சனிக்கிழமை காலைச் செபம்

பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தினாலே ஆமென். 

திரிக்காலச் செபஞ் செபிக்கவும்

பர அருள் விசுவாச மந்திரம் சொன்ன பிறகு பின் வரும் செபத்தைச் செபிக்கவும்.

சேசுவின் மதுரம் பொருந்திய இருதயமே அடியேன் உம்மை என்றைக்கும் மென்மேலும் நேசிக்க அனுக்கிரகம் செய்தருளும்.

நீ படுக்கையை விட்டு எழுந்திருக்கிறபோது உனது முதல் செயல் நமது இருதயத்தை வணங்குகிறதாயிருக்க வேண்டுமென்று ஆண்டவர் அர்ச். மெக்தில் தம்மாளுக்குத் திருவுளம் பற்றினார். செபத்தில் முழு நம்பிக்கையோடு தன்னைத் தேவ காவலுக்கு ஒப்புக் கொடுக்கிறவனைக் கைவிடுகிறதில்லை என்று அர்ச் ஜெர்த்துருத்தம்மாளுக்கு வெளிப்படுத்தினார்.

ஓ சேசுவே வசந்தகாலத்தில் வீசும் காற்று குளிர்ச்சியைத் தந்து இன்பம் தருவது போல அருட்சுனையால் எல்லா நன்மை களையும் ஆனந்தங்களையும் தருகிற உமது திரு இருதயத்தை வணங்கி நமஸ்கரித்துப் போற்றிப் புகழ்கிறேன். இராத்திரியில் என்னைக் காப்பாற்றினதற்காகவும் எனக்காகப் பரம பிதாவுக்கு நன்றியறிந்த புகழ் புரிந்ததற்காகவும் என் இருதய பலம் கொண்ட மட்டும் உமக்கு நன்றியறிந்த நமஸ்காரம் செய்கிறேன்.

எனது மதுரம் பொருந்திய அன்பே! காலைப் பலியாக என் இருதயத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். அதை உமது இரக்கம் பொருந்திய இருதயத்தில் வைத்து அதில் உமது தேவ ஏவுதல்களைப் பொழிந்து உமது பரிசுத்த அன்பை அதில் கொளுத்த உம்மை மன்றாடுகிறேன்.

மகா இரக்கம் நிறைந்த சேசுவே, நீர் சிலுவையில் உமது ஆத்துமத்தைப் பிதாவுக்கு ஒப்புக் கொடுத்த அன்புக்கு ஐக்கியமாக என் ஆத்துமத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். உமது மாசற்ற அவயவங்களோடு ஐக்கியமாக என் சரீரத்தின் சகல அவயவங் களையும் உமக்கு ஒப்புக் கொடுக்க இந்த நாளில் அவைகள் உம்முடைய ஸ்தோத்திரத்திற்காகவே அசையும்படி மன்றாடுகிறேன்.

அன்பு நிறைந்த சேசுவே! உம்மை நோக்கிப் பெருமூச்சு விட்டு இன்று என் ஆத்துமத்தினுடையவும் சரீரத்தினுடையவும் சகல கிரிகைகளும் உம்மைப் பற்றி உமக்காக செய்யப்பட மன்றாட நான் தேவரீரோடு இப்போது செய்கிற உடன்படிக்கையைக் கையேற்க கெஞ்சுகிறேன்.

அது என்னவென்றால் நான் வானத்தை அண்ணார்ந்து பார்க்கும் போது உமது திரு இலட்சணங்களைக் கண்டு மகிழ்ந்து, உமது உத்தம் தாசர்களோடு நான் நித்திய காலம் வாழ ஆசிப்பதாக வைத்துக் கொள்ளும். நான் என் கண்களை திறக்கும்போதும் மூடும் போதும் தேவரீர் செய்தருளிய பரிசுத்த கிருயைகளையும், வானத்திலும் பூமியிலுமிருக்கிற உமது தாசர்கள் செய்யப்போகிற சகல நற்கிரியைகளையும் கண்டு மகிழ்ந்து அவைகளை நான் கண்டு பாவிக்க ஆவலோடு ஆசைப் படுவதாக வைத்துக்கொள்ளும்.

நான் மூச்சு விடும் போதெல்லாம் உலக ஆரம்பந்தொட்டு உமக்கு விரோதமாய்க் கட்டிக் கொள்ளப்பட்ட சகல பாவங்களையும் நான் அருவருத்துத் தள்ளுவதாக வைத்துக் கொள்ளும். நான் கையையாகிலும் காலையாகிலும் அசைக்கும்போது, நான் உமது சித்தத்திற்கு எல்லாவற்றிலும் ஒத்து அநித்தியத்திற்கும் நியாயத்திற்கும் என் மனது உமது சித்தத்திற்கு ஒத்திருக்க நான் விரும்புவதாக வைத்துக்கொள்ளும். இந்த உடன்படிக்கைகளை உமது ஐந்து திருக் காயங்களின் முறிவுகளால் முத்திரை இடுகிறேன்.

