கடைசி இரவு உணவு 25-02-1923

என் நம்பிக்கைக்கு உரியவளே, என் அருகில் வந்து அன்பின் இரகசியங்களுக்கு செவி கொடுப்பாயாக. கடைசி இராவுணவுக்கு முன் என் சீடர்களுடைய பாதங்களை நான் கழுவியதன் காரணத்தை நான் உனக்கு இன்று சொல்லப் போகிறேன்.

முதலாவது திவ்விய நற்கருணை வழியாக என்னை உட்கொள்ளுகிறவர்கள் எவ்வளவு தூய்மையுடன் இருக்க வேண்டுமென்று ஆத்துமங்களுக்குக் கற்பிக்க நான் அவர்களுடைய பாதங்களைக் கழுவினேன்.

பாவம் செய்தவர்கள் தங்கள் பரிசுத்தத்தனத்தை திரும்பப் பெறும் வழியான பாவசங்கீர்த்தனம் என்னும் திருவருட்சாதனத்தையும் இது குறிப்பிட்டது.

என்னுடைய சேவைக்கு தங்களைக் கையளித்துள்ளவர்கள் எனது நன்மாதிரிகையைப் பின்பற்றி, பாவிகளையும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் மற்றவர்களையும் தாழ்ச்சி சாந்தத்துடன் நடத்த இவர்களுக்குக் கற்பிக்கும்படி நான் என் கையாலேயே என் சீடர்களுடைய பாதங்களைக் கழுவினேன். வெள்ளைத் துணியை என் இடுப்பில் கட்டிக்கொண்டேன். என் அப்போஸ்தலர்களின் ஆத்துமங்களுக்கு உண்மை நலம் புரிய வேண்டுமானால் ஒறுத்தலும், தன்னடக்கமும் அவர்களிடம் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிய வேண்டுமென விரும்பினேன்.

மற்றவர்களுடைய குற்றங்களை மன்னிக்க, அவற்றை மறைக்க, அவற்றை பிறருக்கு வெளிப்படுத்தாதிருக்க எப்போதும் தயாராயிருக்கும் பிறர் சிநேகத்தை அவர்களுக்கு நான் படிப்பிக்க விரும்பினேன்.

கடைசியாக என் அப்போஸ்தலர்களுடைய பாதங்களில் நான் ஊற்றின் தண்ணீரானது உலக ஈடேற்றத்துக்காக என் இருதயத்தில் பற்றி எரிந்த ஆவலை குறித்துக் காட்டியது.

இரட்சிப்பின் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மனுக்குலத்தின்பால் நான் கொண்டிருந்த அன்பை என் இருதயம் அடக்க முடியவில்லை . அவர்களை யாருமற்றவர் - களாக விட்டுச் செல்லவும் மனம் இடம் கொடுக்கவில்லை .

எனவே அவர்கள் மீது நான் கொண்டிருந்த அன்பை உறுதிப்படுத்தும்படியாகவும், உலக முடிவுவரை அவர்களுடன் நான் இருக்கும்படியாகவும், நான் அவர்களின் உணவும் துணையும் உயிரும் அவர்களுக்கு எல்லாமுமாகத் தீர்மானித்தேன்.

கடைசி இரவு உணவு வேளையில், திவ்விய நற்கருணை என்னும் திருவருட்சாதனத்தை நான் ஏற்படுத்துகையில், என் இருதயத்தில் நிரம்பியிருந்த நேச உணர்வுகளை எல்லோரும் அறிவார்களானால் எவ்வளவோ நலமாயிருக்கும்!

உலக முடிவு வரை நடைபெறவிருக்கும் எல்லாவற்றையும் நான் நோக்கினேன். என் உடலாலும் இரத்தத்தாலும் வாழும் கணக்கற்ற மக்களையும், அவை செய்யும் நன்மைகளையும் நான் பார்த்தேன். என் உடலை உட்கொண்டு துறவியர்களாகவும் பலர் தீர்மானிப்பார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் பிறருடைய ஆன்ம ஈடேற்றத்துக்காகவே வாழ உறுதி செய்வார்கள். என் மேல் கொண்ட நேசத்துக்காக பலர் தங்கள் உயிரையே பலியாகக் கொடுப்பார்கள். பாவத்தினாலும், ஆசாபாசங்களினாலும் பலவீனப்படுத்தப்பட்ட பல பேர், ஆன்ம வலிமை தரும் உணவாகிய என் திருவுடலை உண்டு ஆத்தும் பலம் பெறுவார்கள். இவர்களையெல்லாம் நான் பார்த்தேன்.

என் ஆத்துமத்தை நிரப்பிய மகிழ்ச்சி, நேசம், அன்பு, கொடிய துயரம் இவற்றை யாராலும் அளவிட்டுக் கூற முடியாது.

ஜோசபா, இதைப்பற்றி பின்னர் இன்னும் சொல்வேன். நீ இப்பொழுது சமாதானத்துடன் செல். எனக்கு ஆறுதலாயிரு, பயப்படாதே. என் இரத்த ஊற்று நின்று விடவில்லை . அது உன் ஆத்துமத்தை தூய்மைப்படுத்தும்.