திருப்பலி செபங்கள் விவிலியத்தில்!

கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்த நம்மிடம் பிரிவினை சகோதரர்கள் வந்து "திருப்பலி விவிலியத்தில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? அது நீங்களாக உருவாக்கிக் கொண்டது . சிலை வழிபாட்டைத் தூண்டுவது" என்றெல்லாம் குற்றம் சாட்டினால், நாம் நிமிர்ந்து நின்று பதில் சொல்ல வேண்டும், " கல்வாரியிலே இயேசு மரித்ததை நாம் திருப்பலியிலே அனுசரிக்கிறோம் . மீண்டுமாய் கல்வாரிப்பலி, திருப்பலியிலே நடக்கிறது . கத்தோலிக்கத் திருச்சபை தரும் செபங்களில் எல்லாம் மிகச் சிறந்த செபம் திருப்பலி ; அதிலே இருக்கும் ஒவ்வொரு செபமும் விவிலியத்திலே உண்டு " . திருப்பலி செபங்களுக்கான வேதாகம ஆதாரங்களை இப்போது பார்ப்போம்!

துவக்க வழிபாடு

பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே (மத்தேயு 28:19)
ஆமென். 1 குறிப்பேடு 16:36

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக! 2 கொரிந்தியர் 13:13
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக! என்றார். அவர்களும் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக! என்றார்கள். ரூத்து 2:4

மன்னிப்பு வழிபாடு

எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதரர், சகோதரிகளே உங்களிடமும் நான் பாவிஎன்று ஏற்றுக் கொள்ளுகிறேன். ( யாக்கோபு 5:16)

ஏனெனில் என் சிந்தனையாலும் , சொல்லாலும் செயலாலும் கடமை தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன் (உரோமர் 12:16, யாக்கோபு 3:6, யாக்கோபு 4:17)

ஆகையால் எப்பொழுதும் கன்னியான பரிசுத்த மரியாளையும் ,வானதூதர் , புனிதர் அனைவரையும் சகோதரர் , சகோதரிகளே உங்களையும் நம் தேவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன் (1 தெசலோனிக்கர் 5:25)

எல்லாம் வல்ல இறைவன் நம் மீது இரக்கம் வைத்து நம் பாவங்களை எல்லாம் மன்னித்து நம்மை முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 1 யோவான் 1:9

ஆண்டவரே இரக்கமாயிரும் ;கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும் தோபித்து 8:4, 1 திமொத்தேயு 1:2

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக ; உலகினிலே நல் மனத்தோருக்கு அமைதியும் உண்டாகுக (லூக் 2:14)

புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனை உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப்படுத்துகின்றோம் யாம் (திருவெளி 22:9, )

உமது மேலாம் மாட்சிமைக்காக (திருவெளி 7: 12)

உமக்கு நன்றி நவில்கின்றோம் (எபேசி 5:20)

ஆண்டவராம் எம் இறைவனே ( யோவான் 20:28) இணையில்லாத விண்ணரசே

ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே ஏக மகனாக ஜெனித்த ஆண்டவர் இயேசுக்க்கிறிஸ்து இறைவனே (2 யோவான் 1:3)

ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திரு செம்மறியே (யோவான் 1:29)

தந்தையிநின்று நித்தியமாக ஜெனித்த இறைவன் மகனே நீர்( யோவான் 3:16)

உலகின் பாவம் போக்குபவரே நீர் எம் மீது இரங்குவீர் உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர் தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம் மீது இரங்குவீர் (உரோம 8:34)

ஏனெனில் ஏசுக் கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்( லூக் 4:34)

நீர் ஒருவரே ஆண்டவர் (திருவெளி 15:4 ) நீர் ஒருவரே உன்னதர்( லூக் 1:32)

பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின் மாட்சியில் உள்ளவர் நீரே (யோவான்14:26)

விசுவாசிகள் மன்றாட்டு

ஒரே சர்வேசுரனை விசுவசிக்கின்றேன். வானமும் பூமியும், (ஆதி 14:19 )

காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே. (கொலோசையர் 1:16)

