சற்பிரசாதத்திற்கு (திவ்விய நற்கருணைக்கு) முன்பாக சொல்லத்தகும் செபம்.

ஆகாயமும், பூலோகமும் தாங்கிய சகலமான உயிருள்ள வஸ்துக்களுக்கும் அமுதளிக்கும் நாதனே! எனக்கு யாவற்றையும் கொடுத்து, உம்மையும் என் ஆத்தும போஜனமாக தேவ நற்கருணையில் கொடுத்துவிட்ட ஆண்டவரே, உமது மட்டற்ற தயாளத்தையும், சிநேகத்தையும் கண்டு பிரமித்து, இந்த தேவ நற்கருணையில் பயபக்தியோடு உம்மை வணங்கி, என்னை முழுமையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். வானம் கொண்ட ஆச்சரியமான அண்டகோளங்களுக்குப் பிரகாசம் தந்து, ஒன்றோடொன்று தட்டாமல் இயக்கும் தேவனே, நான் பொன்னாசை, புவியாசை, சரீர ஆசைகளில் தட்டுப்படாமல் சுகந்த பரலோக பரிமளம் வீசும் உம்மில் இளைப்பாறச் செய்தருளும். சர்வலோகங்களிலும் அடங்காத கர்த்தாவே, என் மேல் வைத்த சிநேகப் பெருக்கத்தால் தேவ நற்கருணையில் அடங்கினதை யோசித்து நடுநடுங்கி எல்லாவற்றையும் வெறுத்து, உம்மைக் கெட்டியாய்ப் பற்றி ஆராதிக்கிறேன். என் சித்தம், புத்தி, ஞாபகம், ஆசையெல்லாம் ஒன்றிலும் அடங்காமல், உம்மில் மாத்திரம் அடங்கிப் போகச்செய்தருளும் சுவாமி.

ஆமென்.