மரியாயின் மாசற்ற இருதயத்துக்குப் பரிகாரம் செய்யும் முறை

சேசுவின் திரு இருதய பக்திக்கு இணையான  மரியாயின் மாசற்ற இருதய பக்தி

மாதாவின் இருதயம் “துயரம் நிறைந்த மரியாயின் மாசற்ற இருதயம்” என்று அழைக்கப்படுகிறது. “மாசற்ற” என்ற அடைமொழி சர்வேசுரனால் மாதாவுக்கு அளிக்கப்பட்டது. “துயரம் நிறைந்த” என்ற அடைமொழி நம் மீதுள்ள அன்பால் நம் இணைமீட்பராயிருக்கிற மாதாவே சம்பாதித்தது.

மாதா இப்போது மோட்சத்தில் இருப்பதால் “துயரம் நிறைந்து” இருக்க முடியாதே! அவர்கள் முடிவில்லாத மோட்ச பாக்கியத்தையல்லவா அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சிலர் நினைக்கக்கூடும். மோட்சம் என்பது என்ன? அன்புதான். மாதாவின் மோட்சம்: கடவுளையும் நம்மையும் அவர்கள் நேசிப்பதும் கடவுளும் நாமும் அவர்களை நேசிப்பதும்தான்.

இதிலே தமதிரித்துவ சர்வேசுரன் மாதாவையும், மாதா சர்வேசுரனையும் நேசிப்பதில் எந்தக் குறையும் இல்லாமல் அவர்கள் மோட்ச பாக்கியத்தை அனுபவிக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் நம்மை நேசிப்பதிலும் நாம் அவர்களை நேசிப்பதிலும் மோட்ச ஆனந்தம் இன்னும் பூரணமாகவில்லை. 

நம் பாவங்களால் அவர்கள் வருந்துகிறார்கள்.  ஏனெனில் அவை கடவுளை நோகச் செய்கின்றன, நம்மையும் கேட்டுக்கு உள்ளாக்குகின்றன.  அதனால் மாதா நம்மை நேசிக்கிற அன்பு இரக்கமுள்ள பரிதவிக்கும் அன்பாகவே இருக்கிறது.  நாம் மோட்சம் போய்ச் சேருமட்டும் அது அப்படித்தான் இருக்கும்.  நம் பாவங்களால் நாமும் மாதாவை முழு அன்புடன் நேசிக்க முடிவதில்லை. 

ஆகவே நம் அன்பு மாதாவுக்கு சரியாகக் கிடைப்பதில்லை. இதனால் மாதாவின் மாசற்ற இருதயம் நொந்து கொண்டே இருக்கிறது.  நம் பாவ நிலை நீங்கி நாம் மோட்சத்தில் ஆண்டவரையும் மாதாவையும் பூரணமாக நேசிக்கும் வரையிலும் மாதாவின் இருதயம் “துயரம் நிறைந்த” இருதயமாகவே இருக்கும்.

மாதா அனுபவிக்கிற இந்தத் துயரம் நமதாண்டவரை மிகவும் பாதிக்கிறது. அவ்வகையில் பார்த்தால் ஆண்டவருடைய மோட்சமும் ஆனந்த பூரணத்தை இன்னும் அடையவில்லை.  இரட்சண்ய திட்டம் பூர்த்தியாகி நாம் எல்லாரும் மோட்சத்தில் சேரு மட்டும் இந்நிலை நீடிக்கும். அகவெளிப்பாட்டில் பூரணமாயிருக்கிற சர்வேசுரனின் மகிழ்ச்சியும் மகிமையும் புறவெளிப்பாட்டில் இன்னும் பூரணமாகவில்லை.

ஆண்டவர் தம் துயரத்தைத் தாங்கிக் கொள்வார்; ஆனால் தம் தாயின் துயரத்தை அவரால் தாங்க முடிவதில்லை. உத்தம மனிதனான அவர் இப்படி உணருவதில் வியப்பொன்றுமில்லை. நல்ல மகன் யாரும் தன் துயரத்தையும்   அவமானத்தையும் தாங்கிக்  கொண்டாலும்   தன்   தாயின்   துயரத்தையும் அவமானத்தையும் கண்டு ஆற்றாமை கொள்கிறான் அல்லவா?  

சேசு, மாதாவின் உத்தமமான மகன். ஆதலால் அவர் தம் தாய்க்கு ஏற்படும் நிந்தைகளால் மிக வேதனைப்படுகிறார். மாதாவுக்கு நாம் நிந்தைப் பரிகாரம் செய்தால் மனம் குளிர்ந்து நம்மை மன்னிக்கத் தயாராக இருக்கிறார்.  இதுவே மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தியின் இரகசியமும் காரணமுமாகும். 

பரிகார பக்தி எதற்காக?

மரியாயின் மாசற்ற இருதயப் பரிகாரப் பக்தி எதற்காக என்று கேட்பதைவிட அது யாருக்காக என்று கேட்பது அதிகப் பொருத்தமாயிருக்கும். 

பரிகார பக்தி யாருக்காக? “மாதாவுக்காகத்தான்! சேசுவுக்காகத்தான்!  சேசு மரிய இருதயங்களுக்காகத்தான்!” என்று யாரும் எளிதில் கூற முடியும்.  ஆயினும் அது சேசுவுக்காகவும் மாதாவுக்காகவும் இருந்தாலும் இறுதியில் பார்த்தால் அது பாவிகளாகிய நமக்காகவே நம் இரட்சண்யத்திற்காகவே! அதன் மூலம் சேசு-மரிய இருதயங்களும் சர்வேசுரனும் அடையும் அன்பின் ஆறுதலுக்காகவும் நித்திய மகிமைக்காகவுமே என்பதை நாம் கண்டுபிடிக்கலாம்.

எப்படின்றால் பாத்திமா 2-ம் காட்சியில் மாதாவே இதைக் கூறியிருக்கிறார்கள். மாதா லூஸியாவைப் பார்த்து: “என்னை மக்கள் அறிந்து நேசிக்கும்படி சேசு உன்னைப் பயன்படுத்த விரும்புகிறார்.  உலகில் என் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்த அவர் ஆசிக்கிறார். 

இப்பக்தியைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இரட்சணியத்தை நான் வாக்களிக்கிறேன்.  கடவுளின் சிம்மாசனத்தை அலங்கரிக்க நான் வைக்கிற மலர்கள் போல அவர்கள் கடவுளுக்குப் பிரியமானவர்களாயிருப்பார்கள்” என்றார்கள்.  (இப்பிந்திய பாகம் பாத்திமா காட்சிகளைப்பற்றிய பல நூல்களில் காணப்படவில்லை. “பாத்திமா பற்றிய முழு உண்மைகள்”  என்ற விரிவான புத்தகத்திலும் அதுபோன்ற மூலப் புத்தகங்களிலும் அது காணக்  கிடக்கிறது.


போன்றவேட்ரா பட்டணத்தில் 1925‡ம் ஆண்டில்  மாதாவும் பால சேசுவும் லூஸியாவுக்குக் காட்சியருளி, பரிகாரப் பக்தியாகிய 5 முதல் சனி பக்தியை கடைப்பிடிக்கிறவர்களுக்கு இரட்சணியத்தை வாக்களித்தார்களே, அதன் தொடக்க அறிவிப்பே இது.  

பரிகாரப் பக்தியின் பரிசு நம் இரட்சண்யம்!  எப்படிப்பட்ட உயர்ந்த பரிசு இது!  நம் இரட்சண்யமே சேசு மரிய இருதயங்களின் ஆறுதலும் மகிமையுமாயிருக்கிறது.