தேவமாதாவின் வணக்கமாதம் - மே 26

தேவமாதா மோட்சத்துக்கு எழுந்தருளினதின் பேரில்!

தேவமாதா ஜெயசீலியாக மோட்சத்தில் பிரவேசிக்கிறார்கள்.

தேவமாதா ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திற்கு எழுந்தருளி போனது விசுவாச சத்தியமென்று 1950-ஆம் வருஷம் நவம்பர் மாதம் 1ஆம் தேதி அர்ச். பாப்பானவர் வரையறுத்துக் கூறினார். 

தேவமாதா இவ்வுலகத்தை விட்டு மோட்சத்துக்கு எழுந்தருளிப் போகிறபொழுது ஒன்பது விலாச சபைகளின் சம்மனசுகள் எல்லோரும் முத்திப்பேறுப்பெற்ற மோட்சவாசிகள் அனைவரும் தங்கள் இராக்கினிக்கு எதிர்கொண்டு வந்து இன்பமான பாட்டுக்களை பாடி பிரபலமான கொண்டாட்டம் செய்தார்கள். மோட்ச இராச்சியத்தின் எப்பக்கத்திலும் பரமநாயகி ஜெயசீலியாக வருகையில் ஓர் விசேஷ சோதிப் பிரகாசம் துலங்குவது போன்றிருந்தது. திவ்விய இயேசுவே தமது திருத்தாயாருக்கு எதிராக வந்து மிகுந்த அன்பு பட்சத்துடன் மோட்ச மகிமையான இராச்சியத்துக்குள் பிரவேசிக்க செய்தார். பிதாவாகிய சர்வேசுரன் அன்னையை தமது பிரிய குமாரத்தியாக ஏற்றுக்கொண்டு தம்முடைய ஏக குமாரரான உலக மீட்பரின் வலதுப் பக்கத்தில் அன்னைக்கு ஸ்தாபித்திருந்த சிம்மாசனத்தில் உட்காரச் செய்து அன்னையுடைய திருச்சிரசில் நித்திய ஆனந்தத்தின் முடியை சூட்டி பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியாக ஸ்தாபித்து அன்னையுடைய திருக்கையில் தமது அளவில்லாத பொக்கிஷங்களைக் கொடுத்து தேவமாதாவாகவும் சகல உலகங்களுக்கும் ஆண்டவளாகவும், புத்தியுள்ள சகலரும் அன்னையை வணங்கி ஸ்துதித்து கொண்டாட வேண்டுமென கற்பித்தார். நாம் எல்லாரும் மோட்சவாசிகளுக்கு ஆனந்தமான அந்த வேளையில் அவர்கள் தேவமாதாவைக் குறித்து அனுபவித்த அகமகிழ்ச்சியை கொண்டு அந்த பரமநாயகியை அவர்களோடு சேர்ந்து நாமும் கொண்டாடக்கடவோம். நமது அன்னையிடத்தில் எப்பொழுது சேருவோமோ என்ற ஆசை மிகுதியால் நம்மை மீட்க வேண்டுமென மன்றாடுவோம்.

தேவமாதா மோட்சத்தில் அடைந்த மகிமை.

தேவமாதா மோட்ச இராட்சியத்தில் அடைந்த உன்னத மகத்துவத்தை சிறிது ஆராய்ந்து பார்க்கக்கடவோம். அந்தப் பரம் நாயகி உலக மீட்பருடைய மெய்யான தாயுமாய் எல்லா வரப்பிரசாதங்களினாலும் பூரணமாக அலங்கரிக்கப் பட்டவர்களுமாய் வாழ்ந்த 70 வருஷமளவும் உத்தம சுகிர்த புண்ணியங்கள் அனைத்தையும் செய்து தமது திருக்குமாரனுக்கு பக்தியுடன் பணிவிடை புரிந்து, புண்ணியவான்களை எல்லாரையும்விட உன்னத சாங்கோபாங்கத்தை அடைந்திருந்தார்கள். மோட்சத்தில் அடைந்த மகத்துவம் இவைகள் எல்லாவற்றிற்கும் ஏற்றவாறு விளங்குகிறது. அப்படியே எல்லா மோட்சவாசிகளுக்கும் மேலானவர்களும் தூதர் அதிதூதர் முதலிய சம்மனசுகளுக்கும் உயர்ந்தவளுமானார்கள். அன்னைக்கு மேல் சர்வ ஜீவ தயாபர சர்வேசுரன் மாத்திரம் மேற்பட்டவராயிருக்கிறார். நாம் அந்தப் பரமநாயகி பாத கமலங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நம்மால் முடிந்த அளவு மகத்துவத்துக்கு தகுதியான தோத்திரமும் ஸ்துதியும் வாழ்த்துதலும் செலுத்தக்கடவோம்.

தேவமாதாவுக்கு மோட்சத்தில் கொடுக்கப்பட்ட வல்லபம்.

