பிப்ரவரி 09

அர்ச். அபொல்லோனியம்மாள். கன்னிகை, வேதசாட்சி (கி.பி. 1027)


அலெக்சாந்திரியா நகரில் அநேகர் சத்திய வேதத்திற்கு மனந்திரும்புவதைக் கண்ட அஞ்ஞானிகள் கிறிஸ்தவர்களை விரோதித்து வந்தார்கள். அவர்களுக்குள் ஒரு புலவன், கிறீஸ்தவ வேதத்தால் அப்பட்டணத்தாருக்குப் பல தீமைகள் உண்டாகுமென்று கூறியதை அவர்கள் நம்பி கிறீஸ்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள்.


இதையறிந்த கிறிஸ்தவர்கள் தங்கள் சொத்துக்களையும், வீடுகளையும் விட்டுவிட்டு வேறு இடங்களுக்கு ஓடிப் போனார்கள். அந்த நிஷ்டூரர், தங்கள் கைக்கு அகப்பட்ட கிறிஸ்தவர்களைக் குரூரமாய் வதைத்துக் கொன்றார்கள். அச்சமயம் சகல புண்ணியங்களையும் அநுசரித்து, சகலராலும் புகழப்பட்டு வந்த அபொல்லோனியா என்னும் தளர்ந்த வயதுள்ள கன்னிகையைப் அவர்கள் பிடித்துக் கிறீஸ்தவ வேதத்தை விடும்படி பயமுறுத்தியும், அவள் வேதத்தில் தளராமல் தைரியமாயிருந்தபடியால், அவளது மூக்கின் எலும்புகளை உடைத்துப் பற்களைப் பிடுங்கினார்கள்.

அவ்வளவு வேதனைப்படுத்தியும் அவள் பொய்த்தேவர்களை வணங்காததை அவர்கள் கண்டு, பெரும் நெருப்பு வளர்த்து, அதில் அவளைப் போட்டுச் சுட்டெரித்தார்கள். அப்போது ஜனங்களுக்குள் குழப்பமுண்டானதால், கிறிஸ்தவர்களுக்கு விரோதமாய் உண்டாயிருந்த வைராக்கியமும் பகையும் நீங்கிவிட்டது.

யோசனை

அழிவுக்குரிய இவ்வுலக நன்மைகளைவிட நமது விசுவாசத்தை அரிதான பொக்கிஷமாகப் பாவித்துக் காப்பாற்றுவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். நிஸபோரூஸ், க.வே.
அர்ச். தேலியோ, மே.
அர்ச். ஆன்ஸ்பெர்ட், அதிமே.
அர்ச். அத்திராக்தா, க.
அர்ச். ஏரார்ட், ம.