தேவமாதாவின் வணக்கமாதம் - மே 24

தேவமாதாவின் திரு மரணத்தின் பேரில்!

தேவமாதா சாவுக்கு உட்படுகிறதற்குக் காரணம்.

சர்வ ஜீவ தயாபர சர்வேசுரன் தேவமாதா ஜென்மப் பாவமில்லாமல் உற்பவிக்க வேண்டுமென திருவுளங்கொண்டிருந்தாலும் பாவத்துக்கு ஆக்கினையாகிய சாவிலே நின்று அவர்களை நீக்கவில்லை. சர்வேசுரன் மனுமக்களை எல்லாரும் சாக வேண்டுமென்று இட்ட தீர்ப்பை எல்லாருக்கும் பொதுவாய் மறுக்கக்கூடாததுமாய் இருக்கிறதாகவும், திருக்குமாரன் சகல ஜீவஜந்துக்களுக்கும் ஜீவிய காரணமாய் இருக்கவும், மரணமடையத் திருவுளமானதைப்பற்றி அன்னை அவருக்கொத்தவர்களாய் இருக்கவும் அவ்வேளையிலே நாம் செய்ய வேண்டிய புண்ணியங்களுக்கு மாதிரிகையாய் இருக்கவும் அன்னை சாகவேண்டுமென்று தீர்மானித்தார். சாக வேண்டுமென்ற தீர்வையானது கடினமும் வருத்தமுமாயிருந்தபோதிலும் இந்தத் தீர்வைக்கு தேவமாதா மிகுந்த மனத்தாழ்ச்சியுடனேயும் அமைதியுள்ள மனதுடனேயும் மாறாத நம்பிக்கையுடனேயும் தமது திருமைந்தனிடத்தில் சேர வேண்டுமென்ற ஆசையுடனேயும் சம்மதிக்கிறார்கள். நாமும் அப்பேர்ப்பட்ட மனத்தாழ்ச்சி, அமைதி, நம்பிக்கை, தேவ சிநேகத்தோடு நமக்கு வரப்போகிற சாவைக் கைக்கொள்வோமாகில் சாவு எவ்வளவோ பாக்கியமுள்ளதாயிருக்கும்!

அன்னை மரித்த மேரை.

வேத சாஸ்திரிகள் சொல்லியிருக்கும் வண்ணம் பரிசுத்த கன்னிகையின் சாவானது ஓர் மதுரமான நித்திரையைப்போல் சம்பவித்ததாம். திவ்விய தாயானவள் வருத்தப்படாமலும் கஸ்தி அனுபவியாமலும் இளைப்பாறுவது போல இந்தக் கண்ணீர் கணவாயை விட்டு விட்டு ஆனந்தமான நித்தியத்துக்குச் சேர்ந்தார்கள். மரித்தது வயதின் மிகுதியினாலேயாவது, வருத்தத்தினாலேயாவது நிகழாமல் அன்னையுடய திருஇருதயத்தில் சுவாலை விட்டெரிந்த தேவ சிநேக அக்கினியால் வந்தது! மரத்தின் கொம்பிலே நின்று பழுத்த கனி விழுகிறதைப்போலவும், சூரியன் பகலிலே எங்கும் உஷ்ணப் பிரகாசத்தைப் பொழிந்து தன்னாலே அஸ்தமிக்கிறதைப் போலவும் தேவமாதாவின் திரு ஆத்துமம் எல்லாப் புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டு தன்னிடத்தில் எரிகிற சிநேக உக்கிரத்தினால் தேவன்னையின் திருச்சரீரத்தை விட்டுப் பிரிந்தது. இந்தப் பரம நாயகியின் அமிர்தமான மரணத்தைக்கண்டு அகமகிழ்ந்து நாம் இஷ்டப்பிரசாதத்தோடு சாகும் பொருட்டு அன்னையை மன்றாடக் கடவோம். நல்ல மரணத்தை அடையதக்க பக்தியோடு நடக்கக்கடவோம்.

சாகிறவர்களுக்கு அடைக்கலமாய் இருக்கிற விதம்.

தேவமாதா சாகிறவர்களுக்கு அடைக்கலமுமாய் மாதிரிகையுமாய் தமது திருமைந்தனால் நியமிக்கப்பட்டவர்களாகும். மரண வேளையில் பசாசு செய்கிற கடின சோதனைகளில் நாம் விழாதபடிக்கு நமக்கு உதவி செய்து அப்பொழுது வருத்தமான இக்கட்டுகளில் ஆதரவாயிருந்து நாம் பாக்கியமான மரணத்தை அடைய விசேஷ கிருபை செய்கிறார்கள். இதுவுமல்லாமல் பாக்கியமான மரணத்துக்கு ஏதுவாயிருக்கிற ஆத்தும சுத்தத்தையும் அருந் தவத்தையும் உலக வெறுப்பையும் தேவ சிநேகத்தையும் மற்ற புண்ணியங்களையும் அனுசரிக்கிறதற்கு உதவி செய்கிறார்கள். நீங்களும் நித்திய பாக்கியத்தையாவது, நிர்ப்பாக்கியத்தையாவது வருவிக்கிற மரண வேளையில் இந்தத் திவ்விய தாயார் உஙகளுக்கு ஆதரவாய் இருக்கும்படிக்கு அன்னையைப் பார்த்து, தினம்தோறும் மிகுந்த பக்தி நம்பிக்கையுடன், சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளுமென்று மன்றாடக் கடவீர்கள். இப்படி மன்றாடினால் நித்திய பாக்கியத்தைக் கொடுக்கும் நல்ல மரணம் உங்களுக்கு கிடைக்கும்.