தேவமாதா இந்த மேன்மையான உன்னதத்தை பெற்று எல்லா தோத்திரத்துக்கும் ஸ்துதிக்கும் உரிமையுள்ளவர்களாய்க் குறையற்ற ஆனந்த சந்தோஷத்தை அனுபவித்தாலும் இவ்வுலகில் துன்பப்பட்டு உழலும் தமது அன்புப் பிள்ளைகளான நம்மை மறக்கிறவர்களல்ல! அவர்கள் திருச்சபைக்கும் சகல விசுவாசிகளுக்கும் பாதுகாவலும் தாயாரும் இராக்கினியுமாய் இருக்கிறதுமன்றி புண்ணியவாளர் நன்னெறியில் நடக்குமாறும், பாவிகள் பாவத்தைவிட்டு புண்ணிய வழியில் உறுதியாய் நடக்க துணியுமாறும் எல்லாருக்கும் அடைக்கலமும் ஆதரவுமாயிருக்கிறார்கள். இடைவிடாது நமக்காக தமது திருமைந்தனிடத்தில் மனுப்பேசி தம்மை மன்றாடுகிறவர்களுக்கும் விலையேறப் பெற்ற வரங்களையும் விசேஷ உபகாரங்களையும் அளிக்கிறார்கள். நாமும் இந்த அன்புள்ள தாயின்மீது தகுதியான மரியாதையும், உறுதியான நம்பிக்கையும், உண்மையான அன்பும் வைத்து வணங்கவும் நேசிக்கவும் சேவிக்கவும் கடவோம். நமது வாழ்நாளெல்லாம் நம்மைக் காப்பாற்றி நாம் சாகிற வேளையில் நம்மை மோட்ச இராச்சியத்தில் சேர்க்க அன்னையை மன்றாடுவோம்.

செபம்.

இயேசுகிறிஸ்துநாதருடைய பரிசுத்த தாயாரே! நீர் இந்தக் கண்ணீர் கணவாயை விடுவதற்கு சமயமாயிற்று. நீர் எங்கள் மத்தியில் இருக்கிறதற்கு நாங்கள் பேறுபெற்றவர்களல்ல. அதிக பாக்கியமும் அதிக யோக்கியமும் உள்ள இடமான மோட்சத்துக்கு எழுந்தருளிப் போகக்கடவீர். என் அன்புள்ள தாயே! நித்தியத்தின் மகிமையான முடியைத் தரித்துக்கொள்ள எழுந்தருளும். நீர் மகிமை நிறைந்த புண்ணியங்களால் பேறு பெற்ற சம்பாவனையை கைக் கொள்ள எழுந்தருளும். உமக்கு ஸ்தாபிக்கப்பட்ட சிம்மாசனத்தில் இராக்கினியாக உட்கார்ந்தருளும். ஆனால் உம்முடைய நீசப் பிள்ளைகளான எங்களை விடுகிறபோது எங்களுடைய பக்தியுள்ள உணர்ச்சிகளுக்கிரங்கி நீர் எங்களுக்கு எப்பொழுதும் அடைக்கலமும் அன்னையுமாய் இருப்பீராக. எங்களுக்கு ஓர் அடையாளமும் உறுதிப்பாடும் தந்தருள மன்றாடுகிறோம். எங்களைப் பெற்ற தாயைப்பார்க்கிலும் அதிக அன்பான தாயே! இரக்கமுள்ள மரியாயே! உம்முடைய பரிசுத்த திருஇருதயத்தை எங்களுக்கு கொடுத்தருளும். இந்தப் பரிசுத்த இருதயமானது தாய் தந்தையற்ற பிள்ளைகளைப்போல் இந்த நிர்ப்பாக்கிய கணவாயில் துன்புறும் எங்களுக்கு உதவியும் ஆதரவும் தஞ்சமுமாயிருக்கும் நாங்கள் பாவ வெள்ளத்தில் அமிழ்ந்திப் போகாதபடிக்கு தற்காக்கும் பேழையைப்போல் இருக்கிற உமது திரு இருதயத்தின் ஆதரவில் ஒடிவந்து நாங்கள் உமது உதவியை அடைந்து மோட்சத்தில் சேருமளவும் புயல்களுக்கு அஞ்சாத நிலை பெறுவோம்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

பரிசுத்த தாயாரே, எங்களை பரிசுத்தராக்கி எங்களை மோட்சத்துக்கு போகும் வழியில் நடப்பித்தருளும்.

இருபத்தி ஆறாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

உங்களுடைய கோவில்களில் ஞான புஸ்தகங்கள் உண்டோ, இல்லையோ என்று பார்க்கிறது. இல்லாதிருந்தால் அவைகளை வாங்கிக் கொடுக்கிறது.

புதுமை!