ஆண்டவரே, உம்மை நோக்கி கூப்பிடுகிறேன், விடியற் காலத்தில் என் வேண்டுதல் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது. என் நாவில் உமது தோத்திரம் நிறைந்திருக்கக்கடவது. நான் உமது மகிமையைப் பாடி நாள் முழுவதும் உமது மகத்துவத்தைப் பாராட்டுவேனாக. ஆண்டவரே, என் பாவத்தைப் பாராமல் உமது முகத்தைத் திருப்பிக் கொண்டு என் அக்கிரமங்களை நிர்மூலமாக்கியருளும்.

சர்வேசுரா, பரிசுத்த இருதயத்தை என்னிடத்தில் உண்டு பண்ணியருளும். சரீர புலன் நாட்டங் கொண்ட என் புத்தியைப் புதுப்பித்தருளும். என்னை உமது சந்நிதியிலிருந்து தள்ளி விடாதேயும். உமது இஸ்பிரீத்துசாந்துவை என்னிடத்திலிருந்து பறித்துக் கொள்ளாதேயும். உமது இரட்சண்ணியத்தின் ஆனந்தத்தை எனக்குத் தந்தருளும். சரியான புத்தியைத் தந்து என்னைத் திடப்படுத்தியருளும்.

ஆண்டவரே, உமது திரு நாமத்தில் எங்கள் மகிமை அடங்கியிருக்கின்றது. நீரே பரலோகத்தையும் பூலோகத்தையும் சிருஷ்டித்தவர். இன்று யாதொரு பாவத்தில் விழாதிருக்க உமது அனுக்கிரகத்தைத் தந்தருளும். ஆண்டவரே! எங்கள் பேரில் தயையாயிரும். ஆண்டவரே, உமது தயை எங்கள் பேரில் இறங்கக்கடவது. அது என்னவெனில் உமது நம்பிக்கையை வைக்கிறோம்; ஆண்டவரே. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். என் அபயக் குரல் உமது சந்நிதி மட்டும் வரக்கடவது.

அர்ச். தேவமாதாவே! என் ஆண்டவளே! நான் இன்று வரப்பிரசாதத்தில் தனவானும், துர்க்குணங்களையும் பாசங்களையும் உலகம், பசாசு, சரீரத்தையும் வெல்வதில் தீரனுமாகி, காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், பிறர் நிந்தை, அச்சம் காய்மகாரம் முதலிய விகாரங்களில் ஜெயம் அடையச் செய்யும் சகல சம்மனசுகளே, என் காவலரான சம்மனசுக்களே சகல அர்ச்சியசிஷ்டர்களே, நான் பேர் கொண்டிருக்கிற அர்ச்சிய சிஷ்டவரே, நான் இன்று உட் பகையை வென்று, தின்மைக்கு நன்மை செய்து ஆசைகளை அடக்கத் தவம், தூய்மை வீரங்கொண்டு தியான யோகம் அடைய எனக்காக ஆண்டவரை வேண்டிக் கொள்ளுங்கள். ஆமென்.

மரியம்மாளின் மதுரம் பொருந்திய இருதயமே, எனது இரட்சணியமாயிரும்

முப்பத்து மூன்று மணிச் செபம்

லூர்து மாதாவின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும். மற்றதும்

தேவ மீட்பரை எங்களுக்காகத் தந்த அமலோற்பவியான அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ இரக்கத்திற்கு ஆச்சரியக் கருவியான அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

