தேவமாதாவின் வணக்கமாதம் - மே 25

தேவமாதா உயிர்த்ததின் பேரில்!

தேவமாதாவின் திருச்சரீரமானது கல்லறையில் அழியாதிருக்கும் வரம் பெற்றது.

ஜென்மப் பாவத்தினின்றும் தேவமாதாவின் திரு ஆத்துமத்தை நோக்கி மீட்ட சர்வேசுரன் அன்னையின் பரிசுத்த சரீரம் கல்லறையில் அழியாதிருக்க திருவுளங்கொண்டார். நீதியுள்ள கர்த்தர், ஆதி மனிதனை நோக்கி, நீ மண்ணாயிருக்கிறாய், திரும்ப மண்ணாய்ப் போவாயென்று பெரிய சாபத்தையிட்டு மனிதராகப் பிறந்தவர்களின் சரீரம் அழிந்து போக வேண்டுமெனத் தீர்மானித்தார். ஆனால் பரிசுத்த கன்னிகை அந்தப் பொதுவான கட்டளைக்கு உட்படாதபடி கிருபை செய்திருக்கிறார். சாகுமளவும் ஓர் அற்ப மாசில்லாமல் பரிசுத்தமுள்ளவராய் இருந்ததாலும் அன்னையுடைய திரு உதரமானது அவதரித்த இரட்சகருடைய இருப்பிடமாகித் தெய்வீகத்தினுடைய தேவாலயமும் இஷ்டப்பிரசாதத்தினுடைய சுகிர்த பீடமுமாய் இருந்ததாலும் அன்னைக்கு இந்த அழியா வரத்தை கொடுக்க திருவுளங் கொண்டார். நீங்களும் பரிசுத்த திவ்விய நற்கருணை வழியாக அவதரித்த கர்த்தரை வாங்குகிறீர்களே! கர்த்தர் உங்களிடத்தில் வந்து உங்களோடுகூட அமிர்தமான விதமாய் ஐக்கியப்பட்டு உங்கள் சரீரத்தை தூய்மைப்படுத்த நித்திய ஆனந்தத்துக்கு அச்சாரங் கொடுக்கிறார். இயேசுக்கிறிஸ்துநாதரால் தூய்மைப்படுத்தப்பட உங்களுடைய சரீரத்தை எவ்வித தீய பாவத்தினாலும் களங்கப்படுத்தாதபடிக்கு மிகுந்த எச்சரிக்கையோடு நடக்கக்கடவீர்களாக.

அந்தப் பரம நாயகி இறந்தபின் உயிர்க்க வரம் பெற்றது.

மனிதர் எல்லாரும் உலக முடிவில் உயிர்ப்பார்கள். ஆனால் பரமநாயகி மனுமக்களுக்கு ஜீவியமும் உத்தானமுமாயிருக்கிற இயேசுநாதரைப் பெற்று, அவருடைய முன்மாதிரிகையைப் பின் சென்று, ஆத்தும இரட்சணிய அலுவலில் அவருடன் ஒத்துழைத்தபடியால், அன்னை இறந்த மூன்றாம் நாள் ஆத்தும சரீரத்தோடு உயிர்த்தெழுந்தருளும் வரம் பெற்றார். அன்னையுடன் திருச்சரீரத்தோடு ஒன்றாகி பாக்கியமும் மகிமையும் கொடுத்ததாம். இந்தத் திருச்சரீரமானது கல்லறையினின்று எழுந்து சூரியனைப் பார்க்க அதிக ஜோதியோடும் சந்திரனைப் பார்க்க அதிக குளிர்ந்த பிரகாசத்தோடும் இலகு, சூட்சம், அழகு, சாகாமை என்னும் இந்நான்கு வாரங்களை அடைந்து துலங்குகிறதாம். ஓர் கஸ்தியும் படாமல் என்றென்றும் மோட்ச பேரின்ப இராச்சியத்தில் வாழ்ந்திருப்பார்கள். நாம் நம்முடைய திருத்தாயாருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்தைக் கண்டு அன்னையை வாழ்த்திப் புகழக் கடவோமாக. நடுத்தீர்க்கிற நாளில் நாமும் உயிர்ப்போமென்பது சத்தியம். ஆனால் நாம் உயிர்த்து மோட்சத்துக்குப் போவோமோ அல்லது நரகத்துக்குப் போவோமோ தெரியாது. அது நமது நடக்கைக்குத் தகுந்தது போலிருக்கும்.

தேவமாதாவின் உத்தானமானது நாம் அன்னை பேரில் வைத்திருக்கும் நம்பிக்கைக்குக் காரணமாக இருக்கின்றது.

