பாத்திமா காட்சிகள் பகுதி- 11

கபேசாவில் காணப்பட்ட உருவம்..

1916 – வானதூதரின் முதல் காட்சிக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே வானதூதரின் முன்னோட்ட காட்சி லூசியாவுக்கு காட்டப்பட்டது... அக்குழந்தைகளுக்காக ஒரு மிகப் பெரிய திட்டம் கடவுள் பின்னால் வைத்திருந்தாலும் கடவுளால் அக்குழந்தைகள் கவனிக்கப்பட்டு வருவது நமக்கு இதனால் விளங்கும்.. அது எப்பேற்பட்ட பாக்கியம்..

1915-ம் ஆண்டு. கபேசா பாறைகளுக்கிடையில் லூசியாவும், அவள் தோழிகளும் ஆடு மேய்த்து வந்தாலும் பகல் உணவு அருந்திய பின் சேர்ந்து ஜெபமாலை சொல்வது வழக்கம். ஒரு நாள் இவ்வழக்கப்படி, அவர்கள் ஜெபமாலை செய்து கொண்டிருக்கையில், கீழே தாழ்ந்திருந்த பள்ளத்தாக்கின் மேலே, மிக உயரத்திலே ஒரு கம்பீரமான தோற்றம் கிழக்கிலிருந்து மேற்கு முகமாக அசைவதை ஒரு சிறுமி கண்டாள். ஏதோ வெள்ளை நிறமான ஒன்று தங்களை நோக்கி வருவதாக மட்டும் அவர்கள் கண்டனர். அது சிறுமிகளுக்கு நேராக வந்து சில மரங்கள் நின்ற ஓரிடத்தில் அம்மரங்களுக்கு நேரே ஆகாயத்தில் அப்படியே நின்றது. சிறுமிகள் அதைப் பார்த்துக் கொண்டே இருந்தனர். ஒரு சிறுமி லூசியாவிடம் “ அது என்ன? “ என்று கேட்டாள். “ எனக்கு என்னவென்று தெறியவில்லை “ என்றாள் லூசியா. சிறுமிகள் ஜெபமாலையைத் தொடர்ந்து சொல்லி முடிக்கவும் அது சூரிய வெளிச்சத்தில் காற்றுடன் கலந்து மறைந்து விட்டது.

“ சுரூபம் போல் ஒரு உருவம்; வெண்பனியால் செய்யப்பட்டது போலிருந்தது; சூரிய ஒளி பட்டதால், அதனூடே ஊடுருவிப் பார்க்க முடியும் போலிருந்தது.” லூசியாவின் மனதில் அந்த உறுவம் இவ்வாறு பதிந்துள்ளது.

லூசியா இதைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் மற்ற சிறுமிகள் வாயிலாக செய்தி வெளியாகி விட்டது. லூசியாவின் வீட்டிற்கும் தெரிந்து விட்டது. லூசியாவின் தாய் மரிய ரோஸா அவளைக் கூப்பிட்டு, “ இங்கே பார் லூசியா, நீ என்னவோ... அது என்னவென்று தெறியவில்லை, அதைக் கண்டாயாமே; என்ன அது” என்று கேட்டாள். “ எனக்கும் அது என்னவென்றே தெறியவில்லையம்மா. யாரோ ஒரு ஆள் போர்வை போர்த்திய மாதிரி தெறிந்தது. கண்ணும் இல்லை. கையும் இல்லை” என்றாள் லூசியா.

“ பயித்தியக்காரப் பிள்ளைகள் “ என்று எரிச்சலுடன் கூறினாள் மரிய ரோஸா.

ஆனால் அச்சிறுமிகள் அதே தோற்றத்தை அதே இடத்தில் மீண்டும் கண்டனர். 1915-ம் ஆண்டு கோடை காலத்தில் மூன்றாம் முறையாக அதே தோற்றம் அதே இடத்தில் காணப்பட்டது. மீண்டும் செய்திகள் பரவியதால் மரிய ரோசா லூசியாவிடம் சற்று அழுத்தமாக, “ நீ என்ன கண்டாய் லூசியா? அந்த உருவம் எப்படித்தான் இருந்தது?” என்று கேட்டாள்.

“ அது எப்படி இருந்தது என்று எனக்குச் சொல்ல தெறியவில்லையம்மா” என்றாள் லூசியா.

அண்டை வீட்டார் லூசியாவை ஒரு மாதிரி  வேடிக்கையாகவும், வேதனையளிக்கும் முறையிலும் பார்க்கத் துவங்கினார்கள்.

அவள் சேசு வாங்கியதிலிருந்து ஏற்பட்ட மாற்றம் என அவள் சகோதரிகள் நினைத்தார்கள். சில சமையம் அவள் தன்னை மறந்தது போலிக்கையில் அவள் சகோதரிகள் கேலியாக, “ என்ன விஷயம் லூசியா? நீ அந்த போர்வை போர்த்திய ஆளைப் பார்த்தாயா? “ என்பார்கள். லூசியா பதிலே கூற மாட்டாள். கூறி என்ன ? கூறாமலென்ன? அவளுக்கே அது என்னவென்று புரியவில்லையே!

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள  Ph. 0461-2361989, 9487609983, 9487257479

சிந்தனை : ஆடு மேய்க்கும் சிறுமிகள் ஜெபமாலை ஜெபித்த அழகைப் பார்க்க, அவர்களைப் பாதுகாக்க.. கடவுளே தன் முக்கியமான தூதரை அனுப்பி வைத்துள்ளார் பாருங்கள்.. பாத்திமா ஊரின் எழில்.. அங்குள்ள கத்தோலிக்க குடும்பங்களின் கலாச்சாரங்கள்.. அவர்கள் மாதாவுக்கும், ஜெபமாலைக்கும் கொடுக்கும் முக்கியத்துவங்கள்.. சிறுமிகள் ஆடு மேய்க்கும் பகுதி.. இந்த சின்னஞ்சிறுவர்களின் ஜெபமாலை… அந்த கோவா தா ஈரியாவை நாம் கற்பனை செய்து பார்த்தாலே அவ்வளவு அழகாக இருக்கிறது.. உண்மையிலேயே போர்துக்கல் மக்கள் ரொம்ப கொடுத்துவைத்தவர்கள்…

இன்னொன்றை மறக்கக் கூடாது நாம் ஜெபமாலை ஜெபிக்கும் போதும் நம் அருகே நம் காவல் தூதர்கள் நம் ஜெபங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. ஒப்புக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஒரு குடும்பம் ஜெபமாலை ஜெபித்தால் அக்குடும்பத்தில் உள்ள அத்தனை பேர்களின் காவல் சம்மனசுக்களும் அங்கே ஆஜராகிறார்கள்.. எவ்வளவு மகிழ்ச்சிக்கும் பாதுகாப்பிற்குரிய நேரம்..

அதனால்தான் ஜெபமாலையின் முடிவில்.. அதி தூதரான அர்ச்சிஷ்ட்ட மிக்கேலே, கபரியேலே, ரஃபேலே, இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே, எங்கள் பாதுகாவலரான புனித சந்தியாகப்பரே (உங்கள் புனிதர் பெயர்) என்று அழைக்கும் போது.. எங்கள் காவல் சம்மனசுக்களே என்று சொல்லி அவர்களையும் அழைத்து நம் ஜெபமாலையை தேவமாதாவின் திருப்பாதத்தில் பாத காணிக்கையாக வைக்க கேட்க வேண்டும்… அவர்களுக்கு அடிக்கடி வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்… நம் ஜெப தவ பரிகாரங்களை ஒப்புக்கொடுக்கும் பணி..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !