தேவமாதாவின் வணக்கமாதம் - மே 27

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவமாதாவின் மாசற்ற இருதயத்தின் பேரில்!

இந்த மாசற்ற இருதயமானது இயேசு கிறிஸ்து நாதர் நீங்கலாக எல்லா இருதயங்களிலும் மேன்மை உள்ளதுமாய் இருக்கின்றது.

எல்லாம் வல்ல சர்வேசுரன் படைத்த இருதயங்களில் திவ்விய இயேசுவின் திரு இருதயத்துக்கு இரண்டாவதாக மரியாயின் மாசற்ற இருதயமானது மேன்மையுள்ளதும் எவ்வித வணக்க, ஸ்தோத்திரத்துக்கும் தகுதி உள்ளதுமாய் இருக்கின்றது. திரித்துவத்தின் மூன்றாட்களாகிய பிதா, சுதன், பரிசுத்த ஆவியானவர் இந்த மேன்மையான இருதயத்தைப் படைக்கவும் உன்னத வரங்களாலும் விலையேறப்பெற்ற வரப்பிரசாதங்களினாலும் பூரண நிறைவுடன் அலங்கரிக்கவும் விரும்பினதினால் பிதாவாகிய சர்வேசுரன் தம்முடைய அளவில்லாத வல்லபத்தைக் கொண்டு அந்த பரிசுத்த கன்னிகை தமக்கு தகுதியுள்ள குமாரத்தியாய் இருக்கிறதினால் அன்னைக்கு வணக்கம் அமைதி கீழ்ப்படிதலுள்ள இருதயத்தைக் கொடுத்தார். சுதனாகிய சர்வேசுரன் இந்த பரிசுத்த கன்னிகையின் திருவயிற்றில் ஒர் தகுதியான இருப்பிடத்தில் இருப்பதுபோல வாசம் பண்ணச் சித்தமாயிருந்ததால் தம்முடைய தாயாவதற்கு தகுதியான இருதயத்தைக் கொடுத்தார். பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன் இந்த கன்னிகை தமக்கு மிகவும் பிரியமுள்ளவர்களா யிருக்கிறபடியால் அன்னைக்கு தேவ சிநேக அக்கினியினால் எரிகிற இருதயத்தைக் கொடுத்தார். இது இப்படியிருக்க இந்த திருஇருதயத்தில் கூடி இருக்கிற மேன்மையான சாங்கோபாங்கத்தை எந்த மனிதராலும் சொல்லவும் கண்டு பிடிக்கவும் இயலாது. மோட்சத்தில் இந்த மாசற்ற இருதயத்தை வாழ்த்திக் கொண்டாடி வருகிற சம்மனசுகளோடு நாமும் சேர்ந்து இந்தத் திருஇருதயத்தை உருக்கமான பக்தியோடு நேசித்து இந்தத் திரு இருதயத்தின் உன்னத மேன்மையை மோட்சத்தில் பார்த்துக் கொண்டாட முயலுவோம்.

பரிசுத்தம் உள்ளதுமாய் இருக்கின்றது.

தேவமாதாவின் மாசற்ற இருதயமானது பரிசுத்தம் உள்ளதாக இருக்கிறது. எல்லா சுகிர்த புண்ணியங்களுடைய அதிசயத்துக்குரிய மாதிரிகையான இயேசுகிறிஸ்துநாதருடைய இருதயத்தின் உத்தம சாயலான இந்தத் திருஇருதயம் தேவ சிநேகத்தின் வேகமான அக்கினியால் பற்றியெரிந்து பக்தி சுவாலகர்களைக் காட்டிலும் சர்வேசுரனை அதிகமாய் நேசித்து மேலான கிரிகையினால் சர்வேசுரனுக்கு செலுத்தின மகிமையைக் காட்டிலும் அதிகமான தோத்திர மகிமை உண்டாயிற்று என்பது உறுதியான சத்தியம். தேவமாதாவின் மாசற்ற இருதயமே! இஷ்டப்பிரசாதத்தின் பொக்கிஷமே, சாங்கோபாங்கத்தின் சாயலே, எல்லா புண்ணியங்களின் இருப்பிடமே, நீர் எனக்கு எப்பொழுதும் மாதிரிகையாய் இருப்பீர் நான் உம்மிடத்தில் வந்து மனத்தாழ்ச்சியையும், கற்பையும், சாந்தகுணத்தையும், பொறுமையையும், உலக வெறுப்பையும், இயேசுகிறிஸ்துநாதருடைய சிநேகத்தையும் பெற்றுக்கொள்வேன்.

சிநேகிக்கத்தக்க தகுதி உள்ளதுமாய் இருக்கின்றது.

தேவமாதாவின் மாசற்ற இருதயமானது இயேசு கிறிஸ்துநாதருடைய திருஇருதயம் நீங்கலாகத் தமது நிகரில்லாத சுகிர்த குணங்களினாலும் பொறுமை தயையினாலும் நமது மட்டில் வைத்த அன்பினாலும் நமது அன்புக்கும் நன்றியறிந்த மனதுக்கும் மிகவும் பாத்திரமுள்ளதாகும். அந்தத் திருத்தாயார் நமது அவசரங்களில் சிந்தையுள்ளவர்களாய் நாம் அடைந்துவரும் சகல துயரங்களிலும் நமக்கு ஆதரவும் தஞ்சமும் தேற்றரவுமாகத் தம்முடைய இருதயத்தை நமக்குக் கொடுக்கிறார்கள். நாம் அன்னையுடைய சிநேகத்துக்கு பிரதி சிநேகத்தை செலுத்தி பணிவிடையில் பிரமாணிக்கமாய் நடந்து அதிசயமான புண்ணிங்களைச் சுறுசுறுப்போடு கண்டுபாவித்து நம்முடைய நன்றியறிந்த பட்சத்தை அன்னைக்கு காண்பிக்கக்கடவோம்.

செபம்.

தேவமாதாவின் மாசற்ற திவ்ய இருதயமே! தேவசிநேகத்தின் இருப்பிடமே, தயாளத்தின் சமுத்திரமே, சமாதானத்தின் சிம்மாசனமே, மிகவும் சிநேகிக்கப்படத்தக்க இருதயமே, ஆராதனைக்குரிய ஏக திரித்துவத்துக்கு உகந்த தேவாலயமே, சம்மனசுகளாலும் மனிதர்களாலும் வணங்கப்பட தகுதிவாய்ந்த இருதயமே, எல்லாப் புண்ணியங்களுடைய மாதிரிகையே, இயேசுகிறிஸ்துநாதர் இருதயத்துக்கு ஒத்திருக்கும் சாயலே, எங்களுடைய அன்புள்ள தாயாருடைய திருஇருதயமே, எங்களுடைய துன்பங்களை உணர்ந்து எங்களுக்காக மிகுந்த கஸ்தி அவமானப் பாடுகளை அனுபவித்த திரு இருதயமே! சகல மனுமக்கள் இருதயங்களாலும் நன்றியறிந்த மனதோடும் உறுதியான நம்பிக்கையோடும் சிநேகிக்கப்படுவதற்கு பேறுபெற்ற திருஇருதயமே! நீசப்பாவியாயிருக்கிற அடியேன் உமக்கு செலுத்துகிற வணக்கத்துக்கு இரங்கி அடியேனுடைய மன்றாட்டுக்களைக் கேட்டு என்னுடைய அற்ப வேண்டுதலை ஏற்றுக்கொண்டு சகல மனிதருடையவும் இருதயங்களை உமது திருமைந்தன் பக்கமாய் திருப்பி உம்மிடத்தில் இடைவிடாமல் பற்றியெரிகிற தேவ சிநேக அக்கினி எங்களிடத்திலே எரியும்படி செய்தருளும். எங்களுடைய அவசரங்களிலே எங்களுக்கு உதவியாயிரும். துயரங்களில் தேற்றரவாயிரும். சோதனைகளில் திடனாயிரும். ஆபத்துக்களில் தஞ்சமாயிரும். மரணவேளையில் ஆதரவாயிரும், நித்திய ஜீவியத்தில் எங்களுக்கு பாக்கியமாயிரும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

தேவமாதாவின் மாசற்ற இருதயமே! இயேசுகிறிஸ்து நாதருடைய திரு இருதயத்தின் உத்தமமான சாயலே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இருபத்தி ஏழாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :

தேவமாதாவின் மாசற்ற இருதயச் சபையில் பெயர் எழுதி வைக்கிறது.

புதுமை!

