மூன்று ஆண்டுகளாக வந்து, இந்த அத்திமரத்திலே பழம் தேடுகிறேன். ஒன்றும் காணவில்லை. இதை வெட்டிவிடு. ஏன் வீணாக இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது?

திராட்சை தோட்டத்திற்கு மத்தியில் ஒரு அத்திமரம். அப்படியென்றால் அது ஒரு நல்ல வளம் நிறைந்த தோட்டம். நல்ல மண், தேவையான நீர், மற்றும் உரம் போடப்படுகிறது. ஆனாலும் அந்த மரம் காய்க்கமாட்டேன் என்று இறுமாப்புடன் இருக்கின்றது. மூன்று ஆண்டுகளாக பார்த்த தலைவர் பலன் தரவில்லை என்றதும் அவற்றை வெட்டிவிட தோட்டக்காரனிடம் சொல்லுகிறார். அதையும் ஒரு கடினமான வார்த்தையை உபயோகப்படுத்துகிறார்.

"ஏன் வீணாக இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது?" தலைவன் வெட்ட சொல்லியும், தோட்டக்காரர், " 'ஐயா, இந்த ஆண்டும் இருக்கட்டும். சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்.

" காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம் "

இந்த உவமையை இயேசு மறைமுகமாக கடவுளின் கோபத்தை வெளிக்காட்ட பயன்படுத்தியிருக்கிறார். அதுவும் அவர் மூன்று ஆண்டுகள் என்று சொல்லியிருப்பது அவர் நற்செய்தி அறிவித்த ஆண்டுகள். இவ்வளவு சொல்லியும் அவர்கள் கண்கள் குருடாக இருக்கிறது. காதுகள் மந்தமாக இருக்கிறது. அவர்கள் உள்ளத்தில் சந்தேகம் குடி கொண்டிருக்கிறது. மீட்பர், மெசியா, ஆண்டவர் இயேசுவை கண்டுகொள்ளவில்லை. நல்லவைகளை , உண்மைகளை உள்ளத்தில் நுழைய விடாமல் தடுத்து. தன் நிலை உணர்ந்து திருந்தாமல் ஒருவித பிடிவாதம், இறுமாப்புடன் இருந்ததால் இறைவனை இழந்தார்கள்.

இது யூதர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல. நற்கனி கொடாத ஒவ்வொறு கிறிஸ்தவனுக்கும். இது பொருந்தும். காத்திருக்கிறார், காத்திருக்கிறார், இன்னும் காத்திருக்கிறார். ஆனால் நாம் நற்கனி கொடுக்கவில்லை என்றால்,

வெட்டிவிடு. ஏன் வீணாக இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது?

என்பதே தலைவனின் பதில்.

நற்செய்திக்கு செல்வோம் :

அவ்வேளையில் சிலர் அவரிடம் வந்து, பிலாத்து கலிலேயரின் இரத்தத்தை அவர்களுடைய பலியோடு கலந்தார் என்ற செய்தியை அறிவித்தனர்.

அவர் மறுமொழியாக, "இக்கலிலேயர் இத்தகைய சாவுக்கு உள்ளானார்கள் என்பதால், மற்றெல்லாக்கலிலேயரையும் விட இவர்கள் பாவிகள் என்று கருதுகிறீர்களா?அப்படியன்று என, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மனந்திரும்பாவிடில் நீங்கள் எல்லோரும் அவ்வாறு அழிவீர்கள்.

சிலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே; அவர்கள் யெருசலேமில் வாழ்ந்த மற்றெல்லாரையும்விடக் குற்றவாளிகள் என்று கருதுகிறீர்களா?அப்படியன்று என, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மனந்திரும்பாவிடில், நீங்கள் எல்லோரும் அவ்வாறு அழிவீர்கள்" என்றார்.

மேலும் அவர் இந்த உவமையைக் கூறினார்; "ஒருவன் தன் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டுவைத்திருந்தான். அவன் வந்து அதிலே பழம் தேடியபொழுது ஒன்றுங்காணவில்லை.

ஆகவே, தோட்டக்காரனிடம், 'மூன்று ஆண்டுகளாக வந்து, இந்த அத்திமரத்திலே பழம் தேடுகிறேன். ஒன்றும் காணவில்லை. இதை வெட்டிவிடு. ஏன் வீணாக இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது?' என்றான்.

அதற்கு அவன், 'ஐயா, இந்த ஆண்டும் இருக்கட்டும். சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்.

" காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம் " என்றான்."

லூக்காஸ் 13: 1-9