சர்வேசுரனின் ஏக சுதனாய்ச் செனித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன். (லூக் 1:35)

இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங் கடவுளாகச் செனித்தவர். இவர் செனித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். (எபி 1:3)

இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. (யோவான் 1:1- 4)

மானிடரான நமக்காகவும், நம் மீட்பக்காகவும் வானகமிருந்து இறங்கினார். (யோவான் 3:13)

பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்.(மத் 1:18)

மேலும் நமக்காகப் போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.(யோவான் 19: 16)

வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.(1 கொரி15:3)

வானகத்திற்கு எழுந்தருளி,(லூக் 24:51) பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்.(கொலோசையர் 3:1)

சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கின்றார்.(2 திமோத்தேயு 4:1)

அவரது அரசுக்கு முடிவு இராது. (லூக் 1:33)

பிதாவினின்றும் சுதனின்றும் பறப்படும் ஆண்டவரும், உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கின்றேன்.(திப 2:17)

இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார். (யோவான் 14:16)

தீர்க்கதரிசிகளின் வாயிலாகப் பேசியவர் இவரே.(1 பேதுரு 1:10,11) ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்.(உரோமர் 12:5)

பாவ மன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்.(திப 2:38)

மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கின்றேன்.(உரோமர் 6:5) ஆமென்.

நற்கருணை வழிபாடு

ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். (சபை உரையாளர் 3:13)

நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.(யோவான் 6:35)

ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.(லூக்கா 22:17,18)

இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக. (திருப்பாடல் 68:36)

சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியுங்கள்.(எபிரேயர் 12:28)

ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.(திருப்பாடல் 50:23)

இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள். மக்கள்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம். (புலம்பல் 3:41)

குரு : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.(கொலோ 3:17)

மக்கள்: அது தகுதியும் நீதியும் ஆனதே.(கொலோ 1:3)

குரு : ஆண்டவரே பரிசுத்த தந்தையே எல்லாம் வல்ல நித்திய இறைவா எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக என்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும். எங்கள் கடமையும் மீட்புக்குறிய செயலுமாகும். தூயவரான தந்தையே, உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியாகும், உம்மை மகிகைப் படுத்துவது உண்மையிலேயே நீதியாகும். ஏனெனில் நீர் ஒருவரே உயிருள்ள மெய்யான கடவுள். காலங்களுக்கெல்லாம் முன்னதாகவே இருக்கின்றீர். அணுக முடியாத ஒளியில் வாழ்கின்ற நீர் என்றென்றும் நிலைத்திருக்கின்றீர். நீர் ஒருவரே நல்லவர். ஊயிரின் ஊற்றாகிய நீர் யாவற்றையும் படைத்து, படைப்புகளை நலன்களால் நிறைத்து, உமது ஒளியின் மாட்சியால் மக்களை மகிழ்விக்கத் திருவுளமானீர். ஆகவே, வானதூதர் அணி அணியாக உம் திருமுன் நின்று, இரவும் பகலும் உமக்கு ஊழியம் புரிகின்றனர். உமது திருமுகத்தின் மாண்பினைக் கண்டு மகிழ்ந்து, உம்மை இடையறாது புகழ்கின்றனர்;. அவர்களோடு நாங்களும், எங்களோடு பூவுலகப் படைப்புகள் அனைத்தும், உமது திருப்பெயரை அக்களிப்புடன் புகழ்ந்து பாடுவதாவது :

மக்கள்: தூயவர் தூயவர் தூயவர்! மூவுல கிறைவனாம் ஆண்டவர் வானமும் வையமும் யாவும்னும் மாட்சிமையால் நிறைந் துள்ளன. உன்னதங்களிலே ஓசான்னா! ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே உன்னதங்களிலே ஓசான்னா! உன்னதங்களிலே ஓசான்னா! (எசாயா 6:3, மாற்கு 12:9,10)

