ஓ கன்னித்தாய் மாமரியே உம் திருத்தாள் எம் தஞ்சமே

ஓ கன்னித்தாய் மாமரியே
உம் திருத்தாள் எம் தஞ்சமே
விண்ணுலகும் போற்றும் எம் தாய்
மண்ணுலக மீட்பரின் தாய்
தந்தமய நல்லறமே சொர்ணமய ஆலயமே
வாக்குத்தத்த பெட்டகமே வள்ளல்மிகு ஆறுதலே
ஏவையின் வழி வந்த மக்கள் எம்மை
என்றும் அன்பாய் ஆதரியே

1. வானுலக ராணி நீயே வானகத்தின் ஏணி நீயே
ஞானம் நிறை ஊரணியே மன் சாலமோன் ஆலயமே
மீனணி தாங்கிய தலைவியே வெண்மதி பாதம் கொண்டவளே
வானம்புகழ் தேவி நீயே பாவிகட்கு தஞ்சம் நீயே
ஏனமுற்று நீவீர் எம்மை என்றும் அன்பாய் ஆதரியே

2. பொங்கும் அருள் தாய்மரியே விண்ணொளியின் தாரகையே
பாவம் இல்லா சீலி நீயே தயையுள்ள கன்னி நீயே
விண்ணவர் போற்றிடும் தலைவியே உத்தம தேவனைப் பெற்றவளே
விண்ணுலகாளும் இராணி நீயே ஒப்பில்லா மோட்ச இராக்கினியே
நாவினில் தித்திக்கும் உத்தமியே என்றும் அன்பாய் ஆதரியே