செபம்.

என் அன்புள்ள தாயாரே! நீசப் பரவியிருக்கிற அடியேனுக்கு நல்ல மரணம் வருமோ, அகோரமான மரணம் வருமோவென்று நான் நினைக்கிறபோது அங்கலாய்த்துப் பயந்து நடுநடுங்குகிறேன். நான் எத்தனையோ முறை கனமான பாவங்களைக் கட்டிக்கொண்டு எனக்கு நரகத்துக்குப் போகிற ஆபத்து வருவித்தேனென்று அறிந்து தேவ தீர்வைக்கு மிகவும் பயப்படுகிறேன். கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆதரவே, இந்தக் கஸ்தி சமயத்தில் என்மீது இரங்கி என்னைக் காப்பாற்றியருளும். அப்போது பொல்லாத பசாசு என்னைக் கெடுக்கவும் நரகத்திலே இழுக்கவும் விடாதேயும். உமது திருமைந்தனிடத்தில் எனக்காக உருக்கமாய் மன்றாடி, நான் செய்த எண்ணிக்கையில்லாத பாவத்துக்கு மனஸ்தாபப்பட்டு, இன்று முதல் இடைவிடாமல் தேவ கற்பனைகளை அனுசரித்து, விசேஷமாய் நான் மரண அவஸ்தைப்படும் பொழுது ஆண்டவர் பாதத்தை சிநேகத்தோடு பற்றி பாக்கியமாய்ச் சாகும் பொருட்டு எனக்கு விசேஷ உதவி செய்தருளும். என் தாயே! என் நம்பிக்கையே, அப்போது என்னைக் கைவிடாதேயும். நான் உம்மிடத்தில் சேருமளவும் எனக்கு உதவி செய்தருளும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

மாரியாயே, இஷ்டப்பிரசாதத்தின் மாதாவே, தயையின் சமுத்திரமே, என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றி என் மரண வேளையில் என்னைக் கைவிடாதேயும்.

இருபத்திநான்காம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

இயேசுக்கிறிஸ்துநாதரின் திரு இருதயம் மனிதர்பேரில் வைத்த அளவறுக்கப்படாத அன்பை நினைக்கிறது.

புதுமை!