நற்கருணை மன்றாட்டு 1

இரக்கம் மிகுந்த தந்தையே, இதயம் நிறைந்த நன்றியுடன் நாங்கள் இப்புனித காணிக்கைகளை உம் திருமுன் கொண்டு வந்துள்ளோம். இவற்றை உமக்கு உகந்த பலிப்பொருளாக நீர் ஏற்று ஆசீர்வதித்தருள, உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.(எபே 5:20, 2 மக்கபேயர் 1:26)

உமது தூய கத்தோலிக்கத் திருச்சபைக்காக நாங்கள் இவற்றை ஒப்புக் கொடுக்கின்றோம். அதற்கு உலகமெங்கும் அமைதியும் ஒற்றுமையும் அளித்து அதனைப் பாதுகாத்து வழிநடத்துவீராக. உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை....... ஆயர்........ க்காகவும், அப்போஸ்தலிக்க விசுவாசத்தைக் கடைபிடித்துப் போதிப்பவர்கள் அனைவருக்காகவும் இக்காணிக்கைகளை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். (யோவான் 17:21 .திப 2:42)

இறைவா உம் மக்கள் எல்லாரையும், சிறப்பாக இன்று யாருக்காக மன்றாடுகிறோமோ அவர்களையும் நினைவு கூர்ந்தருளும். . இங்கே கூடியிருக்கும் எங்களையும் நினைவு கூர்ந்தருளும், எங்கள் விசுவாசத்தையும் அர்ப்பணத்தையும் நீர் அறிவீர். எங்களுக்காகவும் எம்மவர்க்காகவும் இப்புகழ்ச்சி பலியை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். உயிருள்ள மெய்யான என்றும் வாழும் இறைவா, எங்கள் ஈடேற்றத்திற்காகவும், நாங்கள் எதிர்ப்பார்கும் தீங்கற்ற நல்வாழ்வுக்காகவும் எங்கள் வேண்டுதலைச் செலுத்துகிறோம். (திருப்பாடல் 106:4 எபிரேயர் 13:15)

புனிதர் அனைவருடனும் உறவு கொண்டுள்ள நாங்கள், இறைவனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் தாயும் என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாளையும், அவருடைய கணவர் புனித சூசையப்பரையும், உம்முடைய அப்போஸ்தலரும் புனிதருமான இராயப்பர், சின்னப்பர், அந்திரேயா, மற்றப் புனிதர் எல்லாரையும் வணக்கத்துடன் நினைவுகூர்கின்றோம். இவர்களுடைய பேறுபலன்களினாலும் வேண்டுதலினாலு;ம் நாங்கள் யாவற்றிலும் உமது உதவி பெற்றுக் காக்கப்படுமாறு அருள்புரியும். ஆகவே, இறைவா, உம் ஊழியர்களாளிய நாங்களும், உமது குடும்பம் முழுவதும் உமக்கு ஒப்புக் கொடுக்கும் இக்காணிக்கையை மனமுவந்து ஏற்றருளும். வாழ்நாளெல்லாம் எங்களுக்கு உமது அமைதியைத் தந்து, முடிவில்லா அழிவிலிருந்து எங்களைக் காப்பாற்றி , நீர் தேர்ந்து கொண்டவர்களின் கூட்டத்தில் சேர்த்தருளும். (மத். 1:2-16; லூக் 16:9; 1 கொரி. 12:12, 20; திருவெளிப்பாடு . 5:8).

இறைவா, இந்தக் காணிக்கையை ஆசீர்வதித்து, புனிதப்படுத்தி, ஆவியிலும் உண்மையிலும், உமக்கு உகந்ததாகச் செய்தருளும், (கொலோ. 1:11) இவ்வாறு உம்முடைய அன்புத் திருமகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் திருவுடலாகவும் இரத்தமாகவும் இக்காணிக்கை மாறுவதாக. (யோவான் 4:24).

அவர் தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள் வணக்கத்துக்குரிய தம் திருக்கைகளில் அப்பத்தை எடுத்து, வான்நோக்கிக் கண்களை உயர்த்தி, எல்லாம் வல்ல இறைவனும் தம் தந்தையுமாகிய உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது: அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்; ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல். (மத் 26:26-28). அவ்வண்ணமே, உணவு அருந்தியபின், மகிமை மிகுந்த இக்கிண்ணத்தை வணக்கத்திற்குரிய தம் திருக்கைகளில் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது: அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்; ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம். இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள். (மத். 26:26-28).

குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!(1 திமோத்தேயு. 3:16) மக்கள்: ஆண்டவரே, தேவரீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுகின்றோம், உமது உயிர்ப்பையும் எடுத்துரைக் கின்றோம். (1 கொரி 15:3-5).

ஆகவே, இறைவா, உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய கிறிஸ்து பாடுபட்டதையும், மாட்சியுடன் விண்ணகம் சென்றதையும் உம் ஊழியர்களாகிய நாங்களும், உம்முடைய புனித மக்களும் நினைவு கூர்கின்றோம்.(1 பேதுரு1:18-21) நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து முடிவில்லா வாழ்வு தரும் புனித அப்பத்தையும் நிலையான மீட்பளிக்கும் கிண்ணத்தையும்,(யோவான் .6:54) தூய, புனித, மாசற்றப் பலியாக மாட்சிமை மிக்க உமக்கு நாங்கள் ஒப்புக் கொடுக்கின்றோம்., (எபிரேயர் . 9:13-14)

இவற்றை இரக்கத்துடனும் கனிவுடனும் கண்ணோக்கியருளும், நீதிமானாகிய உம்முடைய ஊழியன் ஆபேலின் காணிக்கைகளையும், (ஆதி. 4:4)

எங்கள் முதுபெரும்தந்தை ஆபிரகாமின் பலியையும்,(ஆதி . 22:12)

உம்முடைய உன்னதகுரு மெல்கிசெதக்கு அளித்த காணிக்கைகளையும் நீர் ஏற்றுக் கொண்டது போல், இவற்றைப் புனித பலியாகவும் மாசற்ற பலிப்பொருளாகவும் ஏற்றருளும்.(ஆதி .14:18).

எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய வானதூதர் இக்காணிக்கைகளை உமது விண்ணகப் பீடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்(திருவெளிப்பாடு . 8:3-4).

உம்முடைய மகனின் திருவுடலையும் இரத்தத்தையும் இப்பீடத்திலிருந்து பெறுகின்ற நாங்கள் அனைவரும் எல்லா விண்ணக ஆசியையும் அருளையும் நிறைவாகப் பெற்றுக் கொள்ளச் செய்தருளும்.(எபேசியர். 1:3).

இறைவா விசுவாசத்தின் அடையாளத்தைப் பெற்று இறந்து போன உம் அடியார்களையும்,சிறப்பாக இன்று யாருக்காக மன்றாடுகிறோமோ அவர்களையும் நினைவு கூர்ந்தருளும். (1 தெசெலோநிக்க 4:13, 14)

இறைவா இவர்களுக்கும், கிறிஸ்துவில் இளைப்பாறும் மற்ற அனைவருக்கும் இன்பமும், ஒளியும் அமைதியும் அளித்தருளும்.பாவிகளாகிய நாங்களும் உமது பேரிரக்கத்தை நம்பியிருக்கின்றோம். உம்முடைய புனித அப்போஸ்தலர், மறைசாட்சிகள், அருளப்பர், ஸ்தேபான், மத்தியாஸ்,
பர்னபா, மற்றப் புனிதர் அனைவருடனும் உம் அடியாராகிய எங்களுக்கும் பங்களித்து, அவர்களோடு நாங்கள் தோழமை கொள்ள அருள்புரியும். (கொலோ.1:12).

எங்கள் தகுதியின்மைப் பாராமல், எங்களை மன்னித்து, புனிதரின் அவையில் இடமளிக்குமாறு, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.(திருப்பாடல் 25:7)

இவர் வழியாகவே, இறைவா, நீர் எப்போதும் இவற்றையெல்லாம் நல்லவையாக்கி, புனிதப்படுத்தி, உய்வித்து, ஆசீர்வதித்து எங்களுக்கு அருளுகின்றீர்.(திருப்பாடல் . 104:27-28).

இவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.( உரோமையர் 11:36)

மக்கள்: ஆமென்.

பிற நற்கருணை மன்றாட்டுக்களும் அவற்றின் ஆதாரங்களும்

நற்கருணை மன்றாட்டு II

(2 மக்கபெயர் . 14:36; பிலி . 2:8; யோவான். 10:17-18; மாற்கு, 14:22-25; எபி . 2:14-15; யோவான் . 6:51; 1 கொரி . 10:17; 2 மக்கபே. 12:45-46; 2, தேசலோ. 1:4-5)

வானகத் தந்தையே, நீர் மெய்யாகவே தூயவர், புனிதத்திற்கெல்லாம் ஊற்று. ஆகவே, உம்முடைய தூய ஆவியைப் பொழிந்து , இக்காணிக்கைகளைப் புனிதப்படுத்த வேண்டுமென உம்மை மன்றாடுகிறோம். இவ்வாறு எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக எங்களுக்கு இவை மாறுவனவாக. அவர் பாடுபட மனமுவந்து தம்மைக் கையளித்தபோது, அப்பத்தை எடுத்து நன்றி. செலுத்தி, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது: அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள்; ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல். அவ்வண்ணமே, உணவு அருந்தியபின், கிண்ணத்தை; எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :   அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள்; ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.
இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக்கள்: கிறிஸ்து மரித்தார்; கிறிஸ்து உயிர்த்தார்; கிறிஸ்து மீண்டும் வருவார். ஆகவே, இறைவா, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பையும் உயிர்ப்பையும் நினைவு கூர்ந்து, வாழ்வுதரும் அப்பத்தையும் மீட்பளிக்கும் கிண்ணத்தையும் உமக்கு ஒப்புக் கொடுக்கின்றோம். உம் திருமுன் நின்று உமக்கு ஊழியம் புரியத் தகுந்தவர்களென எங்களை ஏற்றுக் கொண்டீர். எனவே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும், கிறிஸ்துவின் உடலிலும் இரத்தத்திலும் பங்குகொள்ளும் எங்களைத் தூய ஆவி ஒன்று சேர்க்க வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். இறைவா, உலகெங்கும் பரவியிருக்கும் உமது திருச்சபையை, சிறப்பாக எங்கள் திருத்தந்தை........ எங்கள் ஆயர்......... ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். எங்கள் அனைவரையும் அன்பின் நிறைவை அடையச் செய்தருளும்.

(தந்தையே, நீர் (இன்று) இவ்வுலகில் உம்மிடம் அழைத்துக் கொண்ட ....... என்னும் எம் சகோதரரை சகோதரியை) நினைவுகூர்ந்தருளும், இவர் திருமுழுக்கின் வழியாக உம் திருமகனுடைய சாவில் அவரோடு ஒன்றாய் இணைக்கப்பட்டது போல், உயிர்ப்பிலும் அவரைப் போல் இருக்கச் செய்தருளும். மேலும், உயிர்த்தெழும் நம்பிக்கையுடன் இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும், இறந்தோர் அனைவரையும் நினைவுகூர்ந்து, ஒளிமிக்க உம் திருமுன் ஏற்றுக்கொள்ளும். எங்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும். இறைவனின் கன்னித்தாயான மாட்ச்சிமிக்க மரியாள், புனித அப்போஸ்தலர் இவ்வுலகில் உமக்குகந்தவராய் இருந்தவர் ஆகிய புனிதர் அனைவருடனும் நாங்கள் நிலையான வாழ்வில் தோழமை கொண்டு, உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் புகழ்ந்தேத்தும் வரமருள உம்மை மன்றாடுகிறோம்

இவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.
மக்கள்: ஆமென்.

