பாலன் இயேசு சுவாயை தரிசிக்க பாவசங்கீர்த்தனம் செய்து நம்மை நாம் தயாரிப்போம்!

பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார். 
- அருளப்பர் ( யோவான்) 20 : 21-22

முதலில் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து பார்த்து நம்மை நாமே கேட்க வேண்டிய கேள்வி, ''நான் பாவசங்கீர்த்தம் செய்து எத்தனை வாரங்கள், மாதங்கள், வருடங்கள் ஆகிறது ?''

பாவசங்கீர்த்தனம் என்னும் தேவ திரவிய அனுமானம் கடவுளின் இரக்கத்தால் கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்ட கொடை.

எப்போதெல்லாம் நாம் பாவம் செய்து கடவுளை நோகடித்து அவரை விட்டு விலகுகின்றோமோ அப்போதெல்லாம் நம்மை மீண்டும் அவரோடு இனைக்க கடவுளால் கொடுக்கப்பட்ட அருட்சாதனம்..

சுருக்கமாக சொன்னால் கடவுளை விட்டு விலகி நாம் ஓடிய போதெல்லாம்.. நம்மை மீண்டும் அவரோடு இனைத்துக்கட்டும் கயிறு..

கத்தோலிக்க திருச்சபைக்கு மிகவும் இன்றியமையாதது.. பாவசங்கீர்த்தனம்.. கத்தோலிக்க திருச்சபையில் மட்டுமே கிடைக்கக்கூடியது பாவசங்கீர்த்தனம்..

ஆகையால் திருவருகைக் காலத்தில் இருக்கும் நாம் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து பாலன் இயேசு நம் உள்ளத்தில், ஆன்மாவில் பிறக்க நம்மை தயாரிக்க வேண்டும்..

பொதுவாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களான நாம் எப்படி பாவசங்கீர்த்தனம் செய்கிறோம்..

1.   பெரும்பாலும் கடமைக்காக செய்வது..

2.   நான் ஒரு பெரிய பாவியில்லை என்பதுபோல் வழக்கமாக சொல்லும் ஒரு நாலைந்து பாவங்களை மட்டும் மனஸ்தாபம் (வருத்தம்) இல்லாத மனநிலையில் சொல்லுவது..

3.   நம் ஆன்மாவிற்குள் இருக்கும் மோசமான பாவங்களை மறைப்பது ( சிலர் செய்வார்கள் எல்லாரும் அல்ல)

4.   அந்த பாதரிடம் செல்லலாமா? இந்த பாதரிடம் செல்லலாமா? அவர் அதைச்சொன்னால் நம்மை பற்றி எதுவும் தவறாக நினைப்பாரோ? ( பாவசங்கீர்த்தன தொட்டியில் இருப்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது அவர் எந்த பாதராக இருந்தாலும் ) அதே போல்  நம் விருப்பம் போல் வயதான பாதரிடம் சென்று கூட பாவசங்கீர்த்தனம் செய்யலாம். ஆனால் மனஸ்தாப உள்ளத்தோடு ஒரு பாவத்தையும் விடாமல் சொல்ல வேண்டும்.

5.   இந்த பாவத்தை மறைத்துக்கொள்வோம். அதை இந்த பாவங்களுக்காகவும் மறந்து போன பாவங்களுக்கான லிஸ்டில் சேர்த்துக் கொள்வோம்.. என்று விடுவதும் ஒரு பாவமே…

6.   அவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார் என்று மோசமான பாவங்களை அல்லது பெரிய பாவங்களை மறைத்தால் அந்த பாவங்கள் மன்னிகப்படாது ( யாராவது வயிற்றில் இருக்கும் போதே கருக்கலைப்பு செய்திருந்தால் அதற்காக கண்டிப்பாக பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் சம்பந்தப்பட்ட கணவனும், மனைவியும் அதற்கு தூண்டுதலாக இருந்த வீட்டில் இருக்கும் பெரியவர்களும்)

7.   நான் ரொம்ப நல்லவன்.. நானெல்லாம் பெரிய பாவி இல்லை என்று நினைப்பவர்களுக்கு “ நீங்கள் பேசிய ஒவ்வொரு பயனற்ற வார்த்தைக்கும் கணக்கு கொடுக்க வேண்டும் “ என்ற நம் ஆண்டவரின் வார்த்தை நினைவில் வர வேண்டும்..