1228-ஆம் ஆண்டில் ஓர் குருவானவர் தேவமாதாவைக் குறித்து திருப்பலி செய்யும்பொழுது அந்த ஊரில் இருந்த பதிதர் எல்லாரும் கூட்டமாய் கோவிலுக்குள் வந்து பூசை செய்த குருவைப் பிடித்து அவருடைய நாக்கை அறுத்தார்கள். அந்த பாதகத்தை செய்தவர்கள் போனபின் குருவானவர் ஒரு மடத்துக்கு போய் அங்கு இருக்கும் சன்னியாசிகளால் மிகுந்த சிநேகத்தோடும், மரியாதையோடும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அந்தக் குருவானவருக்கு தேவமாதாவை ஸ்துதிக்கவும் திருப்பலி செய்யவும் இனி முடியாதென்று வருத்தமுற்று மனதால் தினமும் அன்னையை மனதிலே வேண்டிக்கொண்டு மூன்று இராஜாக்கள் திருநாளில் தேவமாதாவின் பேரில் அதிக பக்தி வைத்து அன்னையின் கோவிலுக்கு வந்து ஆண்டவளே! நான் உம்மைக் குறித்து திருப்பலி செய்ததினால் உமக்குப் பகையாளிகளாய் இருக்கிற எதிரிகளாகிய பதிதர் என் நாக்கை அறுத்தார்களே; நீர் எனக்கு நலமானதொரு நாக்கு கொடுக்க முடியும் என்ற புதுமை உம்மால் முடியுமென்று நம்பிக்கையாய் இருக்கிறேன் என்றார். அவர் அவ்வாறு மன்றாடிய பொழுது தேவமாதா அவருக்குத் தம்மை காண்பித்து, நீ நமக்காக உன் நாக்கை இழந்ததினால் நாம் இப்பொழுது உனக்கு வேறு நலமானதொரு நாக்கு கொடுத்தோம் என்று சொல்லியவுடனே, அந்தக் குருவானவர் பலத்த சத்தத்தோடு அருள்நிறை மந்திரத்தைச் சொல்லத் தொடங்கினார். இவருடைய சத்தத்தைக் கேட்டு கோவிலிலிருந்த சன்னியாசிகள் அருகில் வந்து அற்புதமாய் நாக்கை அடைந்த புதுமையைக் கண்டு வெகுநேரம் தேவமாதாவுக்கு தோத்திரம் பண்ணினார்கள்.

இரண்டாவது!

1793 ஆம் ஆண்டில் ஒரு துஷ்டப் பெண் தான் பெற்ற குழந்தையைக் கொன்று பிரேதத்தை தெரு வீதியில் இருக்கும் குப்பை மேட்டில் அடக்கம் பண்ணினாள். அப்பொழுது ஓர் மனிதன் வேட்டைக்குப் போகிற பொழுது அவனுடைய நாயானது அந்த குப்பையை காலால் பறித்துப் பிரேதத்தை வெளிப்படுத்தினதினால் அநேகர் அந்த பிரேதத்தை பார்க்க வந்தார்கள். சிலர் அதை எடுத்து அடக்கம் பண்ணப் போகையில் ஓர் பெண் இந்தப் பிள்ளை சிலவேளை ஞானஸ்நானம் இல்லாமல் இறந்திருக்கும் என்று அதற்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி தேவமாதாவை வேண்டிக்கொள்ளுவோம் என்றாள். அப்பொழுது அந்தக் கூட்டத்தில் ஏறக்குறைய நானூறு பேர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாரும் அதற்குச் சம்மதித்து, அருகில் இருக்கும் தேவமாதாவின் கோவிலுக்கு வந்து அங்கு இருக்கும் சந்நியாசிகளையும் வேண்டிக்கொள்ளச் சொல்லி தாங்களும் வேண்டிக் கொண்டார்கள்.

அப்படி வேண்டிக் கொண்டிருக்கையில் அந்தக் குழந்தை சத்தமிட்டு உயிர்த்த புதுமையை அவர்கள் கண்டு கோவில் மணி அடித்து தெதேயும் என்ற கீர்த்தனையை சர்வேசுரனுக்குத் தோத்திரமாகப் பாடி, அந்தக் குழந்தைக்கு மரியாள் என்னும் பெயரிட்டு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். அக்குழந்தை ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு பால் குடித்து விட்டு மூன்று மணி நேரம் உயிருடனிருந்து பின்னர் இறந்தது. அந்தப் பிரேதத்தை மிகுந்த ஆரவாரத்தோடு அடக்கம் செய்தார்கள்.

கிறிஸ்தவர்களே ! எவ்வித அற்புதங்களையும் புதுமைகளையும் செய்விக்க வல்லபமுள்ள மோட்ச இராக்கினியை நம்பி உங்களுக்கு வேண்டியதெல்லாம் அன்னையிடத்தில் கேளுங்கள். ( தினமும் குடும்ப ஜெபமாலை சொல்வோம்)