தேவமாதாவின் மகிமை நிறை ஆரோபணம் நமக்குச் சந்தோஷமும் நம்பிக்கையும் வருவிக்கின்றது. தமது சரீரத்தோடும் ஆத்துமத்தோடும் மோட்சத்துக்கு எழுந்தருளி அதில் நிகரில்லாத மகிமையை அடைந்து இன்னமும் நம்முடைய தாயாருமாய் அடைக்கலமுமாய் ஆதரவுமாய்ப் பாதுகாவலுமாயிருக்கவும் அன்னையை அழைக்கப்படவும் சித்தமானார்கள். நாம் அனுபவிக்கிற தீமைகளிலும் இக்கட்டுகளிலும் சும்மா இருக்கிறதெப்படி? இதோ அவைகளினின்று நம்மை மீட்க நமது நேச அன்னை காத்திருக்கிறார்கள். அன்னையிடத்தில் அபய சத்தமிட்டு நம்பிக்கையோடு மன்றாடுவோமாகில் அன்னை நமக்கு வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் அடைந்து கொடுப்பார்களென்பது திண்ணம்

செபம்.

பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியான திவ்விய கன்னிகையே, உமது திருஆத்துமம் உமது பரிசுத்த சரீரத்தோடு சேர்ந்து உயிர்க்கிறபோது நீர் அடைந்த மனோவாக்குக் கெட்டாத சந்தோஷத்தைப்பற்றி உம்மை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டாடுகிறோம். ஓ! தாயாரே, புயல் அடிக்காத துறைமுகமான மோட்சத்தில் சேர்ந்து சர்வேசுரனுடைய சிம்மாசனத்தருகில் இருக்கிறீர். ஆனால் எவ்வித காற்றினாலும் புயலினாலும் எழுப்பப்பட்ட சமுத்திரமான இந்த நிர்ப்பாக்கிய உலகில் உழைத்து வருத்தப்படுகிற உம்முடைய பிள்ளையாகிய எங்களைக் கைவிடுவீரோ? அதில்லையே, நீர் எங்களுக்காகச் சர்வேசுரனிடத்தில் மனுப்பேசும்படியாய் உருக்கத்தோடு மன்றாடுகிறோம். ஓ! தாயாரே, எங்களைக் கிருபைக் கண் கொண்டு பார்த்து எங்களுடைய மன்றாட்டுகளுக்கு இரங்கி நாங்கள் அனுபவிக்கிற தீமைகளை நீக்கி ஈடேற்றத்தை அடைவதற்கு வேண்டிய வரப்பிரசாதங்களைப் பெறச் செய்விரென்று நம்பிக்கையாய் இருக்கிறோம்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

ஓ! தாயாரே, உம்முடைய அடைக்கலத்தில் நாங்கள் இருக்கிறது பேரின்ப பாக்கியம்.

இருபத்திஐந்தாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

இன்னமும் சில பிறமதத்தவர்களோடு நல்ல புத்தி சொல்லுகிறது.

புதுமை!

அர்ச். சிமோன் ஸ்தோக் என்பவர் தேவமாதாவை உத்தம மேரையாய் வணங்க ஆசையுள்ளவராய்த் தினமும் அன்னையைப் பார்த்து, நாம் உம்மை வணங்கும் விதம் எப்படியென்று எனக்கு அறியப் பண்ணியருள வேண்டுமென மன்றாடிக்கொண்டு வந்தார். தேவமாதா அவருடைய ஆசையைக் கண்டு அவர் தமது சுரூபத்துக்கு முன் வேண்டிக்கொள்ளுகிற நேரத்தில் அவருக்குத் தம்மைக் காண்பித்து அவருக்கு உத்தரியத்தைக் கொடுத்துச் சொன்னதாவது: நீ நமக்கு ஏற்றவிதமாய் ஸ்துதிக்க வேண்டுமானால் இந்த உத்தரியத்தையும் அணிந்து மற்றவர்களும் இதைத் அணிக்கும்படி தூண்டுவாயாக. அதை விசுவாசத்தோடு அணிவிக்கிறவர்கள் தங்களுடைய வாழ்நாளில் நம்முடைய உதவியைப் பெற்று, அத்தோடு சாகிறவர்கள் நரகத்துக்குத் தப்பி கரையேறுவார்களென்று திருவுளம் பற்றினார்கள். இந்தப் புதுமை பிரசித்தமான பின்பு, தேவமாதா அந்த உத்தரியத்தைக் கையளித்ததினாலும் புனித பாப்புமார்கள் அதைத் தரிக்கிறவர்களுக்கு அநேக பலன்களைக் கொடுத்ததினாலும், அரசர்கள் முதல் எண்ணிக்கையில்லாத கிறிஸ்தவர்கள் உத்தரிய சபையில் சேர்ந்தார்கள்.

அந்த சபையில் சேர்ந்த ஓர் சேவகனிடத்தில் நடந்த புதுமையானது: பிரெஞ்சு நாட்டு அரசராகிய பதின்மூன்றாம் ஞானப்பிரகாசியார் என்பவர் மொப்பெலியர் என்னும் நகரை முற்றுகையிட்டு அதைப் பிடிக்கப் பிரயாசைப்படுகையில் உத்தரியத்தை தரித்துக்கொண்டிருந்த ஓர் போர்ச் சேவகன் எதிரிகளோடு போராடும்பொழுது துப்பாக்கியால் சுடப்பட்ட குண்டு அவன் நெஞ்சிலே உத்தரியம் இருக்கிற இடத்தில் பாய்ந்ததும் மேலாடையை ஊடுருவிச் சென்றாலும் சரீரத்துக்குள் புகாமல் உத்தரியத்தில் பட்டவுடனே நசுங்கிப்போய்க் கீழே விழுந்தது. அரசர் அந்த செய்தியை அறிந்து அந்த போர்ச் சேவகனை வரவழைத்து அவனிடத்தில் நடந்த புதுமையை நிச்சயித்து உத்தரியம் தரிக்கிறவர்களுக்கு தேவமாதா எவ்வளவு உதவியாய் இருக்கிறார்களென்று மகிழ்ச்சியுற்று அவரும் அநேகரும் உத்தரியத்தை அணிந்தார்கள்.

