தவக்காலச் சிந்தனைகள் 5 : ஒறுத்தல் முயற்சிகள் தொடர்ச்சி ***

புனித குழந்தை இயேசுவின் தெரசம்மாள் நாள் நாள் தோறும் செய்யும் ஒறுத்தல் முயற்சிகள் :

1.   அதிக தாகமெடுத்து, தண்ணீர் அருந்தும் தேவை வரும்போதெல்லாம் உடனே நீர் அருந்தாமல், சில நிமிடங்கள் கழித்து நீர் அருந்துவாள். ( இந்த ஒறுத்தல் முயற்சி நம் பாத்திமா புனித சிறுமிகளான லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸால் கொஞ்சம் அதிகமாகவே கடைப்பிடிக்கப்பட்டது).

2.   தன்னுடைய மடத்துத் தலைவியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. மனதால் முறுமுறுத்ததில்லை. எல்லாவற்றையும் பரித்தியாகமாக ஏற்றுக்கொண்டு, அவற்றை ஆண்டவரின் பாடுகளோடு ஒன்றித்து ஒப்புக்கொடுப்பாள். ( நம்முடைய துன்பங்கள், வேதனைகள், அவமானங்கள், வாங்கும் திட்டுகள் இவற்றை ஆண்டவரின் பாடுகளோடு இனைத்து ஒப்புக்கொடுக்கலாம். அதற்கு பலனும் அதிகம்)
3.   மிகத் தாழ்மையான வேலைகளையும் கூட புன்முறுவலோடு செய்து வந்தாள். கொடுக்கப்பட்ட வேலைகளை சிரமேற்கொண்டு சரியாகச் செய்து முடிப்பாள்.

4.   மற்ற சகோதரிகள் தன்னை ஏளனமாகப் பேசினால் பொறுத்துக் கொள்வாள்.
5.   தந்தையின் செல்லப் பெண்ணாய் சந்தோசமாக முன்பு வாழ்ந்திருந்தாலும், மடத்துத் தரித்திரத்தை மனதார, மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு, எளிய சுவையற்ற உணவுகளை எந்த முறைப்பாடுமின்றி உண்டு வந்தாள். பிறர் சாப்பிட்டது போக மீதமுள்ள உணவுப்பண்டங்களை மட்டும் உண்பதில் ஆர்வம் காட்டினாள்.

6.   காச நோயால் வந்த கடும் வேதனைகளை மிகப்பொறுமையாய் ஏற்றுக் கொண்டாள்.
7.   கடுகடுப்போ எரிச்சலோ அவளிடம் ஒரு போதும் இருந்ததில்லை. தன் மடத்து சகோதரிகளுக்கு அன்பு காட்டுவதைத் தவிர வேறு எதுவும் அவளிடமிருந்து வெளிப்பட்டதில்லை.

8.   தேவாலய பீடத்தின் மீது எப்போதும் கண்ணும் கருத்துமாய் இருந்து, அதை மிக அழகாகவும், நேர்த்தியாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வதில் அவள் எந்த சிரமத்தையும் பொருட்படுத்தியதில்லை.
புனித குழந்தை இயேசுவின் தெரசாளின் முன்மாதிரியைப் பின் பற்றி நாமும் இந்த தவக்காலதில் அனுதினமும் ஒருத்தல் முயற்சிகள் செய்து புண்ணியங்களை சம்பாதித்துக் கொள்வொம்.

நன்றி : ஆன்ம இரட்சணியத்திற்குரிய எளிய பக்தி முயற்சிகள் புத்தகம், மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. போன் : 0461-2361989, சகோ. பால்ராஜ் : 9487609983

குறிப்பு : நேற்றைய பதிவு,  இன்றைய பதிவுகளில் வரும் ஒறுத்தல் மிகவும் பயன் தருபவை...  இன்னும் வர இருக்கிறது....

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !