✠ லூக்கா நகர் புனிதர் ஸிட்டா

புனிதர் ஸிட்டா ஒரு இத்தாலிய நாட்டு ரோமன் கத்தோலிக்க புனிதரும், அருட்சகோதரியும் ஆவார்.

இத்தாலியின் லூக்கா (Lucca) நகரின் அருகேயுள்ள "மோன்சக்ரட்டி" (Monsagrati) என்னும் கிராமத்தில் பிறந்த இவர், தமது பன்னிரெண்டாம் வயதிலேயே வீட்டுப் பணிப்பெண்ணாக பணியமர்த்தப்பட்டார். நீண்ட காலமாக அவர் ஒரு பணிப்பெண்ணாக கொடுமைப்படுத்தப்பட்டார். கடினமான பணிகள் அவர்மேல் சுமத்தப்பட்டன. நியாயமற்ற முறையில் அவர் துன்புறுத்தப்பட்டார். அவருடைய அன்பான மற்றும் வெளிப்படையான தன்மைக்காக அவர் அவரது முதலாளிகளாலும், சக பணியாளர்களாலும் தாக்கப்பட்டார். இடைவிடாது தவறாகப் பயன்படுத்தப்பட்டார். அவருடைய பணிவும், சாந்த குணமும், அன்பும் அவரைக் கொடுமைப் படுத்திய முதலாளிகளையும், சக பணியாளர்களையும் அவரை விட்டு விலக வைத்தன. அவரது விடாமுயற்சியும், பண்பும் அவரை அவர்களிடமிருந்து மீட்டன. அவரது நிலையான பக்தி படிப்படியாக ஒரு மத எழுச்சியை குடியேற்றியது.

சோம்பேறித்தனமான பக்தி பொய்மையானது என்று அவர் அடிக்கடி பிறருக்கு எடுத்துரைத்தார். அவருக்கு தரப்பட்ட பணி, கடவுளால் அவருக்கு தரப்பட்டது என்று கூறினார். பிறரை இகழ்வதை விட்டு, தமது பணிகளை தாமே செவ்வன செய்தார். உறங்கும் நேரத்தைக் குறைத்து, செபத்தில் ஈடுபட்டார்.

கி.பி. 1272ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 27ம் நாளன்று, அவர் உறக்கத்திலேய சமாதானமாக இறந்தார். அவர் படுத்திருந்த இடத்தின்மேலே ஒரு விண்மீன் தோன்றியதாக சொல்லப்பட்டது.

அடக்கம் செய்யப்பட்ட அவரது உடல், கி.பி. 1580ம் ஆண்டு தோண்டி வெளியில் எடுக்கப்பட்டது. அவரது உடல் கெட்டு விடாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பின்னர் பதப்படுத்தப்பட்டதாக மாறிவிட்டது. புனிதர் ஸிட்டாவின் உடல் தற்போது லுக்காவிலுள்ள 'சேன் ஃப்ரேடியானோ பேராலயத்தில்' (Basilica di San Frediano in Lucca) பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.