நரகம்!

கத்தோலிக்கத் திருச்சபை நான்கு இறுதிக் காரியங்களை அடிக்கடி தியானிக்கும்படி நம்மை எப்போதும் அழைக்கிறது. அவை: மரணம், தீர்வை, மோட்சம், நரகம் ஆகியவை. ஆனால் நாமோ, ஆன்ம வாழ்வை மறந்து உலக வழியில் பணம், பதவி, அதிகாரம் என்னும் உலகக் குறிக்கோள்களுடன் வாழவே விரும்புகிறோம். இதனால் உலகில் எல்லாப் பாவங்களையும் எளிதாகக் கட்டிக்கொள்ளும் ஆபத்தில் நாம் எப்போதும் இருக்கிறோம்.

பாவத்திற்குத் தண்டனையான நித்திய நரகத்திலிருந்து நம்மைக் காப்பாற்றி, நம்மை மோட்சத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவே நமதாண்டவராகிய சேசுகிறீஸ்துநாதர் உலகிற்கு வந்தார். எனவே மோட்சம் செல்ல வேண்டும் என்னும் ஆசை நம்மில் இருக்க வேண்டும். அதுவே நமது நிரந்தர வாசஸ்தலம், அதுவே நம் நித்தியப் பேரின்பம். அதை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்லவே கத்தோலிக்கத் திருச்சபையை ஆண்டவர் ஏற்படுத்தினார்.

எனவே நரகத்தைப் பற்றி ஆழ்ந்து தியானிக்கவும், மோட்சத்தை ஏக்கத்தோடு தேடவும், அர்ச். அவிலா தெரேசம்மாள் கூறியபடி, இறுதி வரை தேவசிநேகத்துடனும், தெய்வ பயத்துடனும் வாழவும் ஆன்மாக்களைத் தூண்டும் நோக்கத்தோடு இந்த ஜனவரி - பிப்ரவரி மாதா பரிகார மலர் நரகத்தைப் பற்றிய ஒரு முழுமையான கட்டுரையாக வெளியிடப்படுகிறது.

இதை வாசித்து தியானிக்கிறவர்கள் இந்தப் பத்திரிகையை மற்றவர்களும் வாசித்துப் பயனடையும்படி செய்யத் தூண்டும்படி அன்புடன் வேண்டுகிறோம். நரகத்திலிருந்து நம்மால் முடிந்த வரை ஆன்மாக் களைக் காப்பாற்றும்படி ஜெப, தவ, பரித்தியாகங்கள் செய்ய முன்வருவோம். இத்தகைய உள்ளங்களே சேசு மரிய இருதயங்களுக்கு உண்மையான ஆறுதல் தருகின்றன. இவர்களையே சேசுமரிய இருதயங்கள் அதிகமாக நேசித்து ஆசீர்வதிக்கிறார்கள்.

சர்வேசுரன் பேசுகிறார்: "நான் நீதியாசனத்தில் அமர்ந்திருக்க, ஒரு மனிதன் தீர்ப்பிற்காக என் முன் வந்தான். பிதாவின் குரல் முழங்கியது, அவர் அவனிடம் : ''நீ பிறவாதிருந்தால் நலமாயிருந் திருக்கும்!'' என்றார்.''

அவனைப் படைத்தது பற்றிக் கடவுள் மனம் வருந்தினார் என்பது இதன் பொருளல்ல, மாறாக, அவன் மீது பரிதாபப்பட்டே இவ்வார்த்தைகளை அவர் கூறினார். இதற்குப் பதில் சொல்லும் விதமாக தேவ சுதனின் குரல் ஒலித்தது: ''நான் உனக்காக என் இரத்தத்தைச் சிந்தினேன்; ஒரு கடுமையான தண்டனையை உனக்காக நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் என் திரு இரத்தத்திடமிருந்து நீ உன்னை ஒட்டுமொத்தமாக அந்நியமாக்கிக் கொண்டாய். அதற்கும் உனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதபடி செய்து விட்டாய்!''

அடுத்ததாக இஸ்பிரீத்து சாந்துவானவர் பேசினார்: "அவனுடைய இருதயத்தில் கொஞ்ச மாவது கனிவோ, தேவசிநேகமோ, பிறர்சிநேகமோ இருக்குமா என்று நான் அந்த இருதயத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடிப் பார்த்தேன். ஆனால் அவனோ பனிக்கட்டி போலக் குளிர்ச்சி யாகவும், கல்லைப் போல கடினமாகவும் இருக்கிறான். அவனைப் பற்றி எனக்கு இப்போது எந்தக் கவலையுமில்லை !''

