தேவநற்கருணையில் புனித சவேரியாரிடத்தில் நடந்த புதுமை!

கிழக்கிந்திய நாடுகளின் அப்போஸ்தலரான புனித சவேரியார் தேவநற்கருணையின் பேரில் மிகுந்த பக்தியாய் இருந்தார் . அந்த பக்தி காரணமாக அவரிடத்தில் சில புதுமைகள் நிகழ்ந்தன. ஒருநாள் அவர் பூசை செய்யும் போது தேவநற்கருணை உட்கொண்டவுடன் பூமியை விட்டு உயர நிற்கிறதை கோயிலில் இருந்தவர்கள் அனைவரும் கண்டார்கள். அவர் மக்களுக்குத் தேவநற்கருணை கொடுக்கிறபோது மற்ற குருக்களைப் போல் தேவநற்கருணைகுச் சங்கையாக முழங்காலிலே நின்று மக்களுக்கு தேவநற்கருணை கொடுப்பார் . ஒருநாள் கோவை நகரில் இவ்வாறு ஏராளமான மக்களுக்கு தேவநற்கருணை கொடுக்கிறபோது முழங்காலில் இருந்தபடியே புதுமையாக பூமியை விட்டு மூன்று சாண் உயரத்தில் எழும்பி மக்கள் அனைவருக்கும் தேவநற்கருணை கொடுத்தார் .

   கிறிஸ்தவர்களே! சிலர் தேவநற்கருணை வாங்கினவுடனே சற்று நேரமாகிலும் முழங்காலில் இராமல் இரண்டொரு நிமிடத்தில் அமர்ந்து கொள்கிறார்கள் . அவர்கள் புனித சவேரியார் தேவநற்கருணைக்குக் காட்டிய சங்கையைக் கேட்டு மிகவும் வெட்கப்படுவார்களாக. மிகுந்த பலவீனம் உள்ளவனை உயர்ந்த மலைமேல் ஏறச்சொன்னால் அவன் என்னால் முடியாதென்பான் ; சிலநாட்கள் நல்ல உணவை உண்டபிறகு அதன் வழியாக தனக்கு வந்த பலத்தினால் அவன் உயர்ந்த மலைமேல் எளிதாய் ஏறுவான் . சில கிறிஸ்தவர்கள் அநேக நாள் நன்மை வாங்காமல் ஒரு வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் போல்வாங்குகிறர்கள் . அவர்களுடைய ஆத்துமம் பலவீனமுள்ளதாக இருக்கும். ஆனால் இப்படிபட்டவர்கள் ஒரு வருடத்துள்ளாக பலமுறை நல்ல ஆயத்தத்தோடு தேவநற்கருணை வாங்கினால் அதன் வழியாக அவர்களுடைய ஆத்துமம் பலமடையும். ஆனால் தக்க ஆயத்தத்தோடு தேவநற்கருணை உட்கொள்ள வேண்டும் .

   அசீரணமுள்ளவன் நல்ல சாப்பாடு சாப்பிட்டாலும் பலன் வராது. இந்தக் குறை அவனுடைய வியாதி வழியாக வருகிறதேயல்லாமல் சாப்பிட்டதினால் அல்ல . அவ்வண்ணமே தக்க ஆயத்தமின்றி நன்மை வாங்குகிறவர்களுடைய ஆத்துமத்துக்கு தேவநற்கருணையினால் நன்மை விளையப் போவதில்லை .