நவம்பர் 15

அர்ச். ஜெர்த்ருத்தம்மாள் கன்னிகை - (கி.பி. 1292).

சிறந்த குடும்பத்தைச் சார்ந்தவளும், அர்ச். மெக்டில்டெஸம்மாளின் சகோதரியுமான ஜெர்த்ருத், ஐந்து வயதில் ஒரு கன்னியர் மடத்திற்கு அனுப்பப்பட்டு, ஞானக் கல்வியையும் உலகக் கல்வியையும் கற்றுவந்தாள். 30-ம் வயதில் அந்த மடத்தின் அதிசிரேஷ்ட தாயாராக தெரிந்துகொள்ளப்பட்டாள்.

கர்த்தருடைய திருப்பாடுகளைக் குறித்தும் தேவநற்கருணையைக் குறித்தும் அவள் தியானிக்கும் போது, அவள் கண்களினின்று கண்ணீர் தாரை தாரையாக வடியும். அநேக சமயங்களில், அவள் ஜெப நேரத்தில் பரவசமாவாள். மேலும் இப்புண்ணியவதி நமது கர்த்தரை தரிசிக்கப் பாக்கியம் பெற்று, மோட்ச பேரின்பத்தை அனுபவித்தாள்.

தாழ்ச்சி, கீழ்ப்படிதல், இடைவிடா ஜெபம், ஒருசந்தி, சுத்தபோசனம் முதலியவைகளை அனுசரித்து, நாளுக்கு நாள் புண்ணிய வாழ்வில் உயர்ந்து வந்தாள். இவ்வளவு புண்ணியவதியாயிருந்தும், தன்னைத் தாழ்த்தி ஒன்றுக்கும் உதவாதவளென்று எண்ணி, மற்றவர்களுக்கு தாழ்ந்த வேலைகளையும் விருப்பத்துடன் செய்துவருவாள்.

மற்றக் கன்னியர் சிரேஷ்ட தாயாரின் புண்ணியச் செயல்களைக் கண்டு அதிசயித்து, அவளுடைய நன்மாதிரிகையைப் பின்பற்ற முயற்சிப்பர். ஜெர்த்ருத் தேவதாயார் பேரில் அதிக பக்தி வைத்திருந்தாள். உத்தரிக்கிற ஆன்மாக்கள் மட்டில் அவளுக்கிருந்த இரக்கத்தால், தன் ஜெபங்களை அந்த ஆன்மாக்களுக்காக ஒப்புக்கொடுப்பாள்.

ஜெர்த்ருத்தம்மாளின் சிறந்த புண்ணியங்களினிமித்தம் அவள் புதுமை வரம் பெற்றிருந்தாள். இந்தப் புண்ணியவதி மோட்ச பாக்கியத்தின் மட்டில் அதிக ஏக்கம் கொண்டு யாதொரு சரீர நோவுமின்றி சாகக் கிடக்கையில், நமது கர்த்தரும் அவருடைய திருத்தாயாரும் அவளுக்குத் தோன்றி அவள் ஆத்துமத்தை மோட்சத்திற்குக் கூட்டிக்கொண்டு போனார்கள்.

யோசனை

கர்த்தர் மட்டில் உள்ள தேவ சிநேகத்தால் அர்ச். ஜெர்த்ருத்தம்மாளுக்கு உண்டான பெரும் பாக்கியத்தை நாமறிந்து, நாமும் ஆண்டவரை எல்லாவற்றிற்கும் மேலாக சிநேகிப்போமாக.