அறநெறி காட்டிய அருளாளர்

"அண்டவர் மேல் நம்பிக்கை வைப்பவர்கள் புதிய வலிமையைப் பெற்றுக்கொள்வர். கழுகுகளைப் போல் இறக்கைகள் பெற்றுப் பறந்திடுவர். ஒடுவார்கள், ஆனால் களைக்க மாட்டார்கள்; நடப்பார்கள், ஆனால் சோர்வடையமாட்டார்கள்" (இசையாஸ் 40/31)

இலத்திரன் திருச்சங்கம்

த அந்தோனியாரின் முதல் மறை உரைக்குப் பின் அவருக்கு பல்வேறு பொறுப்புகள் தரப்பட்டன. துன்மார்க்கம், பதிதம் இவற்றை மக்களிடமிருந்து நீக்க அந்தோனியார் தெரிந்து கொள்ளப்பட்டார். இறைவன் மீது பக்தியுடையவர். தேவ ஏவல் செய்வதில் பேரார்வம் கொண்டவர். அடக்கமானவர். சாந்த சீலர், கற்பின் கொடுமுடி யாவற்றிற்கும் மேலாய் தேவ ஆசீர் பெற்றவர். எனவே தான் ஆசிரியர் பணிக்கு தகுதியுடையவர் என மேலாளர்கள் முடிவு செய்தனர்.

அந்தோனியார் வரலாற்றினை எழுதியவர்கள் சம்பவங்கள் நடந்த காலத்தைக் குறிப்பிடவில்லை. புதுமைகளை ஆங்காங்கே தொகுத்து வைத்தனர். 1222-23 ஆண்டுகளில் வட இத்தாலியாவில் உள்ள ரோமாக்னா மாநிலத்தில் மறைத் தொண்டு செய்தார். 1224 முதல் மூன்று ஆண்டுகள் அவர் சேவை பிரான்ஸிற்குக் கிடைத்தது. ஸ்பெயின் நாட்டுக் கரையோரங்களில் அவர் போதித்ததாயும் தெரியவருகின்றது.

1227 முதல் 1230 வருடம் வரை இத்தாலி நாட்டில் உழைத்தார். கடைசி இரு ஆண்டுகள் அவர் பதுவை மாநாகரில் தங்கி வேத போதகஞ் செய்தார். இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்கு அவரது அரிய சேவை கிட்டியது. மிகவும் பயனடைந்தன. அசிசி அண்ணலைப் பின்பற்றி திறந்த வெளிகளில் மறை உரையாற்றி வந்தார்.

அக்காலத்தில் ஞான வாழ்வில் இல்லற வாசிகளிடையிலும், துறவியர் இடையிலும் தளர்ச்சி காணப்பட்டது. "ஞான ஆசிரியரின் வாழ்க்கை அவர்களது போதகத்திற்கு ஏற்ப அமைய வேண்டும்" என அந்தோனியார் எண்ணி கடின செப-தப வாழ்வின் மூலம், தம்மை அதற்கு முற்றிலும் தகுதியுடையவராக்கினார். பாவத்திலிருந்து மக்களை மீட்பதை தம் குறிக்கோளாகக் கொண்டார். பலருக்கு நல்லுபதேசம் செய்து நல்வழிப்படுத்தினார்.

விசுவாச தளர்ச்சி நிலவிய அக்காலத்தில் அதாவது 1251ல் இலத்தரன் திருச்சங்கம் கூடி, வருடத்திற்கு ஒரு தடவையாகிலும் நல்ல பாவச்கீர்த்தனம் செய்து நற்கருணை உட்கொள்ள வேண்டும் என அறிவித்தது.
''பாவ சங்கீர்த்தனத்தை இறைவனின் வீடு" என அழைக்கிறோம். ஏனெனில் அது பாவிகளுக்கு பாவமன்னிப்பு அருளி ஊதாரிமகன் தன் தந்தையிடம் ஒப்புரவானதைப் போல் இறைவனுடன் சமாதானம் செய்து வைக்கிறது.

பாவசங்கீர்த்தனம் "மோட்சத்தின் வாசல்” எனவும் அழைக்கப் படுகின்றது. பரமனின் திருவடிகளை பரத்தில் முத்தமிடச் செய்யும். அது உண்மையிலேயே பரலோகத்தின் வாசலே என அவர் நயம்பட உரைத்துள்ளார். அதனால் அவர் இந்த அருள் சாதனத்தை நிறைவேற்றறுவதில் அதிக அக்கறையும் காட்டினார்.

மறைநூல் ஆசிரியர்

ரிமினி, போலோநா நகரங்களின் கடற்கரைகளில் அந்தோனியார் பிரசங்கஞ் செய்து பலரை மனந்திருப்பினார். இவ்வேளை தூய அசிசியார் அந்தோனியார் குருமட மாணவர்களுக்கு இறை இயல் கற்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டார். அதனை ஏற்று போலோநாவிலும் பிரான்ஸ் நாட்டு தூலூஸிலும் மறை இயல் ஆசிரியராக பணியாற்றினார்.

அக்காலத்தில் பல பதித மதங்கள் எழுந்தன. அந்தோனியார் போன்ற பல மேதைகளால்தான் அவர்களுக்குத் தக்க பதில் தர இயலும். ஆகவே அந்தோனியாரைப் பற்றி நன்றிகறிந்த அசிசியார்; இளந் துறவிகளுக்கு இவர் மறை இயல் கற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இப் புதிய பணியையும் அவர் மனம் உவந்து ஏற்றார். வேதாகமம், அகஸ்தீனார் சித்தாந்தம், மறை இயல், திருச்சபை மேதைகளின் படிப்பினைகள் யாவற்றையும் திறம்பட எடுத்தோதினார். இந்நூல்களிலுள்ளவைகள் அவருக்கு மனப்பாடம்.

அவ்வளவு நினைவாற்றல் உடையவர். "இவரிடம் கலை பயில்வது பெரும் பேறு” என அவரது மாணவர்கள் மகிழ்ந்தனர்.