இரண்டாவது!

பிளோரென்ஸ் என்ற நகரில் வெறிபிடித்த ஓர் சிங்கம் தான் இருக்கும் கூண்டை விட்டு வெளிச்சென்று நகரில் எங்கும் வந்து கர்ச்சித்து அனைவருக்கும் பயத்தை உண்டாக்கி தெருவீதிகளில் திரிந்தது. பின்னர் தேவமாதாவின் கோவில் அருகே நின்றது. அதைப்பிடிக்க ஒருவரும் வெளியே வராமலிருக்கும்பொழுது ஒரு பெண் தேவமாதாவின் பெயர் சொல்லி அந்த சிங்கத்தை பிடிக்கத் துணிந்து அதன் அருகே வந்து தான் அணிந்திருந்த உத்தரியத்தை எடுத்து சிங்கத்தின் கழுத்திலே போட்டு ஓர் ஆட்டுக்குட்டியைப்போல அதை இழுத்து கூட்டிக்கொண்டு போனாள். ஜனங்கள் அதைக்கண்டு தேவமாதாவின் கோவிலுக்கு வந்து பரலோக இராக்கினியைத் தோத்திரம் செய்தார்கள்.

மூன்றாவது!

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் இயேசுசபை குருக்களில் ஒருவராகிய ஞானப்பிரகாசியார் என்னும் குருவானவர் எழுதி வைத்த புதுமையானது: ஒரு ஊரில் ஓர் பிற சமய மனிதன் மீது பசாசின் ஆவேசம் ஏறி அவனை உபத்திரவப்படுத்தி அவனைத் துஷ்ட பைத்தியக்காரனாக்கி எல்லாருக்கும் பயத்தை உண்டாக்கியது. அவன் ஊரில் சுற்றித் திரியும் பொழுது மற்றவர்கள் தங்கள் வீட்டு கதவுகளை அடைத்து ஒருவரும் வெளியே செல்லாமல் ஒளிந்திருப்பார்கள். அவர்கள் பிற மதத்தவர்களாய் இருந்தபோதிலும் குருவிடத்தில் வந்து அந்த மனிதன் மேல் மனமிரங்கும்படி மன்றாடினார்கள். குறிப்பிடம் படிக்கும் ஓர் சிறுவன் குருவிடத்தில் மன்றாடுகிறதை அறிந்து நானே அந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்று தன் உத்தரியத்தை, அந்த பைத்தியக்காரனின் கழுத்தில் போட்டு ஒரு காத வழி தூரம் அவனை கூட்டிக்கொண்டு வந்து பிற மதத்தவர் அனைவரும் வியக்கத்தக்க விதமாக குருவினிடத்தில் விட்டான்.

மேற்சொன்ன ஊரில் நடந்த இப்புதுமைக்கு அடுத்த, சம்பவமானது மாசில்லாமல் உற்பவித்த தேவமாதா கோவிலிலிருக்கும் சுரூபம் அதன் பாதத்தில் ஓர் பாம்பை மிதித்திருக்கும் பாவனையாய், செய்திருந்தது. இயேசு சுவாமி பிறந்த திருநாளில் கிறிஸ்தவர்கள் எல்லாரும் அங்கே, வேண்டிக் கொண்டிருக்கும்பொழுது, ஓர் நல்ல பாம்பு கோவிலில் உட்புகுந்து நடுவில் நகர்ந்து வந்து ஓர் பெண் குழந்தையின் மேல் ஏறியதினால் அவள் அதைக்கண்டு அபயமிட்டு கையால் பிடித்து சனங்கள் மத்தியில் எறிந்துவிட்டாள். எல்லோரும் பயந்து தேவமாதாவை வேண்டிக்கொண்டதினால் பாம்பு ஒருவருக்கும் தீமை செய்யாது வெளியே சென்றுவிட்டது. அன்று பல மதத்தவர்களும் ஓர் சத்திரத்தில் படுத்திருக்கும் பொழுது புகுந்த அந்த பாம்பினால் ஏழுபேர் கடிக்கப்பட்டு இறந்தார்கள்.

தேவமாதாவின் வெற்றிக்கொடியின் கீழ் பசாசுடன் போராடுகிற நீங்கள் அனைவரும் பரிசுத்த கன்னிகையின் அடையாளமான உத்தரியத்தை தரித்து கொள்வீராகில் அநேக நன்மைகளை அடைவீர்கள்.