நோன்பின் தன்மை

5ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த நோன்பின் தன்மை பற்றி சோக்கிரட்டிஸ் என்னும் வரலாற்று ஆசிரியர் கீழ்கண்டவாறு விபரிக்கின்றார், 'சிலர் உயிருள்ள எந்தப் பிராணியையும் தவிர்த்தனர். வேறு சிலர் மீன் தவிர்ந்த ஏனைய உயிர்ப் பிராணிகளைத் தவிர்த்தனர். சிலர் மீனுடன் பறவை இனத்தை மட்டும் உண்டனர். ஏனெனில், மோசேயின் மரபில் கூறப்பட்டுள்ள படைப்புப் பற்றிய விபரிப்பின்படி பறவைகளும் நீரிலிருந்து தோற்றம் பெற்றவை. வேறுசிலர் வன்மையான ஓட்டினால் மூடப்பட்டுள்ள பழங்கள், முட்டைகள் என்பவற்றைத் தவிர்த்தனர். வேறும் சிலர் காய்ந்த பாண் துண்டு மட்டும் உண்டனர். மற்றும் சிலர் இதனையும் தவிர்த்தனர். சிலர் பி.ப. மூன்று மணிவரை யும் நோன்பிருந்து பின்பு பலவகை உணவையும் உண்டனர். இவ்வாறாக நோன்புத் தன்மை பற்றி மாறுபாடான முறைகள் பின்பற்றப்பட்ட வேளையில் சிலர் கடுமையான நோன்பைக் கடைப்பிடித்தனர்.

தூய வாரநாட்களில் பொது நிலையினரும் 24 மணித்தியாலங்கள் நோன்பு கடைப்பிடிக்கும்படி கோரப்பட்டனர். சிலர் தவக்காலத்தின் சில வாரங்களில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் உணவு உட்கொண்டு மிகமிகக் கடுமையான நோன்பை மேற்கொண்டனர். எனினும் நோன்பு மேற்கொள்வது பற்றிய பொதுவான ஒழுங்கின்படி ஒரு நாளையில் ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ளலாம். இவ்வொரு வேளை உணவையும் மாலையில் மட்டுமே உண்ணலாம் என்பதாகும். தூய வாரத்தில் அல்லது பெரிய வெள்ளிக்கிழமையில் பாண், உப்பு, மரக்கறி மட்டுமே உட்கொள்ளப்பட்டது. சிலர் தவக் காலத்தில் சிறிய துண்டுப் பாணுடன் ஒரு முட்டையும், தண்ணீர் கலந்த சிறிதளவு பாலும் உட்கொண்டனர். எட்டாம் நூற்றாண்டில் முட்டை, வெண்ணெய் [cheese), மீன் ஆகிய உணவுகளையும் விலக்குதல் பெரும் புண்ணியமாக கருதப்பட்டது.

ஆயினும் புனித கிறகோரியார் இங்கிலாந்து நாட்டு புனித அகுஸ்தி னாருக்கு எழுதும்போது தமது மக்கள் இறைச்சி, பால், வெண்ணெய்க் கட்டி, முட்டை என்பவற்றை விலக்குவதாகக் குறிப்பிட்டிருந்தார். இவ் விடயம் பின்பு ஒரு கட்டளையாக மாற்றப்பட்டுத் திருச்சபையின் பொது விதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் (Lacticinia பால் உணவு வகை) உட்கொள்வதற்கு நிபந்தனையுடன் விதிவிலக்கு அளிக்கப் பட்டது. அதன்படி (Lacticinia பால் உணவு வகை) உட்கொள்ளுபவர்கள் திருச்சபையின் அறப்பணிக்கு நிதி பங்களிப்புச் செய்யவேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்த விதிவிலக்கு ஜேர்மன் நாட்டின் Butterbriefe என அழைக்கப்பட்டது. இவ்வாறாகப் பல ஆலயங்கள் கட்டப் படுவதற்கு ஒரு தொகுதிப் பணத்தை பெறுவதற்கு இம்முறை பயன் பட்டது. ஜேர்மனியின் புகழ்பெற்ற Rauen என்னும் பேராலயத்தின் கோபுரம் Butter Tower என அழைக்கப்பட்டது. இவ்வாறு தவக்காலத் தில் விலக்கப்பட்ட முட்டை, பால் உண்ணும் மரபே பின்பு உயிர்ப்பு விழாவில் முட்டை வழங்கும் பாரம்பரியத்துக்கு வித்திட்டதெனக் கொள்ளப்படுகிறது.