"அங்கே மூன்று கடவுள்கள் இருந்தார்கள் என்பது போல மூன்று குரல்கள் ஒலித்தன. ஆனால், என் மணவாளியான உன் (அர்ச். பிரிட்ஜத்தம்மாள்) நிமித்தமாகவே எங்கள் குரல்கள் வெளியே கேட்கும் விதமாக ஒலித்தன. ஏனெனில் அப்படி இல்லையென்றால், இந்தப் பரம் இரகசியத்தை உன்னால் புரிந்து கொள்ளமுடியாமல் போயிருக்கும்.''

அதன்பின் பிதா சுதன் இஸ்பிரீத்து சாந்து ஆகிய மூவரின் குரல்களும் உடனடியாக ஒரே குரலாக மாற்றப்பட்டு இடியாக முழங்கின. "எந்த விதத்திலும் நீ பரலோக இராச்சியத்திற்குத் தகுதியற்றவன்" என்ற அதிபயங்கரவார்த்தைகள் உச்சரிக்கப்பட்டன.

கிருபையாபத்தின் மாதா மவுனமாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய இரக்கம் இப்போது வெளிப்படாதிருப்பதைக் காண்கிறேன். ஏனெனில் தீர்ப்புக்காகக் காத்திருப்பவன் நேசத்தாயாரின் இரக்கத்திற்கு எந்த விதத்திலும் தகுதியற்றவனாக இருக்கிறான்.

இதோ, சகல அர்ச்சியசிஷ்டவர்களும் ஒரே குரலாகக் கூக்குரலிட்டு இப்படிச் சொல் கிறார்கள்: "உமது இராச்சியத்திலிருந்தும், உமது பேரின்பத்திலிருந்தும் நித்தியத்திற்கும் விலக்கப்படுவது அவனுக்குரிய தேவ நீதியாக இருக்கிறது'' என்று! உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள பரிசுத்த ஆன்மாக்கள் அனைவரும் அடுத்ததாக, "உன் பாவங்களைத் தண்டிக்கப் போதுமான கடுமையுள்ள தண்டனை எதுவும் எங்களிடம் இல்லை. நீ அதிகப் பெரிதான வாதைகளை அனுபவிக்க வேண்டியவனாக இருக்கிறாய். அதன் காரணமாக, நீ எங்களிடமிருந்து பிரிக்கப் பட்டவனாக இருப்பாய்" என்கிறார்கள்.

அதன்பின், இதோ, இறுதியாக, தீர்ப்பிடப்பட வேண்டியவனோ, கடுந்திகிலூட்டும் குரலில் இப்படிச் சொல்லிப் புலம்புகிறான்: "ஐயோ! ஐயோ! என் தாயின் உதரத்தில் நான் உருவான நாள் சபிக்கப்படுவதாக!'' அவனே இரண்டாவது முறையாகக் கூக்குரலிட்டு, "என் ஆன்மா என் சரீரத்தோடு இணைக்கப்பட்ட அந்தக் கணம் சபிக்கப்படுவதாக! எனக்கு ஒரு சரீரத்தையும் ஆத்துமத்தையும் தந்தவர் சபிக்கப்படுவாராக!'' என்று அலறுகிறான். ப முறையாக, அவன் கூச்சலிட்டு, ''என் தாயின் வயிற்றினின்று நான் உயிருள்ளவனாகப் பிறந்த மணி நேரம் சபிக்கப்படுவதாக!'' என்கிறான்.

இதோ, அடுத்ததாக, நரகத்திலிருந்து கடும் அச்சமூட்டும் மூன்று குரல்கள் புறப்பட்டு வருகின்றன. அவை அவனிடம்: ''சபிக்கப்பட்ட ஆன்மாவே, முடிவில்லாத மரணத்தை நோக்கி, உருகிய பித்தளையைப் போல இறங்கி, நீ எங்களிடம் வருவாயாக'' என்கின்றன. அவை இரண்டாவதாக கூக்குரலிட்டு, ''எங்கள் கெடுமதிக்குத் திறப்பாக, முற்றிலும் வெறுமையாக இருக்கிற சபிக்கப்பட்ட ஆத்துமமே! எங்களிடம் வா! இங்கே (நரகத்தில்) உன்னைத் தன் சொந்த வேதனையாலும், கெட்ட புத்தியாலும் நிரப்பாதவன் ஒருவன் கூட எங்களில் இருக்க மாட்டான்" என்கின்றன. மூன்றாவது முறையும் அவை கூச்சலிட்டு, "மூழ்குவதும், தொடர்ந்து அமிழ்ந்து கொண்டேயிருப்பதும், ஆனாலும் தான் ஓய்வெடுக்கும்படி அடிப்பகுதியை ஒருபோதும் தொடாததுமான கல்லைப் போல பாரமாயிருக்கிற சபிக்கப்பட்ட ஆத்துமமே, வா! நீ பாதாளத்தினுள் எங்களை விட அதிக ஆழத்திற்குள் இறங்குவாய். இப்பாதாளத்தின் மிகக் கீழான பகுதியைச் சென்றடையும் வரை, நீ ஒரே நிலையில் ஒருபோதும் நிற்க மாட்டாய்'' என்கின்றன.

(அர்ச். பிரிட்ஜத்தம்மாளின் "வெளிப்பாடுகளில் இருந்து எடுக்கப்பட்டது.)

இந்த பயங்கரத்துக்குரிய நிர்ப்பாக்கிய ஆன்மாவின் நிலையில் ஒவ்வொருவனும் தன்னையே அடிக்கடி வைத்து சிந்திப்பதும், இந்த நிலையை அடைவதை எப்பாடுபட்டாவது விலக்க அடிக்கடி பிரதிக்கினை செய்வதும் ஆத்துமத்திற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். உலகில் இருக்கும் வரை, பரலோக இராச்சியத்தை மறந்து, மனிதன் உலகப் பெருமையையும், செல்வத்தையும், சுக வாழ்வையும், பட்டம் பதவிகளையும் தேடியலைகிறான். ஆனால், அவனே தினமும் சில நிமிடங்களை ஒதுக்கி, தன் மரணத்திற்குப் பிறகு தான் தமத்திரித்துவ சர்வேசுர னாலும், கிருபையாபத்தின் மாதாவாலும், சகல சம்மனசுக்கள், அர்ச்சியசிஷ்டவர்களாலும், உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள பரிசுத்த ஆத்துமங்களாலும் வெறுத்து ஒதுக்கப்படுவதும், நரக அரூபிகளால் கெடுமதியோடு வரவேற்கப்படுவதும் எத்துணை பயங்கரமானது என்பதை ஆழ்ந்து தியானிக்க முன்வர வேண்டும். உங்கள் ஆன்ம சத்துருக்களோடு துணிவோடு போராடுங்கள்! ஆத்துமத்தைக் காத்துக்கொள்ள எதையும் இழந்து போக ஆயத்தமாயிருங்கள்! எதற்காகவும் உங்கள் நேச ஆண்டவரையும், உங்கள் பரிசுத்த மாதாவையும் இழக்காதிருக்கப் போராடுங்கள். சேசுவும், மாதாவும் உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிப்பார்களாக!

மரியாயே வாழ்க!

சுயநேசம் தேவ ஆறுதலைத் தடுக்கிறது! 

''மனிதன் சிருஷ்டிகள் அனைத்திலும் மேலானவன். தன்னை விடப் பெரியதாயிருக்கிற று எதிலும் அவன் திருப்தியோ மனநிறைவோ அடையவே முடியாது. அவனை விடப் பெரியவராக இருப்பவர் நித்திய சர்வேசுரனாகிய நாம்தான். ஆகவே, நாம் மட்டுமே அவனைத் திருப்திப்படுத்த முடியும். மனிதனின் குற்றத்தின் காரணமாக இந்த மன திருப்தியும் மகிழ்ச்சியும் அவனிடமிருந்து விலக்கப்படுகிறது என்பதால், அவன் தன் வாழ்நாள் முழுவதையும் தொடர்ச்சியான வாதையிலும், வேதனையிலுமே கழிக்கிறான். வேதனையைத் தொடர்ந்து அழுகை வருகிறது. (பாவத்தின் மீதான மனஸ்தாபத்தினால் அன்றி, சுய இரக்கத்தின் காரணமாக) மனிதன் அழத் தொடங்கும் போது, அவனுடைய மரத்தை சுய நேசம் என்னும் காற்று அலைக்கழிக்கத் தொடங்குகிறது. இந்த சுயநேசத்தை மனிதன் தன் வாழ்வின் அடிப்படையாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறான். சுய நேசத்தில் தேவ ஆறுதல் மனிதனுக்கு மறுக்கப்படுகிறது.'' (கடவுள் அர்ச். சியென்னா கத்தரீனம்மாளிடம் கூறியது, ''பக்திச்சுவாலக்கன்னிகையின் உரையாடல்".)