திருச்சபைக் கட்டளைகள் - விளக்கம்

1. ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுப் பூசை காண்கிறது. 

2. வருஷத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது. 

3. பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து தேவ நற்கருணை உட்கொள்கிறது. 

4. வெள்ளிக்கிழமை முதலிய சுத்தபோசன நாட்களில் சுத்த போசனமும், ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது. 

5. விலக்கப்பட்ட காலத்திலும் குறைந்த வயதிலும் விக்கினமுள்ள உறவு முறையாரோடும் கலியாணஞ் செய்யாதிருக்கிறது. 

6. நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.

முதல் கட்டளை

ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் சரியான முகாந்தரம் இல்லாமல் பூசை காணாமல் தவறிப் போகிறது சாவான பாவமாகும்.

நம் இந்திய நாட்டில் வழங்கும் கடன் திருநாட்கள்: 

1. சேசுநாதர் பிறந்த திருநாள், 

2. தேவ மாதா பரலோகத்திற்கு ஆரோபணமான திருநாள் 

3. தேவ நற்கருணைத் திருநாள் ஆகிய மூன்றுமாகும்.

இரண்டாம், மூன்றாம் கட்டளைகள்

வருடத்திற்கு ஒரு முறையாவது புத்தி விபரம் தெரிந்த சகல கிறீஸ்தவர்களும் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, பாஸ்கு காலத்தில் தேவ நற்கருணை வாங்க வேண்டுமென்று இக்கட்டளைகள் கண்டிப்பாய்க் கற்பிக்கின்றன.

(மாதத்திற்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்வது ஆத்துமம் மேன்மேலும் பரிசுத்தமடைய உதவுகிறது; புண்ணியப் பலனைப் பெற்றுத் தருகிறது.

நான்காம் கட்டளை

சுத்தபோசனக் கடனை அனுசரிப்பதற்கு முந்தின இரவு நடுச்சாமம் துவக்கி, குறிக்கப்பட்ட நாளின் நடுச்சாமம் வரை மாம்ச உணவுகளை சாப்பிடாமலிருக்க வேண்டும். (மீன், முட்டை ஆகியவை மாமிசம் கிடையாது.) 

14 வயது பூர்த்தியானது முதல் சுத்தபோசனக் கடன் துவங்கும்.

ஒரு வேளை மட்டும் முழுப் போஜனம் சாப்பிடுவது ஒருசந்தி பிடிப்பதாகும். காலையில் சொற்ப ஆகாரமும், மாலையில் சிற்றுணவும் உண்ணலாம். 

21 வயது முதற்கொண்டு 60 வயது வரையில் ஒருசந்தி அனுசரிக்க வேண்டிய காலமாகும்.

ஐந்தாம் கட்டளை 

ஒரு கலியாணத்திற்கு விக்கினம் உண்டு என்று அறிந்த கிறீஸ்தவர்கள் யாவரும் பங்கு சுவாமியாரிடம் அதை வெளிப்படுத்தக் கடமைப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.

ஆறாம் கட்டளை

1. நமது ஞான மேய்ப்பர்களுக்கும், கோவிலுக்கும் நாம் செய்ய வேண்டிய உதவிகள்: அந்தந்தப் பங்கு விசாரணையில் ஆயருடைய அனுமதி அல்லது கட்டளைப்படி கற்பிக்கப்பட்ட சந்திப்பு கோயில் வரி, குடும்ப மற்றும் தனி நபர் வரி முதலியவைகளையாவது செலுத்த வேண்டும். 

2. நமது ஞான மேய்ப்பர்களுடைய தர்மக் காரியங்கள் அனுகூலம் பெறும்படி செல்வாக்குள்ள பேச்சினாலும், மாதிரிகையாலும், ஜெபத்தாலும் நாம் உதவி செய்ய வேண்டியது.