நற்கருணை மன்றாட்டு III

(தோபித்து . 8:5;யோவான் . 1:3; திருப்பாடல் . 113:3; லூக்கா . 22:19-20; 1 கொரி. 11:26; மாற்கு . 13:33; 2 கொரி . 5:19; எபே. 4:3; எபே. 5: 25-27; யோவான் . 17:22, 23; கொலோ . 1:4-5)

வானகத் தந்தையே, நீர் மெய்யாகவே தூயவர், உம்முடைய படைப்புகளெல்லாம் உம்மைப் புகழ்வது தகுமே. ஏனெனில், உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக, தூய ஆவியின் ஆற்றலால், அனைத்தையும் உய்வித்துப் புனிதப்படுத்துகின்றீர். கதிரவன் தோன்றி மறையும் வரை உலகெங்கும் உமது திருப்பெயருக்குத் தூய காணிக்கை ஒப்புக் கொடுக்குமாறு உமக்காக மக்களை இடையறாது ஒன்று சேர்த்து வருகின்றீர். ஆகவே, இறைவா, நாங்கள் உமது திருமுன் கொண்டு வந்துள்ள இக்காணிக்கைகளை அதே  தூய ஆவியால் புனிதமாக்கியருள வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். இவ்வாறு, உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக இவை மாறுவனவாக. அவர் பணித்தவாறே இத்திருப்பலியை நிறைவேற்றுகிறோம். ஏனெனில் அவர் கையளிக்கப்பட்ட இரவில், அப்பத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது : அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் ; ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல். அவ்வண்ணமே , உணவு அருந்தியபின், கிண்ணத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது : அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் ; ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம். இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக்கள்: ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.

ஆகவே, இறைவா, உம்முடைய திருமகனின் மீட்பளிக்கும் பாடுகளையும், வியப்புக்குரிய உயிர்ப்பையும், விண்ணேற்றத்தையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் மீண்டும் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள் இப்புனிதமான, உயிருள்ள பலியை நன்றியறிதலுடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். உமது திருச்சபையின் காணிக்கையைக் கண்ணோக்கியருள உம்மை மன்றாடுகிறோம். இப்பலியினால் நீர் உளம் கனியத் திருவுளமானீர். இதை நீர் ஏற்றுக் கொண்டு, உம்முடைய மகனின் திருவுடல் திரு இரத்தத்தினால் ஊட்டம் பெறும் நாங்கள் கிறிஸ்துவின் தூய ஆவியால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே மனமும் உள்ளவராக விளங்கச் செய்வீராக. இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக! இவ்வாறு , நீர் தேர்ந்து கொண்டவர்களோடு, சிறப்பாக இறைவனின் அன்னையாகிய புனிதமிக்க கன்னிமரியாள், உம்முடைய புனித அப்போஸ்தலர், மறை சாட்சியர் மற்றும் புனிதர் அனைவருடனும் நாங்கள் விண்ணகத்துக்கு உரிமையாளர் ஆவோமாக! இவர்களின் வேண்டுதலால், நாங்கள் எப்பொழுதும் உமது உதவியைப் பெறுவோம் என நம்பியிருக்கின்றோம்.

இறைவா, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்பலி உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தரவேண்டுமென்று மன்றாடுகிறோம். இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திருச்சபை, உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை.....எங்கள் ஆயர்.... ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், உமக்குச் சொந்தமான மக்கள் ஆகிய அனைவரும் விசுவாசத்திலும் அன்பிலும் உறுதிபெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி உம் திருமுன் நிற்கின்ற இக்குடும்பத்தின் வேண்டுதலுக்குக் கனிவாய்ச் செவிசாய்த்தருளும். இரக்கமுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய மக்களைத் தயவாய் உம்மோடு சேர்த்துக் கொள்ளும். இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும் உமக்கு உகந்தவர்களாய் இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும் உமது அரசில் தயவுடன் ஏற்றருளும். நாங்களும் அங்கு வந்து சேர்ந்து அவர்களோடு உமது மாட்சியைக் கண்டு, என்றும் மனநிறைவு அடைவோமென எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக நம்பியிருக்கின்றோம். அவர் வழியாகவே நீர் உலகிற்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர். இவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.
மக்கள்: ஆமென்.