நாங்கள் ஆண்டவரிடமே நேரிடையாக பாவசங்கீர்த்தனம் செய்துகொள்வோம் என்று நினைப்பவர்கள் இருப்பவர்கள் மிகவும் ஆபத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்..

நம் ஆண்டவர், ஆண்டவரிடம் நேரிடையாக பாவம் செய்யும் பழைய ஏற்பாட்டு சட்டத்தை மாற்றி பெரிய வியாழனில் குருத்துவத்தை ஏற்படுத்தி, பெரிய வெள்ளியில் முதல் திருப்பலியை சிலுவையில் நிறைவேற்றி தான் உயிர்த்த பின்பு தன் சீடர்களுக்கு அதாவது தான் ஏற்படுத்திய முதல் குருக்களுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கொடுத்த பின்பு நான் அதை மதிக்கமாட்டேன் என்பவர்கள் பின் வரும் லிஸ்டில் உள்ளவர்கள்.

1.   திமிர் பிடித்தவர்கள்.

2.   ஆண்டவரின் வார்த்தையை மதிக்காதவர்கள்.

3.   ஆண்டவருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாதவர்கள்.

என்று அர்த்தம்..

ஆண்டவர் ஒரு சட்டத்தை மாற்றியபின் பழைய சட்டத்தை கையில் வைத்திருப்பவர்கள் பழைய 500 ரூபாய் நோட்டை வைத்திருப்பவர்களுக்கு சமம்.. அது செல்லாது…

“நாங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டோம் நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்களா? “

என்று கேட்போர்கள்.. அல்லது அவர்கள் பின்னால் ஓடுபவர்கள் கவனத்திற்கு,

“நம்மிடம் பாவமில்லை என்போமானால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கிறோம்; உண்மை என்பது நம்மிடம் இல்லை.

மாறாக, நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோமானால், அவர் நம்பிக்கைக்குரியவர், நீதியுள்ளவர் என விளங்குவார். நம் பாவங்களை மன்னிப்பார்; எல்லா அநீதியினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்.

நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், அவரைப் பொய்யராக்குகிறோம். அவரது வார்த்தை நம்முள் இல்லை.
-1அருளப்பர் 1 : 8-10 ( 1 யோவான் 1 : 8-10)

கத்தோலிக்கர்களாகிய நாம் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும்.. நாம் பாவம் செய்யவில்லை என்றால் கடவுளையே பொய்யராக்குகிறோம் என்று சொல்லிவிட்டார் நம் அருளப்பர்...

எப்பேற்பட்ட போதகராக இருந்தாலும் பாவசங்கீர்த்தனமின்றி மரித்தால் அவரின் நிலை வேதனைக்குறியது..

கத்தோலிக்கர்களான நாம் எப்போதுமே அலர்ட்டாக இருக்க வேண்டும்..

ஜெபம் :

திவ்ய திருப்பாலன் இயேசுவே! திருவருகைக் காலத்தில் உம் வருகையை (இரண்டாம் வருகையையும் சேர்த்து) எதிர்பார்த்து இருக்கும் நாங்கள் எங்கள் பாவங்களுக்காக உண்மையான மனஸ்தாபப்பட்டு எங்களையே தாழ்த்தி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து உம்மை எங்கள் உள்ளத்தில் தாங்க.. வரவேற்க எங்களுக்கு வரம் தாரும்- ஆமென்

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !