தேவமாதாவின் வணக்கமாதம் - மே 28

தேவமாதாவைக் கண்டு பாவித்தலின் பேரில்!

தேவமாதாவைக் கண்டு பாவிக்கிறது மிகவும் பிரியமான காரியம்.

தேவமாதாவினுடைய சுகிர்த புண்ணியங்களைக் கண்டு பாவிக்கிறது. அந்த பரம நாயகியைக் குறித்துச் செய்யக் கூடியவைகளில் உத்தமமான சுகிர்த பணிவிடையாகும். உங்களுடைய இச்சைகளை நீங்கள் அடக்காமல் சந்தோஷமான மனமோடு பாவச்சேற்றில் அமிழ்ந்திருக்கும் பொழுது நீங்கள் இந்த பரிசுத்த கன்னிகையை நோக்கி செபிக்கிற செபங்களும் வழக்கமாய் செய்கிற கிரிகைகளும் ஆனால் பாவத்தில் விழுந்தால் அதை விட்டுவிடும்படிக்கு நீங்கள் பிரயாசைப்பட்டு அன்னையைப் பின்பற்றி உறுதியாய் நடக்க முயற்சிப்பீர்களாகில் அன்னைக்கு பிரியப்பட்டவர்களாய் இருப்பீர்கள். உங்களுடைய வேண்டுதல் ஸ்துதி வணக்கம் முதலான கிரிகைகளை பிரியத்தோடு ஏற்றுக்கொள்வார்கள்.

தேவமாதாவைக் கண்டு பாவிக்கிறது மகிமை உண்டாக்குகிற காரியம்.

தாங்கள் பெற்ற பிள்ளையினுடைய மேன்மையான நடக்கையினாலும் சுகிர்த புண்ணியங்களால் உம் தந்தை தாய்க்கு மகிமை வருகிறதல்லவோ? இப்படியிருக்கும்பொழுது தேவமாதாவின் ஞானப்பிள்ளைகள் நல்ல மாதிரிகைகளைக் கண்டுபாவிக்க அதிக சுறுசுறுப்போடு பிரயாசைப்படுகிற பொழுது இந்தப் பரமநாயகிக்கு எத்தகைய மகிமை உண்டாகும்! தேவமாதாவைத் தங்களுடைய தாயாகவும் ஆண்டவளாகவும் இராக்கினியாகவும் வைத்து கொண்டாடி வருகிறவர்கள் எல்லாரும் இவ்வாறு அன்னையுடைய உத்தம மாதிரிகையைப் பின்பற்ற முயற்சிப்பார்களாகில், அன்னையுடைய மகத்துவத்தை பாராட்டி எல்லாரும் பணிவிடைக்காரர் போல சேவிப்பார்கள். இத்தகைய மகிமை இவ்வுலகில் துலங்கி மோட்ச பேரின்ப இராச்சியத்தில் கூட கொண்டாடப்படும். அந்தப் பரிசுத்த கன்னிகை தம்மைச் சிநேகித்து வணங்கித் தம்முடைய புண்ணியங்களைக் கண்டுபாவித்துத் தம்முடைய உதவியைக்கொண்டு இரட்சணியமடையும் ஆத்துமங்களை மோட்சத்தில் அதிசயிக்கப் பண்ணும் பொழுது மோட்சவாசிகள் எல்லாரும் வாழ்த்திப் புகழ்ந்து ஸ்துதிப்பார்கள். நாமும் சகல புண்ணியங்களுக்கும் உத்தமமான மாதிரிகையாயிருக்கிற பரிசுத்த மாதாவை எக்காலத்திலும் கண்டுபாவிக்கக்கடவோம்.

தேவமாதாவைக் கண்டு பாவிக்கிறது நமக்கு மிகவும் பயனுள்ள காரியம்.

தேவமாதாவை நல்ல முறையில் கண்டு பாவிக்கிறது. நமக்கு மிகவும் பயனுள்ள காரியமாகும். சகல புண்ணியங்களும் உத்தம மேரையாக இந்த பரிசுத்த கன்னிகையிடத்தில் விளங்குபவைக் கண்டு பாவிப்போமாகில் அதனால் எல்லா நன்மையுமுடைத்தான சர்வேசுரனுக்கு பிரியப்படுவோம் என்பதற்குச் சந்தேகமில்லை. நற்குணமுள்ள பிள்ளையானவன் தன் தாய்க்கு சந்தோஷம் வரும்படியாய் நற்கிரிகைகளை செய்கிறது போல தேவமாதாவினிடத்தில் பக்தியுள்ளவனின் புண்ணியமானது, இந்தப் பரமநாயகிக்குப் பிரியமாயிருக்கிறதென்று அறிந்து அதை முழுமனதோடு செய்து கொண்டு வருவான். மோட்ச இராக்கினியோவென்றால் தான் நேசித்து இரட்சணியத்துக்கு சேர்க்க விரும்புகிற தம்முடைய பிள்ளைகளைக் கைவிடாமல் அவர்களை உறுதிப்படுத்திப் புண்ணிய வழியில் நடப்பித்து அவர்கள் தங்களுடைய எதிரிகளை வென்று, அவர்கள் இரட்சணியத்துக்கு சேருமளவும் அவர்களை ஆதரித்துக் காப்பாற்றிக் கொண்டு வருவார்கள். இரட்சணியமடைவதற்கு உங்களுக்கு விருப்பமுண்டானால் இதுவே நல்ல எளிதான வழியாகும்.

செபம்.

மோட்சவாசிகளின் இராக்கினியே! நீர் எங்களுக்கு மாதிரிகையாகக் காண்பித்த சுகிர்த புண்ணியங்களை நான் பார்க்கும் பொழுது மிகுந்த சந்தோஷத்தினால் அகமகிழ்கிறேன். உம்முடைய கிரிகைகளையும் நடக்கைகளையும் எவ்வளவுக்கு ஆராய்ந்து பார்க்கிறேனோ அவ்வளவுக்கு உமது திருமைந்தன் நீங்கலாக, மற்றவர்களிலும் நீர் உத்தமமான மாதிரிகையாய் இருக்கிறீரென்று கண்டுகொள்கிறேன். பரிசுத்த கன்னிகையே, நீர் அடைந்த உன்னத சாங்கோபாங்கத்தை நான் அடைய முடியாதென்பது நிச்சயம். ஆகிலும் என் பலவீனத்தினால் முடிந்த அளவு அதில் அபிவிருத்தியடைய உழைத்துப் பிரயாசைப் படுவேன். உமக்கு மிகவும் பிரியமுள்ள புண்ணியங்களான மனத் தாழ்ச்சியும் கீழ்ப்படிதலும் தேவசிநேகமும் அருந்தவமும் இலெளகீக காரியங்களின் மட்டில் வெறுப்பும் அடைவதற்கு எனக்கு உதவியருளுவீர் என்று நம்பிக்கையாயிருக்கிறேன். என் அன்புள்ள தாயே! உம்முடைய புண்ணியங்களை நான் கண்டுபாவிக்கிற உமக்கு மிகவும் பிரியமாய் இருக்கிறதை அறிந்து இன்று முதல் அதன்மேல் அதிகக் கவனமாயிருப்பேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

சகல மோட்சவாசிகளுக்கும் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

இருபத்தி எட்டாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

இந்த மாத முடிவில் செய்ய வேண்டிய பாவ சங்கீர்த்தனத்திற்கு தயார் செய்கிறது.

புதுமை!

250 வருஷங்களுக்கு முன் தேவமாதாவின் மீது அதிக பக்தி வைத்த பெர்நந்து என்னும் ஓர் குருவானவர் வாழ்ந்து வந்தார். அவர் உயர்ந்த வம்சத்தில் பிறந்தவராய் இருந்த போதிலும் இயேசுக் கிறிஸ்துநாதருடைய எளிமைத்தனத்தைப் பின்பற்ற விரும்பி உலக வாழ்வை உதறித் தள்ளி தம்மை எளிமையான குரு என்று அழைக்கச் சொன்னார். அவர் புனித பொநர்து இயற்றிய செபத்தை அச்சிட்டு மக்களிடத்திலே ஏராளமாக பரப்பியது. அந்த செபத்தைக்கொண்டு மூர்க்க பாவிகளான அநேகரை அற்புதமாய் மனந்திருப்பினார். ஓர் நாள் மரண தண்டனை அளிக்கப்பட்ட ஓர் மனிதன் பாவசங்கீர்த்தனம் செய்யாமல் சிறைச்சாலையில் கிடக்கிறானென்று சொன்னார்கள். உடனே அவர் அவனிடத்தில் வந்து அவனுக்கு நல்ல புத்திமதிகள் சொல்லி மிகுந்த அன்புடன் வேண்டிய நியாயங்களையும் எடுத்துக்காட்டி அவனை மனந்திருப்ப பிரயாசைப்பட்டாலும் அந்தப் பாதகன் ஓர் மறுமொழியும் சொல்லாதிருந்தான். அப்பொழுது குருவானவர் தன்னோடு சேர்ந்து ஓர் சிறு செபம் செய்ய வேண்டுமென்று சொல்ல, அவன் கோபித்து உடனே தடுத்தான். அதைக்கண்டு குருவானவர் அவன் சொல்லும்படி செபத்தை சத்தமாய்ச் சொல்லத் தொடங்கினார். ஆனால் அந்தப் பாதகன் பல்லைக் கடித்துப் பேசாமல் இருந்தான். அப்போது குருவானவர் கோபமடைந்து, இந்த செபத்தினுடைய ஓர் பிரதியை . அவன் வாயிலே வைத்து அதைச் சொல்ல மாட்டேன் என்கிறாயே, கொஞ்சமாவது அதைச் சாப்பிடு என்றார். அந்தப் பாதகன் விலங்கோடு இருந்ததால் குருவானவர் சொன்னதைத் தடுக்க முடியாதவனாய் முழங்காலிலிருந்து குருவானவரும் இவனும் இச்செபத்தைச் சொல்லத் தொடங்கினவுடனே, அந்தப் பாதகன் புது மனிதனாகி திரளான கண்ணீர் விட்டு தான் செய்த பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு அழுது, பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமென்றான். குருவானவர் இதைப் பார்த்து தம்பி, தேவமாதாவின் கிருபையால் இரட்சணியம் அடைவாய் என்றார். பின்பு அவன் துர்நடக்கை அனைத்தையும் குருவானவரிடம் வெளிப்படுத்தின பிறகு அவன் தன் பாவங்களுக்குப் பட்ட மனஸ்தாப மிகுதியானாலும் சர்வேசுரன் தனக்குக் காண்பித்த இரக்கத்துக்கு அவன் பட்ட சந்தோஷத்தினால் மூர்ச்சையாய் விழுந்து மரித்தான்.

வேறொரு நாள் மேற்சொல்லிய குருவானவர் மரண தண்டனை அளிக்கப்பட்ட ஓர் மனிதனைக் கொலைக்களத்துக்குக் கொண்டு செல்லுவதைக் கேள்விப்பட்டு, உடனே அவனைப் பின்தொடர்ந்து ஓடிவந்து சேர்ந்தார். அந்தப் பாதகன் அப்பொழுதுகூட சொல்லத்தகாத தேவதூஷணத்தைச் சொல்லிக் கொண்டிருந்தான். அநேகர் அவனுக்குப் புத்தி சொல்லியிருந்தாலும் ஒன்றையும் அவன் கேட்கவில்லை அவனை கழுமரத்தில் ஏற்றினார்கள். அங்கேயும் குருவானவர் ஏறி பாதகனுக்கு நற்புத்திகளைச் சொல்லும் பொழுது அவன் அவரைப் பலத்த உதையால் கீழே விழ உதைத்தான். குருவானவர் கீழே விழுந்து காயப்பட்ட போதிலும் உடனே முழங்காலிலிருந்து பலத்த சத்தத்தோடு புனித பெர்நர்து செபத்தை வேண்டிக்கொண்டதுடன் அந்தப் பாதகன் மனந் திரும்பி அழுது அதிக மனஸ்தாபத்தோடு தான் செய்த பாவமெல்லாம் உடனே குருவானவரிடத்தில் வெளிப்படுத்தி தக்க ஆயத்தத்தோடு மரித்தான்.

கிறிஸ்தவர்களே! தினந்தோறும் பக்தியோடு புனித பெர்நர்து செய்த மிகவும் இரக்கமுள்ள தாயே என்ற செபத்தை வேண்டிக்கொள்வீர்களானால் அதன் ஞானப்பலன்களை அடைவீர்கள் என்பது நிச்சயம்.