நற்கருணை மன்றாட்டு IV

(ஆதி . 1:26; எசாயா . 55:6; 55:3; கலா . 4:4-5; எபேசியர் . 4:15; லூக் . 4:18; 1 கொரி . 15:54-57; யோவான் . 14:16; எபி . 9:15; யோவான் . 13:1; 1 கொரி . 11:23-25; யோவான் . 4:42; 1 பேதுரு . 3:18, 19; எபேசியர் . 1:19-20; மத் . 25:31; 1 கொரி . 12:12, 27; திருத்தூதர் பணி 10:35; உரோமையர். 8:20-21)

குரு : தூயவரான தந்தையே, உம்மைப் புகழ்கின்றோம்: ஏனெனில், நீர் மாண்புமிக்கவர். உமது ஞானமும் பேரன்பும் விளங்க, அனைத்தையும் செய்தருளினீர். மனிதர் எங்களை உமது சாயலாகப் படைத்து, படைத்தவராகிய உமக்கே நாங்கள் பணிபுரியவும், படைப்புகளை எல்லாம் ஆண்டு நடத்தவும், உலகம் அனைத்தையும் எங்கள் பொறுப்பில் ஒப்படைத்தீர். கீழ்படியாமல் நாங்கள் உமது நட்புறவை இழந்தபோதிலும், நீர் எங்களை சாவின் அழிவுக்கு விட்டு விட வில்லை. ஏனெனில், தேடுவோர் யாவரும் உம்மைக் கண்டடைய நீர் இரக்கத்துடன் துணைபுரிந்தீர். மேலும், எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளப் பன்முறை முன் வந்தீர், மீட்பினை எதிர்பார்க்க இறைவாக்கினா வழியாக எங்களுக்கு கற்பித்தீர் தூயவரான தந்தையே, காலம் நிறைவுற்ற போது, உமது ஒரே பேறான திருமகனை மீட்பராக அனுப்பும் அளவுக்கு, நீர் எங்களை அன்பு செய்தீர். அவர் தூய ஆவியால் கன்னிமரியாளிடம் உடலெடுத்து, மனிதராகப் பிறந்து, பாவம் தவிர மற்றனைத்திலும் எங்களைப் போல வாழ்ந்தார். ஏழைகளுக்கு ஈடேற்றம், சிறைப்பட்டோர்க்கு விடுதலை, துயருற்றோருக்கு மகிழ்ச்சி என்று நற்செய்தி கூறினார், உமது திட்டத்தை நிறைவேற்ற, தம்மைத் தாமே சாவுக்குக் கையளித்தார், இறந்தோரிடமிருந்து உயிர்த் தெழுந்து, சாவையழித்து புதுவாழ்வு தந்தார்.

தந்தையே இனிமேல் நாங்கள் எங்களுக்காக வாழாமல், எங்களுக்காக இறந்து உயிர்த்த அவருக்காகவே வாழும் பொருட்டு விசுவசிப்போர் எங்கள் மீது தூய ஆவியை உம்மிடமிருந்து முதற் கொடையாக அனுப்பினார். இவ்வாறு, அவரது அலுவலைத் தூய ஆவி இவ்வுலகில் தொடர்ந்து நடத்தி, புனிதமாக்கும் பணியை நிறைவேற்றி வருகின்றார். ஆகவே, இறைவா, தூய ஆவி இக்காணிக்கைகளைப் புனிதப் படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இவ்வாநு எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நிலையான உடன்படிக்கையாக எங்களுக்கு விட்டுச் சென்ற இந்த மாண்புமிக்க திருப்பலியை நாங்கள் நிறைவேற்றுமாறு, இக்காணிக்கைகள் அவரது உடலும் இரத்தமுமாக மாறுவனவாக! ஏனெனில், தூயவரான தந்தையே, உம்மால் அவர் மகிமை பெற வேண்டிய நேரம் வந்ததும், உலகில் இருந்த தம்மவர்மேல் அன்புகூர்ந்து அவர், இறுதிவரையும் அன்புகூர்ந்து, அவர்களோடு உணவு அருந்துகையில், அப்பத்தை எடுத்து, வாழ்த்துரைத்து, அதைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது : அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் ; ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல். அவ்வண்ணமே , உணவு அருந்தியபின், மகிமை மிகுந்த இக்கிண்ணத்தை வணக்கத்திற்குரிய தம் திருக்கைகளில் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது : அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் ; ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம். இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும். இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக்கள்: ஆண்டவரே, உலகின் மீட்பரே, எங்களை மீட்டருளும். உமது சிலுவையினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டவர் நீரே! ஆகவே, இறைவா, எங்கள் மீட்பின் நினைவை இப்பொமுது கொண்டாடும் நாங்கள் கிறிஸ்து இறந்ததையும் பாதாளங்களில் இறங்கியதையும் நினைவு கூர்கின்றோம். அவர் உயிர்த்ததையும், உமது வலப்பக்கத்திற்கு எழுந்ததையும் அறிக்கையிடுகின்றோம். மாட்சியுடன் அவர் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள், உமக்கு உகந்ததும் உலகிற்கெல்லாம் மீட்பளிப்பதுமான பலியாக அவருடைய திருவுடலையும் இரத்தத்தையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இறைவா, உமது திருச்சபைக்காக நீரே ஏற்பாடு செய்த இப்பலிபொருளைக் கண்நோக்கியருளும். இந்த ஒரே அப்பத்திலும் கிண்ணத்திலும் பங்கு பெறுகின்ற எல்லாரும் தூய ஆவியால் ஒரே உடலாக இணைக்கப் பெற்று, உமது மாட்சியின் புகழுக்காக, கிறிஸ்துவில் உயிருள்ள பலிப்பொருள் ஆகுமாறு தயவாய் அருள்புரியும்.

