பாத்திமா காட்சிகள் - பிரான்சிஸ்

ஒரு சாதாரணச் சிறுவன்தான். ஆயினும் சில தனியான, குறிப்பிடக்கூடிய குணங்கள் அவனிடம் இருந்தன. "நம் ஆண்டவரின் விளக்கைப் போல் அழகுள்ளது எதுவுமே இல்லை' என்று வியப்புடன் கூறுவான். சூரிய உதயமும், மாலையில் அது மறையும் காட்சியும் அவனை மிகவும் கவர்ந்தன. புல்நுனியில் ஒளிரும் பனித்துளியும், குளத்து நீரில் பிரதிபலித்த சூரிய ஒளியும் அவனை மிகவும் மகிழ்வித்தன.

லூஸியா ஆடுகளை ஓட்டிக் கொண்டு மாலையில் வீடு வந்ததும், ஜஸிந்தா அவளுடன் சேர்ந்து இருவருமாக ஆடுகளைப் பட்டியில் அடைப்பார்கள். பிரான்சிஸ் தன் ஊதுகுழலை எடுத்து ஒரு கல்லில் உட்கார்ந்து இராகங்களை ஒலித்துக் கொண்டேயிருப் பான். அந்தக் குழல் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

அமைதியான சுபாவம் உடையவன் அவன். எந்த ஒரு பொருளின் மீதும், அது எவ்வளவு பிடித்தமாயிருந்தாலும், அதை இழந்து போவதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான். விளையாட்டில் அவன் ஜெயித்த பொருட்களை மற்றச் சிறுவர்கள் பிடுங்கிக் கொண்டால், "ம்! எனக்கு அது ஒரு பொருட்டென்று நினைக்கிறாயோ? அதை நீயே வைத்துக் கொள்!'' என்று அலட்சியமாகக் கூறி விடுவான்.

ஒரு நாள் அவனுக்கு ஒரு கைக்குட்டை கிடைத்தது. அது மிக அழகானது. தேவதாயின் உருவம் பல வண்ணங்களில் அதில் தைக்கப்பட்டிருந்தது. பெருமையுடன் அதை எடுத்துக்கொண்டு, லூஸியா வீட்டிற்குச் சென்றான். அங்கு பல சிறுவர் சிறுமிகள் கூடி நின்றனர். ஒவ்வொருவராக அதை வாங்கிப் பார்த்தனர். நல்ல கைக்குட்டை என்று எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போதே அது மாயமாய் மறைந்து விட்டது! 

முடிவில் கைக்குட்டை யாருடைய பையில் உள்ளது என்று தேட ஆரம்பித்தார்கள். ஒரு சிறுவனுடைய பையில் அது அகப்பட்டது. அந்தச் சிறுவன் அது தன்னுடைய கைக்குட்டைதான் என்று கூறவும் துணிந்து விட்டான். அவனிடமிருந்து அதைப் பிடுங்கிக்கொள்ள பிரான்சிஸால் முடியும். ஆயினும் அவன், "அப்படியானால் வைத்துக் கொள். ஒரு கைக்குட்டை எனக்கு அவ்வளவு பெரிதா?" என்று கேட்டு விட்டு சும்மா இருந்து விட்டான்.

ஒரு நாள் ஜஸிந்தா மிகுந்த மகிழ்ச்சியோடு லூஸியாவைத் தேடி ஓடினாள். பிரான்சிஸ் மெதுவாக அவள் பின்னே சென்றான். ""உனக்குத் தெரியுமா? நாங்கள் ஆடுகளை மேய்க்க எங்கள் அம்மா சம்மதித்து விட்டார்கள்" என்று கூறினாள் ஜஸிந்தா.

அன்று முதல் மூன்று குழந்தைகளும் ஆனந்தமாகத் தங்கள் ஆடுகளை மேய்த்து வந்தார்கள். லூஸியா முந்திப் புறப்பட்டால், ஆடுகள் தண்ணீர் குடிக்கும் குளத்தருகே தன் நண்பர்களுக்காகக் காத்திருப்பாள். இவர்கள் முந்தி விட்டால் அதே இடத்தில் அவளுக்காகக் காத்திருப்பார்கள். மூவரும் சேர்ந்ததும், மொத்தம் ஏறக்குறைய இருபத்தைந்து ஆடுகளையும் ஓட்டிக் கொண்டு, தங்களுக்கு விருப்பமான இடத்துக்குச் செல்வார்கள்.

ஆடுகளின் நடுவில் நடப்பாள் ஜஸிந்தா. சில சமயம் மிகச் சிறிய ஆட்டுக்குட்டி ஒன்றைத் தோளில் வளைத்துப் போட்டுக் கொள்வாள்.

“ஜஸிந்தா, ஏன் இப்படி?” என்று கேட்டால்,

"நம் ஆண்டவர் செய்தது போல் செய்கிறேன்” என்பாள். யாரோ ஒருவர் நல்ல ஆயன் படம் ஒன்றை ஜஸிந்தாவுக்குக் கொடுத் திருந்தார். அதில் ஆண்டவர் ஆட்டைத் தோளில் போட்டிருந்த பாவனையைப் போல், தானும் அவ்வாறு செய்வதாகக் கூறினாள். ஆனால் ஆடுகள் மேயத் தொடங்கி விட்டால், எல்லா வகையான விளையாட்டுக்களையும் விளையாட அவள் தயாராகி விடுவாள்.

சிறுவர் மூவரும் சில நாட்கள் கோவா தா ஈரியாவில் ஆடுகளை மேய்ப்பார்கள். சில நாட்களில் வாலினோஸ் என்னுமிடத் திற்குச் செல்வார்கள். அவர்கள் மிக விரும்பிய இடம் கபேசோ என்ற கற்பாறை நிறைந்த நிலப்பரப்புதான். அது உயரமான இடம். அங்கிருந்து பார்த்தால் அழகிய தூரக் காட்சிகள் தெரியும்.

கபேசோவில் இன்னொரு கவர்ச்சியும் அவர்களுக்கு இருந்தது. கபேசோ குன்றுகளில் எதிரொலி கேட்கும். குழந்தைகள் மூவரும் இந்த எதிரொலியைக் கண்டுபிடித்தபின் நெடுநேரம் வரை சத்தமிட்டு, தங்கள் குரல் எதிரொலிப்பதைக் கேட்டு மகிழ்வார்கள். "மரியே" என்ற சொல் எதிரொலிப்பதைக் கேட்க ஜஸிந்தாவுக்கு மிகவும் விருப்பம். 

சில சமயங்களில் "அருள் - நிறைந்த - மரியாயே - வாழ்க" என்று மங்கள வார்த்தையைத் திருப்பித் திருப்பிச் சொல்வாள். எதிரொலியும் அதே போல் பேசுவதைக் கேட்டு மூவருமே மகிழ்வால் துள்ளுவார்கள். சில வேளைகளில் மூவரும் சேர்ந்து அதே மங்கள வார்த்தையை உரத்துச் சொல்வார்கள். "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே...'' ஒவ்வொரு வார்த்தையும் எதிரொலித்து வரும்போது அவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி கொள்வார்கள்.

பாட்டுக்கு அபிநயம் பிடிப்பதிலும் சிறுமிகளுக்கு மிகுந்த விருப்பம் உண்டு. ஜஸிந்தாவுக்கு அதில் அலாதி பிரியம். பிரான்சிஸ் தனது ஊதுகுழலில் இராகங்களை இசைப்பான். மற்ற இருவரும் அபிநயம் பிடிப்பார்கள்.

பகல் உணவை முடித்ததும் மூவரும் எந்த இடத்திலானாலும் சரி, முழங்காலிலிருந்து ஜெபமாலை சொல்வது வழக்கம். லூஸியா வின் தாய் மரிய ரோஸா இதை ஞாபகப்படுத்தி விடுவாள். ஆனால் சிறு பிள்ளைகளுக்குரிய விளையாட்டுப் புத்தியினால் இந்த ஜெப மாலையில் தேவ இரகசியங்களைத் தியானிப்பது மங்கி மறைந்து வந்தது. 

மேலும், பரலோக மந்திரத்தை, "பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே" என்பதுடன் முடித்து விடுவார்கள். அருள் நிறை மந்திரமும், "அருள் நிறைந்த மரியாயே" என்பதுடன் முடிவுக்கு வந்து விடும். பறவைகளைப் போல் சுதந்திரமாய், கடவுளைத் தந்தையாகக் கொண்டு, அவரின் கைவேலையாகிய அமைதி நிலவிய அக்காட்டுப் புறத்தில் எவ்வித கவலையுமின்றி ஆடுகளை மேய்த்துக் கொண்டும், ஆடிப் பாடிக் கொண்டும், களங்கமில்லா உள்ளங்கள் இம்மூன்றும் அன்பால் பிணைக்கப்பட்டு ஆனந்தமாய் உலவின ! 

1915-ம் ஆண்டு முடிந்து 1916-ம் ஆண்டு வரும், அது தங்களிடம் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று சற்றும் நினையாது அமைதியில் நீந்தி விளையாடினர் அன்புக் குழந்தைகள் மூவரும்.

தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.