அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் செபமாலை.

இது 39 மணிகள் உள்ளது மும்மூன்று மணிகளாய்க் கோர்த்து இடையில் இடம் விட்டிருக்க வேண்டும்.

பின்வரும் செபத்தை முதலில் சொல்லவும் உனக்கு அற்புதங்கள் வேண்டுமானால், அந்தோனியாரிடம் சொல் பின்னர் 13 செபங்களைச் சொல்லி ஒவ்வொன்றிற்குப் பின்னும் ஒரு பர.அரு. பிதாவுக்கும் .... சொல்ல வேண்டியது

(இது பாப்பிறையின் ஆசிரைப் பெற்றதாகும். எனவே பலன் மிக்கது)

1. சாவை அகற்றுகிறார் :- வார்த்தையால் இறந்தவர்களை உயிர்ப்பித்தவரே, இப்பொழுது மரண வேளையில்இருப்பவர்களுக்காகவும், மரித்த விசுவாசிகளுக்காகவும் வேண்டிக் கொள்ளவும்.

2. தப்பறையை நீக்குகிறார் :- எங்களை எல்லாவிதத் தப்பறைகளிலுமிருந்து காத்திடுவீர். திருச்சபைக்காகவும், அதன் தலைவருக்காகவும் வேண்டிக் கொள்ளும்.

3. ஆபத்துக்களை அகற்றுகிறார் :- எங்கள் பாவங்களுக்காக இறைவன் அனுப்பும் பஞ்சம், படை, கொள்ளை, நோய் என்ற ஆபத்துக்களிலிருந்து எங்களைக் காத்தருளும்.

4. தொழுநோயாளரைக் குணப்படுத்துகிறார்:- எங்கள் ஆன்மாவை கறைப்படுத்தும் எல்லா அருவருப்பான பாவங்களினின்று உடலை விரட்டும் எல்லாவிதப் பிணிகளினின்றும் காத்தருளும்.

5. பேய்களை ஓட்டுகிறார் :- உம்மைக் கண்டதும் பேய்கள் நடுங்கி ஓடுகின்றன. பிசாசுகளின் மீது வல்லமையுள்ள தூயவரே! பேய்களின் சகல மாயைகளிலிருந்தும் எங்களைக் காத்தருளும்.

6. கடலை அமர்த்துகிறார் :- கடலில் தத்தளிப்பவர்களுக்கு புகலிடமானவரே! எங்களைக் கரை சேர்த்து ஆன்மாக்களில் எழும்பும் ஆசாபாசப் புயலை அமர்த்தியருளும்.

7. பிணியாளர்களைக் குணமாக்கிறார். :- எங்களைத் துன்புறுத்தும் ஆன்ம சரீரப் பிணிகளிலிருந்து எங்களைக் குணமாக்கும்.

8. சிறைப்பட்டவர்களை விடுதலை செய்கிறார்:- சிறையில் அடைபட்டவர்களுக்காய் உம்மை மன்றாடுகிறோம். விலங்கிடப்பட்டோரின் விலங்குகளை உடைத்தெறியும். பாவ அடிமைத் தனத்தினின்று எமைக் காத்திடும்

9. உயிரற்ற அவயவங்களுக்கு உயிர் அளிக்கிறார்:- உயிரற்ற அவயவங்களைக் குணப்படுத்தியவரே, எங்களுக்கு எவ்வித ஆன்ம சரீர சேதம் விளையாதவாறு காத்தருளும்.

10. காணாமற் போனவைகளைக் கண்டடைய செய்கிறார்:உலகிலும், ஞான வாழ்விலும் நாங்கள் இழந்தவற்றை மீண்டும் அடைந்திடச் செய்தருளும்.

11. ஆபத்துக்களை அகற்றுகிறார்: எங்களுக்கு ஏற்படும் ஆன்ம உடல் ஆபத்துக்களிலிருந்தும் காத்தருளும்

12. தாங்க முடியாத இக்கட்டுக்களை நொடிப்பொழுதில் நீக்குகின்றார்: எங்கள் இக்கட்டு வேளைகளில் உதவி புரிந்து உணவு, உடை, வேலை இல்லாதவர்களுக்கு உதவி செய்தருளும்.

13. அவர் வல்லமையை அறிந்தவர்கள் அவரை வாழ்த்துவார்களாக: தூய அந்தோனியாரே நாங்கள் வாழும் நாட்களெல்லாம் நீர் செய்த உபகாரங்களை வெளிப்படுத்தி நன்றியுடன் உம்மை வாழ்த்துவோமாக