இறைவா, இன்று யாருக்காக இப்பலியை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோமோ, அவர்கள் அனைவரையும் இப்பொழுது நினைவு கூர்ந்தருளும், உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை....., எங்கள் ஆயர்.... ஆண்டகை, ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், பொது நிலையினர் ஆகிய அனைவரையும் நினைவு கூர்ந்தருளும். இப்பலியை ஒப்புக் கொடுப்போரையும், இங்கிருப்போர் அனைவரையும் உம் மக்கள் எல்லாரையும், நேர்மனத்தோடு உம்மைத் தேடிவரும் யாவரையும் நினைவு கூர்ந்தருளும். கிறிஸ்துவின் அமைதியில் இறந்தவர்களையும் நினைவு கூர்ந்தருளும். இறந்தவர்களில் உம்மீது விசுவாசம் கொண்டவர்கள் யாரென நீர் ஒருவரே அறிவீர். அவர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்தருளும்; இரக்கமுள்ள தந்தையே, இறைவனின் அன்னை புனிதமிக்க கன்னி மரியாள், உம் அப்போஸ்தலர், புனிதர் அனைவரோடும் உம்முடைய பிள்ளைகளாகிய நாங்களும் விண்ணகத்தை உரிமையாக்கிக் கொள்ள அருள்புரியும். பாவத்தினாலும் சாவினாலும் வரும் அழிவிலிருந்து விடுதலை பெற்ற படைப்புகள் அனைத்தோடும் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உமது அரசில் உம்மை புகழ்ந்தேத்துவோம். அவர் வழியாகவே நீர் உலகிற்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர். இவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.
மக்கள்: ஆமென்.

குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம். மக்கள்: பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக. உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென். (மத் . 6:9-13).

குரு : ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாய் இருப்போமாக! நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.(யோவான் . 17:15).

மக்கள்: ஏனெனில், அரசம்,வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே! (மத் . 6:14). குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, |அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்| என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே. மக்கள்: ஆமென்.(யோவான் . 14:27)

குரு : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.( யோவான் . 20:19).
மக்கள்: உம்மோடும் இருப்பதாக.

குரு : ஒருவருக்கொருவர் சாமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!
மக்கள்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ,எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.(யோவான் . 1:29).

குரு : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்!(திருவெளிப்பாடு . 19:9).

மக்கள்: ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.( மத் 8:8).

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள்: உம்மோடும் இருப்பாராக.

குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக! லூக்கா . 24:51
மக்கள்: ஆமென்.

குரு : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று(. லூக்கா . 7:50;2குறிப்பேடு . 35:3).
மக்கள்: இறைவா உமக்கு நன்றி.2 கொரி. 9:15