உத்தரியம் - பாகம் 02 - நாம் ஏன் உத்தரியம் அணிய வேண்டும்?

உத்தரியம் - அன்னையின் இரக்கத்தின் ஆடை

உத்தரியம் அணிந்துள்ள ஒவ்வொருவரும் புனித சைமன் ஸ்டாக் பற்றிகண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அணிந்துள்ள உத்தரியத்தில் காணப்படும் படத்தில் இருந்து (தேவதாயுடன் காணப்படுபவர்) நீங்கள் ஏற்கனவே அவரை அறிந்திருக்கலாம். தேவதாயாரின் மிகவும் பிரியமான, மறக்க முடியாத நண்பர்களில் ஒருவர் புனித சைமன் ஸ்டாக். 

இவருக்குத் தான் நமது தேவதாயார் கி.பி. 1251 ஆம் ஆண்டில் அதி முக்கியத்துவம் வாய்ந்த உத்தரிய வாக்குறுதியினை அளித்தார்கள். அதன்படி, “இந்த உத்தரியத்தினை அணிந்து இறப்பினை எதிர்கொள்ளும் எவரும் நித்திய நெருப்பினுள் (நரகத்தில்) வேதனைப்பட மாட்டார்கள்.” என உறுதி அளித்தார்கள்.

நம்முடைய காலக்கட்டத்தின், மனித அறிவுக்குப் புலப்படாத பரம இரகசியங்களில் ஒன்றும், மிகச் சிறந்ததுமான பரிசுத்த கன்னி மாமரியின் இந்த பரலோக வாக்குறுதியினை பெரும்பாலான கத்தோலிக்கர்கள் முற்றிலும் புறக்கணித்தோ, ஏற்றுக்கொள்ளாமலோ அல்லது முழுவதும் மறந்தே போய் விட்டனர் என்றே கூறவேண்டும். 

பரிசுத்த கன்னி மாமரி மேலும்,  “உத்தரியத்தினை பக்தியுடனும், விடாமுயற்சியுடனும் எப்பொழுதும் அணிந்திருங்கள். இது என்னுடைய இரக்கத்தின் ஆடை. இதனை நீங்கள் அணிந்திருப்பதன் பொருள் என்னவெனில், நீங்கள் எப்பொழுதும் என்னை குறித்து சிந்திக்கின்றீர்கள். அதக்குப் பதிலாக, நானும் உங்களையே நினைத்துக்கொண்டு, உங்களுக்கான நித்திய வாழ்வினை உறுதி செய்ய உழைத்துக்குக் கொண்டிருக்கின்றேன்.” என மொழிந்தார்கள்.

புகழ் பெற்ற சேசு சபையினைச் சேர்ந்த, புனித மார்க்ரீத் மாரியம்மாளின் ஆன்ம குருவானவருமான புனித கிளாட் தே கொலம்பியர் மிக முக்கியமான கருத்தொன்றினை அனைவருக்கும் தெளிவுபடுத்துகின்றார். அவர்,” பரிசுத்த கன்னித் தாயாரிடம் நாம் கொண்டுள்ள அன்பினை வெளிப்படுத்தும் பக்தி முயற்சிகள் ஏராளமாய் உள்ளன. அவையனைத்தும் தேவதாயாரை ஒரேவிதமாக மகிழ்ச்சிப்படுத்துவதில்லை. அதனால் அந்த பக்தி முயற்சிகள் ஒவ்வொன்றும் நமது நித்திய வாழ்வினை நோக்கிய பயணத்தில் நமக்கு ஒவ்வொரு விதமாக உதவுகின்றன. ஆனால் பழுப்பு உத்தரிய பக்தி முயற்சியானது அனைத்திலும் மேலானதுஎன ஒரு கணமும் தாமதிக்காமல் என்னால் கூறமுடியும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர்,” எண்ணிலடங்கா அற்புதங்களின் வாயிலாக உறுதி செய்யப்பட்ட உத்தரியத்தினைப் போன்று வேறு எந்த பக்தி முயற்சியும் இல்லை” என்று பதிவு செய்கின்றார்.