பிப்ரவரி 19

அர்ச். கொன்ராத். துதியர் 

கொன்ராத் என்பவர் இத்தாலியா தேசத்தில் பிரபு வம்சத்தில் பிறந்து நல்ல கிறீஸ்தவராய் வாழ்ந்து வந்தார். இவர் கலியாணம் செய்துகொண்டபின் தன் மனைவியுடன் அந்நியோன்னியமாய் வாழ்ந்து வந்தார்.

இவர் வேட்டையாடுவதில் மிதமிஞ்சின ஆசைவைத்து அதில் அதிக நேரத்தை செலவழிப்பார். ஒரு நாள் இவர் காட்டில் வேட்டையாடும்போது ஒரு மிருகம் புதரில் நுழைந்து கொண்டதினால், அதை வெளியே துரத்த இவர் பட்ட பிரயாசையெல்லாம் வியர்த்தமானதால் கொன்ராத் கோபங்கொண்டு அந்த புதருக்கு நெருப்பு வைத்தார்.

நெருப்பு பொறி தற்செயலாய்ப் பறந்து விளைச்சல் நிலத்தில் விழுந்ததினால் விளைச்சலுக்கு மிகுந்த நஷ்டம் உண்டானது. இதை அவர் கண்டு பயந்து அவ்விடத்தைவிட்டு ஓடிப்போனார். இவ்வளவு நஷ்டமுண்டாக்கினவன் யாரென்று அந்த ஊரார் கண்டுபிடியாததினால், காட்டில் திரியும் ஒரு இருளன்மேல் சந்தேகப்பட்டு அவன்தான் குற்றவாளியென்று அவன் மேல் குற்றம் சுமத்தினார்கள்.

அவனைச் சேவகர் மிகவும் உபாதித்தபோது வேதனையைப் பொறுக்கமுடியாமல், தானே காட்டுக்கு நெருப்பு வைத்ததாக ஒத்துக்கொண்டதினால், அவனுக்கு தண்டனை விதிக்கப்படும் சமயத்தில், கொன்ராத் நீதிமன்றத்திற்குச் சென்று தன் தவறை வெளிப்படுத்தி இருளனை விடுதலை செய்வித்து தன் சொத்துக்களையெல்லாம் விற்று நஷ்டப்பட்டவர்களுக்குக் கொடுத்துவிட்டார்.

தன் மனைவி ஒரு கன்னியர் மடத்தில் சேர சம்மதித்ததினால், கொன்ராத் அர்ச். பிரான்சீஸ்கு மடத்தில் சேர்ந்து தவஞ்செய்து வெள்ளிக்கிழமைதோறும் அங்கு வணங்கப்பட்ட ஒரு பாடுபட்ட சுரூபத்தைச் சந்தித்து மகா துக்கத்துடன் வேண்டிக்கொள்வார்.

ஒருநாள் வழக்கம்போல் அவர் ஜெபிக்கும்போது திருப்பாடுகளின் மட்டில் அவருக்குண்டான மனஸ்தாப் மிகுதியால் அங்கேயே உயிர் விட்டார்.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். பர்பாதுஸ், மே.