அர்ச்சியஷ்டவர்கள் எல்லாரும் தேவமாதாவின் பேரில் மிகுந்த பக்தி விசுவாசமுள்ளவர்களாய் இருந்தார்கள் என்பது சத்தியமாம். ஆனால் அவர்களுக்குள் இயேசு சபையை சேர்ந்த புனித ஸ்தனிஸ்லாஸ் என்பவர் இந்தப் பாரம்பரிய பக்தியின் பேரில் அதிக அன்பும் நம்பிக்கையும் வைத்தார் என்று சொல்ல வேண்டும். அவர் சிறு பிராயத்திலேயிருந்து பரம நாயகியை மிகுந்த அன்போடு நேசித்து வணங்கினதுமல்லாமல் அன்னையுடைய பழுதற்ற கன்னிமையைக் குறித்துச் சந்திரனுடைய வெண்மையான கதிர் போலிருக்கிற கற்பென்கிற புண்ணியத்தைச் சொல்லிலடங்காத எச்சரிக்கையுடன் அனுசரித்துக்கொண்டு வந்தார். யாராவது இந்தப் பரிசுத்த வாலிபர் முன்பாக ஓர் ஆகாத வார்த்தையைச் சொல்லுவானாகில் உடனே அவர் பயந்து நடுங்குவார். அவருடைய செளந்தரியமுள்ள முகத்தை கண்டவர்கள் எல்லாரும் புண்ணியத்தின் பேரில் அதிக மதிப்பையும் பிரியத்தையும் அடைவார்கள். அவர் தேவமாதாவின் விசேஷ உதவியால் ஓர் அற்ப குற்றமில்லாமல் நடந்தார். அவர் படிக்கும்பொழுது கடின வியாதியாய் விழுந்து அவஸ்தையாகி மரணத்தறுவாயிலிருந்தார். அப்பொழுது தேவமாதா குழந்தையான இயேசுக்கிறிஸ்துநாதரோடு அவருக்குக் காண்பித்துத் திருப்பாலனை அவருடைய கையிலே வைத்து அவருடைய மனம் சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்தியிருக்கச் செய்தாள். பின்பு பரம நாயகி, என் மகனே! நீ இப்பொழுது சாகமாட்டாய், நமது திருக்குமாரன் இயேசுநாதருடைய சபையிலே பிரவேசித்து அதில் சர்வேசுரனுக்கு ஊழியம் பண்ண வேண்டுமென்று சொல்லி மறைந்து போனாள். அவர் இந்தக் காட்சியில் அடைந்த சந்தோஷத்தினால் விரைவில் குணமடைந்து இயேசு சபையில் சேரும்படி அதிகம் முயற்சித்தார். அதில் சேர்ந்து எவ்வித புண்ணியங்களையும் அதிகமதிகமான சுறுசுறுப்போடு அனுசரித்து வந்தார். தேவமாதாவின் திருநாமத்தை அவர் உச்சரித்தாலாவது மற்றவர்கள் உச்சரிக்கிறதைக் கேட்டாலாவது தமக்குள்ளே உண்டான சந்தோஷ மிகுதியால் பரவசமாய் இருப்பார். தமது மனதில் எரிகிற தேவ சிநேகத்தின் உக்கிரத்தினால் அடிக்கடி உஷ்ணமடைந்து தமது நெஞ்சின் மேல் குளிர்ந்த தண்ணீர் வைத்துத் தாம் அனுபவிக்கிற தேவ உஷ்ணத்தைத் தணிக்கப் பிரயாசைப்படுவார். அவருடைய நல்ல மாதிரிகைகளைப் பார்த்தவர்கள் எல்லாரும் அவர் மனிதனல்ல. சம்மனசாயிருக்கிறார் என்பார்கள். அப்படியே சிறிது காலத்தில் புண்ணிய சாங்கோபாங்கத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்று பிரக்யாதி பெற்ற அர்ச்சியஷ்டவர்களுக்கு ஒப்பானார். சுகிர்த பிரகாசமுள்ள இந்த ஞான மாணிக்கமானது குப்பை போல் இருக்கிற இந்த உலகத்தில் இருக்கக்கூடாதென்றும், அவர் அனுபவிக்கிற தேவசிநேக அக்கினியை இந்த அழிந்துபோகிற சரீரமானது பொறுக்கக் கூடாதென்றும் சர்வேசுரன் அவரைத் தம்மிடத்தில் வரவழைக்கச் சித்தமானார்.

தேவமாதா மோட்சத்துக்கு எழுந்தருளிப்போன திருநாளை மோட்சவாசிகள் எல்லாரும் மோட்சத்தில் மிகுந்த சந்தோஷத்துடன் கொண்டாடுகிறார்கள் என்று நினைத்து புனித ஸ்தனிஸ்லாஸ் தாமும் அவர்களோடுகூட அந்தத் திருநாளை மோட்சத்தில் கொண்டாடப் போகவேண்டுமென்று மிகவும் ஆசையாயிருந்தார். அதற்காக அந்தத் திருநாளுக்கு முன்னதாக அந்த பாக்கியம் தமக்குக் கிடைக்க வேண்டுமென்று ஓயாது மன்றாடிக் கொண்டிருந்ததுமல்லாமல் இந்த திருநாளை மோட்சத்திலேயே கொண்டாடப் போவேன் என்று எல்லாருக்கும் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் நினைத்ததுபோல் திருநாளுக்கு முன் நாலைந்து நாள் வியாதியாய் விழுந்து மிகுந்த சந்தோஷப்பட்டார். திருநாளுக்கு முந்தின நாள் அதிக அவஸ்தையாகி அவஸ்தைப் பூசுதலை பெற்றுத் திவ்விய நற்கருணை வாங்கித் தேவமாதாவின் திருப்பெயரை மிகுந்த பக்தியோடு உச்சரித்து சொல்லொணா மகிழ்ச்சி வெள்ளத்திலே மூழ்கியிருந்தார். நடுச்சாமத்தில் கூட நின்றவர்கள் அவஸ்தை ஆயத்தம் சொல்லும்போது எண்ணிக்கையில்லாத கன்னிகையோடு மோட்ச இராக்கினி அவரிடத்தில் வந்து, மோட்ச பாக்கியத்திற்குரிய மகிழ்ச்சியை மனதில் உண்டாக்கி அவர் மோட்சத்தில் தம்முடைய திருநாளைத் தம்மோடே கூடக் கொண்டாட வரவேண்டுமென்று சொல்லி, அவரை மோட்சத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாள். அவர் சாகிறபொழுது அவருக்கு வயது 18.

கிறிஸ்தவர்களே நீங்களும் மரண வேளையில் பசாசின் தந்திரங்களில் அகப்படாது பாக்கியமான மரணத்தை அடைய விரும்பக் கடவீர்கள். இந்த அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைக்கும்படியாக ஓயாது அன்னையின் அனுக்கிரகத்தைக் கேளுங்கள்.