⛪ தேவமாதாவை நோக்கி அனுதினம் வேண்டிக்கொள்ளும் செபம்.

தேவதூதர்களுடைய இராக்கினியே! மனிதர்களுடைய சரணமே! சர்வ லோகத்துக்கும் நாயகியே! நாங்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். எப்படியாகிலும் எங்களை இரட்சிக்கவேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்.

தாயாரே! மாதாவே! ஆண்டவளே! உம்மை நம்பினோம், எங்களைக் கைவிடாதேயும். விசேஷமாய் நாங்கள் சாகும்போது பிசாசுகளுடைய தந்திரங்களையெல்லாம் தள்ளிப்போட்டு உம்முடைய திருக்குமாரன் சேசுநாதரிடம் நாங்கள் வந்து சேருமட்டும் தேவரீர் துணையாயிரும்.

இது நிமித்தமாக உம்முடைய திருப்பாதத்தில் விழுந்து உம்முடைய ஆசீரைக் கேட்கிறோம். இதை அடியோர்களுக்கு இரக்கத்தோடே கட்டளை பண்ணியருளும் தாயாரே! மாதாவே! ஆண்டவளே! ஆமென்.