நவம்பர் 13

அர்ச். ஸ்தனிஸ்லாஸ் துதியர் - (கி.பி. 1568).

இவர் பக்தியுள்ள தாய் தந்தையரிடத்தினின்று பிறந்து, புண்ணிய வழியில் கவனத்துடன் வளர்க்கப்பட்டார். இதனால் இவர் சிறு வயதிலேயே ஒரு அர்ச்சியசிஷ்டவரைப்போலக் காணப்பட்டார்.

கல்விப் கற்கும்படி தன் சகோதரனுடன் ஒரு பட்டணத்திற்கு அனுப்பப்பட்ட இவர், அவ்விடத்தில் புண்ணிய வாழ்வில் சிறந்து விளங்கினார். நாள்தோறும் திவ்விய பலிபூசை காண்பார். வாரந்தோறும் தேவநற்கருணை உட்கொள்வார். தினமும் கல்விக் கற்கச் செல்வதற்கு முன்பும், கற்ற பின்பும் கோவிலில் தேவநற்கருணையை சந்திப்பார்.

கெட்ட நண்பர்களை விலக்குவார். யாதொருவன் தகாத வார்த்தைப் பேசக் கேட்டால், ஸ்தனிஸ்லாஸ் அவ்விடத்தை விட்டு அகன்று போவார். இரவு வேளையில் விழித்திருந்து ஜெபம் செய்வார். முள்ளொட்டியாணம் முதலிய தபத்திற்குரிய பொருட்களை உபயோகிப்பார்.

உலக நாட்டமுள்ள இவருடைய தமயன், ஸ்தனிஸ்லாஸ் தன்னைப்போல ஆடல் பாடலுக்கு வராமலும், கெட்ட சிநேகிதருடன் சகவாசம் செய்யாமலும் இருப்பதைப்பற்றிப் பலமுறை இவரைத் திட்டி, அடித்து, உபாதித்தும், இவர் அவைகளையெல்லாம் பொறுமையுடன் சகித்துக்கொள்வார்.

இவர் கடின வியாதியுற்றபோது, தேவநற்கருணை பெற விரும்பினார். ஆனால், இவர் தங்கியிருந்த வீட்டுக்காரன் பதித மதத்தைச் சார்ந்திருந்தமையால், அவன் அவ்விடத்திற்குக் குருவானவர் வரச் சம்மதிக்கவில்லை. அப்போது இவர் விசுவாசத்துடன் வேண்டிக் கொண்டபோது, இரு சம்மனசுகள் இவருக்கு தேவநற்கருணையைக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

தேவமாதா ஸ்தனிஸ்லாசுக்குத் தோன்றி, சேசு சபையில் சேரும்படி அறிவித்ததினால், ஸ்தனிஸ்லாஸ் உரோமைக்குச் சென்று மேற்கூறிய சபையில் சேர்ந்தார்.

இவர் நவ சன்னியாசியாயிருந்த ஒன்பதரை மாதங்களுக்குள் சகல புண்ணியங்களையம் உக்கமமாக அனுசரித்து. இவர் விரும்பியபடி மோட்ச இராக்கினி மாதா திருநாளன்று மரித்து, மோட்ச ஆனந்தத்திற்குள்ளானார்.

யோசனை 

கல்விக் கற்கும் வாலிபர் அர்ச். ஸ்தனிஸ்லாஸின் மாதிரிகையைப் பின்பற்றக் கடவார்களாக.