சகல மனிதருக்கும் பகைவனாக பசாசு அவர்களைப் பாவத்தில் விழச் செய்ய அநேக உபாயங்களைப் பண்ணப் பிரயாசைப்படுகிறது மன்றி அவர்கள் பாவத்தில் விழுந்த பின்பும், தாங்கள் செய்த பாவங்களுக்காக அதிக கூச்சத்தை உண்டாக்க அதைக் குருவிடத்தில் வெளிப்படுத்தாதவாறு தடை செய்யும்.

ஓர் மனிதன் நெடுநாள் புண்ணிய வழியில் நடந்து ஓர் நாள் பசாசினுடைய கொடிய சோதனையில் அகப்பட்டு பாவத்தைக் கட்டிக்கொண்டான். உடனே அதிக வருத்தமடைந்து பாவத்தினுடைய கொடூரத்தைக் கண்டு அதிகமாய் பயப்பட்டுப் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமென்ற நினைவு தேவ ஏவுதலினால் அவன் மனதிலே வந்தாலும் தான் கொண்ட கூச்சத்தினால் இந்த பாவத்தை எப்படி வெளிப்படுத்துவேனென்று கலங்கிப் பின்வாங்கினான். அப்படி பின் வாங்கினாலும் தான் செய்த குற்றத்தை நினைத்து அதிக மனவருத்தம் அடைந்து சாப்பிடவும் நித்திரை செய்யவும் முடியாத நிலையிலிருந்தான். அப்பொழுது அந்த தொந்தரவெல்லாம் நீங்கும் பொருட்டு தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் ஆற்றுக்குச் சென்றான். ஆற்றை அடைந்ததும் தனக்கு நித்திய நரக வேதனை நிச்சயம் கிடைக்குமெனப் பயந்து திரளான கண்ணீரை விட்டு ஆண்டவரைப் பார்த்து, என் பாவத்தைப் பொறுக்க வேண்டுமென்று மன்றாடின போதிலும் பாவசங்கீர்த்தனம் செய்ய தைரியமின்றி தத்தளித்து, அநேக கோவில்களை வேண்டுதலாக சந்தித்து அநேக செபங்களைப்பண்ணி தர்மங்களைச் செய்து தன் மனவருத்தம் தீரும்படியாய்த் திரிந்தாலும் எத்தகைய பயனும் ஏற்படவில்லை. ஓர்நாள் இரவில் தான் படும் மனக்கஷ்டத்தின் காரணமாக அதிக வருத்தப்பட்டு எப்படியும் பாவசங்கீர்த்தனம் செய்தே தீர்வேனென்று நினைத்து அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு அருகிலே சேர்ந்ததும் கூச்சத்தினால் பின்வாங்கி பாவசங்கீர்த்தனம் செய்யாமல் வந்து விட்டான். வேறொரு நாள் கோவிலுக்கு வந்து அதிகமான கூச்சத்தால் தடுக்கப்பட்டு ஒருபோதும் அந்த பாவத்தை சொல்லமாட்டேனென்று பின்வாங்கித் தன் வீட்டுக்குத் திரும்புமுன்னே தேவமாதாவுக்கு தன் நிர்ப்பாக்கியத்தைச் சொல்ல வேண்டுமென்று இந்தப் பரம நாயகியின் திருப்பாதத்தண்டையில் விழுந்து அன்னை தன் பேரில் இரங்கித் தன்னை கைவிடாதபடிக்கு மன்றாடினான். எவ்வித கிருபையும் உடைத்தான தேவமாதா இந்த நிர்ப்பாக்கியமான பாவியின் பேரில் இரங்கி அவன் படும் பயங்கரமான கூச்சத்தை நீக்கி விட்டாள். திருக்கன்னிகையின் பாதத்தில் அவன் விழுந்தவுடனே புது மனிதனாகி எழுந்து தைரியத்தோடு குருவானவரிடத்தில் போய்த் திரளான கண்ணீர் சிந்தி தான் செய்த பாவமெல்லாம் ஒன்றும் ஒளிக்காமல் வெளிப்படுத்தினான். அப்போது அவன் மனதில் வந்த சந்தோஷமும் அமைதியும் எவராலும் எடுத்துரைக்க இயலாத அரிய காரியமாயிருந்தது.

கிறிஸ்தவர்களே! நீங்கள் பாவசங்கீர்த்தனம் செய்யுமுன் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய தேவமாதாவின் மாசற்ற இருதயத்தை மன்றாடக்கடவீர்கள்.