்த்தைக்கு செம்மறி குட்டி என்று பொருள். சிறு வயது முதலே இயேசுவின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். எனவே, 12 வயதிலேயே தனது கன்னிமையை இயேசுவுக்கு அர்ப்பணித்தார்.

இவர் அழகான தோற்றம் கொண்டவராக இருந்ததால் உயர்குல இளைஞர்கள் பலர் இவரை மணம் முடிக்க போட்டி போட்டுக்கொண்டு சென்றனர். ஆனால் இவரோ அவர்களிடம், “விண்ணக மணவாளர் இயேசு கிறிஸ்துவுக்கு எனது கன்னிமையைக் கையளித்து விட்டேன்” என்று கூறினார். இதனால் அந்த இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கற்புடைமை:

“டயோக்ளேசியன்” (Diocletian) ரோம பேரரசனாக (Roman Emperor) இருந்த அக்காலத்தில், கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றிய மக்கள் ரோமானியர்களால் வதைத்துக் கொலை செய்யப்பட்டனர். ஆக்னெசைத் திருமணம் செய்ய முடியாமல் ஏமாந்த ஒருவன், கோபத்தில் இவர் கிறிஸ்தவர் என்பதை ரோம அதிகாரி (Prefect) “செம்ப்ரோனியஸ்” (Sempronius) என்பவனிடம் போய்க் கூறினான்.

தொடக்கத்தில் அதிகாரி இவரது மனதை மாற்ற முயற்சி செய்தான். ரோம தெய்வங்களுக்கு தூபம் காட்டினால் இவரை விட்டு விடுவதாகக் கூறினான். அது பலன் அளிக்காததால், கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தும் ஆயுதங்களை இவர்முன் கொண்டுவந்து காட்டி, மிரட்டினார்கள். இவரோ எதைக் கண்டும் அஞ்சவில்லை. இதனால் ஆக்னெசை நிர்வாணமாக தெருக்களில் இழுத்துச் சென்று விலைமாதர் இல்லத்தில் ஒப்படைக்குமாறும், யாரும் இவரை கறைபடுத்தலாம் என்றும் அதிகாரி அறிவித்தான்.

காமுகர்கள் பலரும் அவ்விடத்திற்கு சென்று இவரை நெருங்க முடியாமல் போனது. காமுகர்கள் இவரைத் தொட நெருங்கியபோதெல்லாம், “உன் வாளில் என் இரத்தக் கறை படிந்தாலும், இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணமான என் உடலை உன்னால் கறைபடுத்த இயலாது” என்று ஆக்னஸ் கூறினார்.

வெவ்வேறு சரித்திர ஆசிரியர்களின்படி, ஆக்னெஸ் இப்படியான இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து வெவ்வேறு விதமாக தப்பினார் என்கிறார்கள். இவரை பாலியல் வன்கொடுமை செய்ய சென்ற அனைவரும் மின்னல் போன்ற ஒரு ஒளி ஒன்றினால் கண்கள் குருடாகினர். இவர் அவர்கள்மேல் இரக்கம் காட்டி அவர்களுக்காக செபம் செய்தார். அப்பொழுது அவர்கள் பார்வை பெற்று மனம் மாறினார்கள் என்பர். ஒருமுறை, இவரது கூந்தலே வளர்ந்து இவரது உடலை மறைத்தது என்பர். ரோம அதிகாரி செம்ப்ரோனியஸின் மகன்கூட சென்று முயற்சித்தான். ஆனால் அவன் இறந்தே போனான். ஆக்னெஸ் அவனுக்காக செபித்தார். அதனால் அவன் உயிருடன் எழுந்து மனம் மாறினான்.

மறைசாட்சி:

இயேசுவின் மேல் கொண்ட அன்பாலும், இறுதி வரை ரோமத் தெய்வங்களை வணங்காத காரணத்தாலும் ரோம அதிகாரி இவருக்கு மரண தண்டனை விதித்தான். இவர் விறகுக் கட்டைகளின்மேல் கட்டப்பட்டு தீ வைக்கப்பட்டார். ஆனால், விறகுக் கட்டைகள் எரிய மறுத்தன. உடனே ஆத்திரமுற்ற அங்கிருந்த படைத் தலைவன், தமது வாளை உருவி அவரது தலையை வெட்டினான். இன்னுமொரு சரித்திரவியலாளரின் கூற்றின்படி, படைத்தலைவன் அவரது தொண்டையில் வாளை குத்திச் செருகியதாகவும் அதனால் பதின்மூன்றே வயதான ஆக்னெஸ் மறைசாட்சியாக மரித்ததாகவும் கூறப்படுகிறது.

புனிதர் ஆக்னேஸின் மன உறுதி, கன்னித்தன்மை, இளம் வயதில் தூய்மை வலியுறுத்தல், பழம்பெரும் அம்சங்களற்ற பாரம்பரியம் மற்றும் மரணம் பற்றி புனிதர் அம்புரோஸ் (Saint Ambrose) பின்னாளில் தமது எழுத்துக்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் மரித்த சில நாட்களின் பின்னர், இவரது கல்லறையில் செபித்தவாறிருந்த இவரது வளர்ப்பு சகோதரியான (இவரது “பாலூட்டும் தாதிப் பெண்ணின்” (Wet nurse) மகள்) புனிதர் “எமெரென்ஷியானா” (Saint Emerentiana), அங்கிருந்து அகல மறுத்த காரணத்தால், கல்லெறிந்து கொல்லப்பட்டார். பின்னாளில் இவர் புனிதராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.

கிறிஸ்தவ சமயத்திற்கு சுதந்திரம் அளித்த ரோமப் பேரரசன் “முதலாம் கான்ஸ்டன்டைன்” (Constantine I) என்பவரது மகளான "புனிதர் கான்ஸ்டன்ஸ்" (Saint Constance) என்பவர் புனித ஆக்னெசின் கல்லறையில் செபித்ததால் தொழுநோயில் இருந்து குணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இவரது கல்லறையில் செபித்த பலருக்கும் இறைவன் அற்புதங்கள் பல செய்ததால், அக்காலம் முதலே இவர் புனிதராக வணங்கப்படுகிறார்.