ஆலயங்களில் சிலுவைப்பாதை

17ஆம் நூற்றாண்டிற்குப் பின்பே ஆலயங்களில் சிலுவைப்பாதை நிலைகளை அமைக்கும் நடைமுறை பொதுமைப்படுத்தப்பட்டு, மக்கள் மயப்படுத்தப்பட்டதாக மாறியது. இவ்வாறு மக்கள்மயப்படுத்தப்பட்ட மைக்கு பாவமன்னிப்புச் சலுகை இதனுடன் இணைக்கப்பட்டிருந்தமை முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இந்நடைமுறையானது பிரான்சிஸ்கன் சபைக்குருமாருடன் ஆரம்பிக்கப்பட்டது.

ஏனைய சபையினர் இது தொடர்பாக வழங்கிய பங்களிப்புப் பற்றி அறிய முடியாதுள்ளது. ஜெருசலேமின் புனித இடங்களைத் தரிசிப்போருக்கு சிறப்பான பாவ மன்னிப்புச் சலுகை வழங்கப்பட்டிருந்தமை பற்றி ஏற்கனவே குறிப்பிடப் பட்டுள்ளது. ஜெருசலேம் சென்று புனித இடங்களைத் தரிசித்து பாவ மன்னிப்புச் சலுகையைப் பெறும் வசதி பல மக்களுக்குக் கிட்டவில்லை.

இப்பின்புலத்திலேயே ஏனைய மக்களுக்கும் இச்சலுகையைப் பெற்றுக் கொடுக்க பிரான்சிஸ்கன் சபையினர் திருத்தந்தையிடம் வேண்டுகோள் விடுத்தபோது 1686இல் திருத்தந்தை 9ஆம் இனசன்ற் கீழ்க் குறிப்பிடும் நிபந்தனையைப் பூர்த்தி செய்வோருக்கு இச் சலுகையை வழங்கினார். அதாவது பிரான்சிஸ்கன் சபைத் துறவியர்களின் எல்லா ஆலயங் களிலும் சிலுவைப்பாதை நிலைகள் அமைக்கப்பட்டு சிலுவைப்பாதைப் பக்தி முயற்சியை மேற்கொள்ளும்போது புனித பூமியின் முக்கிய இடங்களை தரிசித்துப் பெற்றுக்கொள்கின்ற பாவமன்னிப்புச் சலுகையை இதன் வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும்.

இச்சலுகையானது பிரான்சிஸ்கன் சபையுடன் இணைந்திருந்த ஏனையோர்க்கும் வழங்கப்பட்டது. திருத்தந்தை 12ஆம் இனசன்ற் 1694இல் இச்சலுகையை உறுதிப்படுத்தினார். திருத்தந்தை 13ஆம் பெனடிக்ற் 1726இல் இச்சலுகை பிரான்சிஸ்கன் சபையினருக்கும் அவர் களுடன் இணைந்தவர்க்கும் மட்டும் என்னும் நிலையிலிருந்து மாற்றி, இதை எல்லா மக்களுக்கும் விரிவுபடுத்தினார்.

1731இல் திருத்தந்தை 12ஆம் கிளமென்ற் இச்சலுகையை எல்லா ஆலயங்களுக்கும் அளித் தார். எனினும் சிலுவைப்பாதை நிலைகள் அமைக்கப்படும்போது, குறிப்பிட்ட மறைமாவட்ட ஆயரின் அனுமதியுடன் ஒரு பிரான்சிஸ்கன் சபைத் துறவியினாலேயே அமைக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தார். இதே திருத்தந்தை சிலுவைப்பாதை நிலைகள் பதினான்கு எனத் திட்டவட்டமாக அறிவித்தார்.

1742 இல் திருத்தந்தை 14ஆம் ஆசீர்வாதப்பர் இது திருச்சபையின் பெரும் செல்வம் எனக்கூறி எல்லா ஆலயங்களிலும் சிலுவைப்பாதை நிலைகளை அமைக்கும்படி எல்லாக் குருமாருக்கும் ஆலோசனை வழங்கினார்.

1857இல் இங்கிலாந்தில் பிரான்சிஸ்கன் சபைக்குருமார் இல்லாத இடத்து ஆயர்களே தமது மறைமாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிலுவைப்பாதை நிலைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இவற்றிற்குப் பாவமன்னிப்புச் சலுகையும் வழங்கப்பட்டிருந்தது. 1862இல் இச்சலுகை மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஆயர்கள் தமது நிர்வாகத்தில் உள்ள எல்லா ஆலயங்களிலும் தாமாகவோ அல்லது தமது பிரதிநிதி கள் மூலமாகவோ சிலுவைப்பாதை நிலைகளை நிறுவும் அதிகாரம் வழங்கப்பட்டது.

புனித பூமியைத் தரிசித்துப் பெறும் பாவமன்னிப்புச் சலுகை எந்த ஆலயத்தில் சிலுவைப்பாதை பக்தி முயற்சியை நிறைவேற்றியும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பாவமன்னிப்புச் சலுகை எத்தனை நாட்களுக்குரியது என வரையறை செய்வதை விசுவாசப் பரம்புதல் சபையின் அறிவுறுத்தல் தடை விதித்தது.