கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் 4 /25 ***


“ சூசையே ! தாவீதின் மகனே உன் மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம் “

                 மத்தேயு 1: 20

இயேசுவின் வளர்ப்பு தந்தையாக வளனாரை தேர்ந்தெடுத்தார் இறைவன். புனித சூசையப்பரும் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவரே ! சூசையப்பரை பற்றி விவிலியத்தில் இரண்டு இடங்களில் சொல்லப்படுகிறது. சூசையப்பர் ஒரு நீதிமான். நீதிமானாய் வாழ்வது சாதாரண விசயமல்ல.

இவருக்கு இயேசுவை வளர்க்கும் பொருப்பும் அன்னை கன்னிமரியாளுக்கு பாதுகாப்பாக இருக்கும் பொறுப்பும் தரப்பட்டது. அதிலும் குறிப்பாக அன்னை மரியாளுக்கு அடுத்தபடியாக இயேசுவை கரங்களில் சுமந்தவர் புனித சூசையப்பர். இவருக்கும் இயேசுவை அள்ளி அனைக்க, கொஞ்ச எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை. சூசையப்பரின் எந்த அளவு இயேசுவையும், அன்னை மரியாளையும் அறிந்து வைத்திருந்தார் என்பதற்கு உதாரணம். இவர் உயிர்விட்டது இயேசுவின் மடியில், அன்னை மரியாளின் கரங்களை பற்றிக்கொண்டே உயிர் விட்டார். தன் பிள்ளை இயேசுவின் மடியில் மரிக்கும் பேறு பெற்றவர். தன் மகன் இயேசு கடவுள் என்பதை அறிந்து இருந்ததால்தான் அவரால் இயேசுவை முழுமையாக உணர முடிந்திருந்தது.

புனித சூசையப்பர் எவ்வளவு உன்னதமான மனதை பெற்றிருந்தார் என்பதற்கு இன்னொரு உதாரணம்,

“ சூசை நீதிமானாகவும் அவளை காட்டிக்கொடுக்க மனமில்லாதவராகவும் இருந்ததால் அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார் “ மத்தேயு 1: 19

இதே சூழ்நிலை நம்மவர்களுக்கு வந்திருந்தால் ஊரையே கூட்டி தன் மனைவியாக வர இருந்தவளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்தியிருப்பார்கள்.

சூசையப்பர் அவ்வாறு செய்யவில்லை. பொறுமையாக இருந்தார். மறைவாக விலக்கிவிடலாம் என்றிருந்தது அவரின் பெருந்தன்மையையும், அவரின் நீதிமான் தன்மையையும் காட்டியது.

அன்னை இயேசுவை பெற்றெடுக்கும் வரை புனித சூசையப்பரும் அன்னையோடு கஷ்ட்டப்பட்டார். மாதாவை கூட்டிக்கொண்டு வானதூதர் சொல்லும் இடங்களுக்கெல்லாம் கூட்டி அலைந்தார். அன்னையின் பேறு கால வேதனையின் போது இடம் கேட்டு எத்தனை வீட்டுக் கதவுகளை தட்டியிருப்பார். எவ்வளவு துடித்திருப்பார். கடைசியில் அவருக்கு கிடைத்த மாட்டுத்தொழுவத்தில் கொஞ்சம் சரி செய்து அன்னைக்கு கொடுத்திருப்பார். அப்போது அவர் பட்ட வேதனையையும், இயேசுவை கொல்ல எரோது துடிக்க கனவில் எச்சரிக்கப்பட்டு மாதாவையும், பாலகன் இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போன போது அவர் அடைந்த இன்னல்களையும் நினைத்துப்பார்ப்போம்..

சூசையப்பர் நீதிமான். அவர் இயேசுவின் வளர்புத் தந்தை என்பதில் அவர் வாழ்க்கையே அடங்கிவிடுகிறது. சூசையப்பர் இயேசுவை கண்டு கொண்டது போல நாமும் இயேசுவை கண்டு கொள்வோமா?

ஜெபம் : தாவீதின் மகனே ! பாலகன் இயேசுவை கரங்களில் தாங்கியவரே ! நீதிமானே ! புனித தூய சூசையப்பரே உம்மை போல எங்களுக்கும் இயேசுவை முழுமையாக கண்டு கொள்ள வரம் தாரும்.

மேலும் எத்தனையோ இல்லங்களில் சந்தேகம் என்ற கண்களுக்கு புலப்படாத ஜந்து கணவன்மார்களின் உள்ளங்களிலும், மனைவிமார்களின் உள்ளங்களிலும் புகுந்து குடும்ப நிம்மதியை குலைத்து, சமாதானத்தை குலைத்து, குழந்தைகளின் வாழ்வை சிதைத்து கடைசியில் குடும்பத்தை மயானமாக்கிவிடுகிறது..அது போன்ற குடும்பங்கள் மேல் மனமிரங்கும்.

குடும்ப ஜெபமும், குடும்ப ஜெபமாலையும் இருக்கும் குடும்பத்தில் இது போன்ற சாத்தான்கள் நுழைய முடியாது என்பதை  அந்த குடும்பங்களுக்கு உண்ர்த்துங்கள்.

எங்கள் உள்ளங்களும் உம்முடைய உள்ளம் போல் தூய்மையாக தெள்ளந்தெளிவாக மாறி தூய பாலகன் இயேசு எங்கள் உள்ளங்களில் பிறக்க எங்களை தகுதியானவர்களாக மாற்றும் - ஆமென்