லூர்து மலையில் தரிசனையான அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகப் புத்தியிலிருந்து நாங்கள் நீங்க வேண்டுமென்று எங்களுக்குப் படிப்பிக்கத் தனிவாசக் குகையில் தரிசனையான அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரலோக மகிமையை எங்களுக்கு அறிவுக் கண் கூசும் பிரகாசத்தால் சூழப்பட்டத் தரிசனையான அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆத்தும செளந்தரியத்தை நாங்கள் ஆசிக்க வேண்டுமென்று எங்களுக்குப் படிப்பிக்கக் கண்களைப் பறிக்குஞ் சுந்தர வடிவமாகத் தரிசனையான அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவமின்றி புண்ணியங்களால் நாங்கள் சிறந்தவர்களாயிருக்க வேண்டுமென்று எங்களுக்குப் படிப்பிக்கத் தூய வெள்ளை நிற ஆடையை அணிந்த விதமாய்த் தரிசனையான அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரிசுத்த கற்பையும் கிறிஸ்துவப் புண்ணியங்களையும் சம்பாதிக்கத் தைரியமும் பலமுங்கொள்ள வேண்டுமென்று எங்களுக்குப் படிப்பிக்கப் பூ நீல நிறக்கச்சை அணிந்து தரிசனையான அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அடக்கம் புண்ணியங்களின் ஆதரவென்று எங்களுக்குப் படிப்பிக்க நீண்ட வெள்ளை வஸ்திரத்தை அணிந்தவிதமாய்த் தரிசனையான அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நித்திய பாக்கியத்தின் நினைவிலிருந்து நாங்கள் அகலாத படிக்குப் பரலோகத்தைப் பார்த்த வண்ணமாய்த் தரிசனையான அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபமாலைச் செபித்து அதன் தேவ இரகசியங்களை நாங்கள் தியானிக்கத் தக்கதாகச் செபமாலையைக் கையில் ஏந்தினபிரகாரம் தரிசனையான அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இந்த உலகமாகிய கண்ணீர்க் கணவாயில் நம்பிக்கையோடு நாங்கள் நடக்க வேண்டுமென்று காண்பிக்க, நீர் கல்லிலும் முள்ளிலும் பாதரட்சையின்றிக் காலூன்றி நின்று தரிசனையான அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சுவாமியைப் பற்றி உலகத்தால் இகழப்படுகிறவர்களையும் தாழ்ச்சியுள்ளவர்களையும் மாத்திரமே சர்வேசுரன் மிகவும் நேசிக்கிறாரென்று காண்பிக்க, ஒரு சிறிய பெண்ணுக்குத் தரிசனையான உம்மைக் கொண்டு எங்களுக்கு அற்புதங்கள் ஆகுமென்று காண்பிக்க அந்தப் பெண்பிள்ளையால் நலமாக ஊற்று உண்டாகச் செய்த அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உமது வல்லபத்தையும் தயையையும் காண்பிக்கத் தாராளமாய் நீர் சுரக்கச் செய்த அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவிகளைத் திருப்புகிற அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தர்மாத்துமாக்களைப் புண்ணியங்களில் உறுதிப்படுத்துகிற அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செத்தவர்களை எழுப்புகிற அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குருடர்களுக்கு கண் கொடுக்கிற அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஊமைகளைப் பேசச் செய்கின்ற அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாதிக்காரரின் வியாதிகளைத் தீர்க்கிற அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதல் தருகிற அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவசரத்தில் உதவுகின்ற அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எல்லாராலும் கொண்டாடப்படுகிற அர்ச். லூர்து மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருச்சபைக்காக மன்றாடவேண்டுமென்று உம்மைப் பிரார்த்திக்கிறோம்.

அர்ச். பாப்பரசருக்காகவும் எங்கள் தாய் நாட்டிற்காகவும் மன்றாட வேண்டுமென்று உம்மைப் பிரார்த்திக்கிறோம்.

எங்கள் உறவின்முறையாருக்காக மன்றாடவேண்டுமென்று உம்மைப் பிரார்த்திக்கிறோம்.

எங்கள் சத்துருக்களுக்காக மன்றாடவேன்டுமென்று உம்மைப் பிரார்த்திக்கிறோம்.

புறவினத்தார் அக்கியானிகள் மனந்திரும்ப வேண்டுமென்று உம்மைப் பிரார்த்திக்கிறோம்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற, மற்றதும்.

எங்கள் மன்றாட்டுகள் தேவனால் அங்கீகரிக்கப்படும் பொருட்டு அர்ச் லூர்து ஆண்டவளே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்.

ஒர் ஏழைப் பெண் பிள்ளைக்குத் தரிசனையான களங்கமில்லாக் கன்னித்தாயாரே! தேவரீர் எங்களுக்கு அறிக்கை செய்த பிரகாரம் நாங்கள் பாலகர்களுக்கு அடுத்த தாழ்ச்சி சாந்தகுணமுள்ளவர்களாயிருக்கத் தயை செய்தருளும். நாங்கள் கட்டிக் கொண்ட பாவங்களுக்குத் தபசு செய்து, பாவத்தை முழுவதும் விட்டு, மென்மேலும் புண்ணியங்களால் உயர ஆண்டவரை மன்றாடும். நாங்கள் தப்பாத மோட்ச முடிவு பெறப் பாத்திரவான்கள் ஆகும் பொருட்டு, உமது திரு இருதயம் எங்களை நோக்கவும், எங்களுக்கு ஏராளமாய் அருள் மழை பொழியச் செய்யவும் உம்மைப் பார்த்துப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.

ஆமென்.