தேவமாதாவின் வணக்கமாதம் - மே 23

தேவமாதா பூர்வீக கிறிஸ்தவர்களுக்குச் செய்த உதவியின் பேரில்!

அவர்களுக்குத் தூண்டுதலாய் இருந்தது.

சர்வ ஆராதனைக்குரிய உலக இரட்சகர் இவ்வுலகை விட்டு வெற்றி வீரராய் மோட்சத்துக்கு எழுந்தருளியபோது தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சபைக்கு ஓர் தூண்டுதலாகவும், ஆலோசகராகவும் இருக்கவும் பூர்வீக கிறிஸ்தவர்கள் கொண்ட சந்தேகங்களைத் தீர்க்க ஞான ஒளியாய் இருக்கவும் செய்ய வேண்டிய புண்ணியங்களுக்கு போதனையாயிருக்கவும் தமது நேச அன்னையை இவ்வுலகில் நிலைநிறுத்த திருவுளங்கொண்டார்.

அக்காலத்திலிருந்த விசுவாசிகள் தங்களுடைய ஆண்டவளைப் போலவும் போதகியைப் போலவும், எண்ணி அன்னையிடத்தில் ஆலோசனைக் கேட்க வருவார்கள். அப்பொழுது அந்த திவ்விய நாயகி அவர்களுடைய சந்தேகங்களைத் தெளிவித்து அறியாமையை நீக்கித் தம்மிடமுள்ள அறிவு விவேகத்தின் ஞானச் செல்வங்களை மகா அன்போடு அவர்களுக்குத் தந்தருள்வார்கள். நீங்கள் படுகிற சந்தேகங்களில் உறுதியான நம்பிக்கையோடு தேவ மாதாவினிடத்தில் ஓடிவந்து, உங்கள் புத்திக்குப் பிரகாசம் கொடுத்து உங்களைக் காப்பாற்றுமாறு மன்றாடுவீர்களாகில் உங்களுக்கு வேண்டிய ஞானப் பிரகாசங்களையும் வரப்பிரசாதங்களையும் நீங்கள் நிச்சயம் அடைவீர்கள்.

அவர்களுக்கு மாதிரிகையாய் இருந்தது.

மனத்தாழ்ச்சி, ஒடுக்கம், தேவபக்தி, பிறர் சிநேகம் இவை முதலான சுகிர்த புண்ணியங்களையெல்லாம் மகாப்பிரகாசத்தோடு தேவமாதாவினிடத்தில் துலங்கிக் கொண்டிருந்தன. இந்தப் பரம நாயகியின் வாழ்வெல்லாம் பரிசுத்தத்தின் உத்தம மாதிரிகையாக இருந்தது, எவ் வயதும், எவ் வந்தஸ்து முள்ள கிறிஸ்தவர்களையும் புண்ணிய வழியில் தீவிரமாய் நடக்கச் செய்தது. பூர்வீக விசுவாசிகள் அன்னையிடத்தில் உன்னத சாங்கோபாங்கமாக இருக்கிறதைக்கண்டு அதிசயப்பட்டுத் தங்களால் இயன்ற மட்டும் அவர்களைப் பின்செல்லப் பிரயாசைப்பட்டார்கள். நீங்கள் அந்தத் தேவதாயாருடைய புண்ணியங்களைக் கண்டுபாவித்து அன்னையின் உத்தம மாதிரிகையைப் பின் சென்று நடக்கக்கடவீர்களாக. அன்னையுடைய நடக்கையையும் உணர்ச்சிகளையும் இடைவிடாது தியானித்து ஆராய்ந்து பார்ப்பீர்களாகில், சர்வேசுரனுக்குத் தக்க பிரமாணிக்கத்தோடு ஊழியம் பண்ணவும், புறத்தியாருக்குச் செய்ய வேண்டிய உதவி செய்யலாம். கற்பை நேசிக்கவும், பரிசுத்தமாய் வாழவும் அவசியமான வழி வகைகளை அறிந்துகொள்ளுவீர்கள். அப்படி எல்லாவற்றையும் பார்க்கச் சர்வேசுரனை அதிகமாய்ச் சிநேகித்து, உங்களுடைய சரீரத்தைப் பகைத்து, மனத்தாழ்ச்சியும் அடக்க ஒடுக்கமும் தேவ பக்தியும் உங்கள் கடமைகளைச் செலுத்துவதில் பிரமாணிக்கமும் உள்ளவர்களாய் இருக்க தேவமாதாவினிடமிருந்து கற்றுக் கொள்வீர்களாக.

அவர்களுக்கு அடைக்கலமாய் இருந்தது.

தேவமாதா பூர்வீக கிறிஸ்தவர்களுக்கு அடைக்கலமாயிருந்தார்கள். அவர்கள் தாங்கள் அடைந்த கஸ்திகளிலும் திருச்சபைக்கு உண்டான துன்பங்களிலும் தங்களுக்கு அவசரமான காரியங்களிலும் தேவமாதாவின் அடைக்கலத்தைத் தேடி ஓடிவருவார்கள். அன்னை தங்கள் பேரில் மிகவும் பிரியமுள்ளவர்களாயும் தம்முடைய திருக்குமாரனிடத்தில் சர்வ வல்லபமுள்ளவர்களாயும் இருக்கிறதை அறிந்து கெட்டியான நம்பிக்கையுடன் அன்னையின் ஆதரவைத் தேடிக் கொண்டிருந்தார்கள். நீங்களும் இந்த நியாயங்களை கண்டுனுர்ந்து தேவமாதாவின் பேரில் தளராத நம்பிக்கைக் கொள்ளக்கடவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் இலெளகீக இக்கட்டுகளிலும் உங்களுக்கு தேவையான ஞானக் காரியங்களிலும் உங்களுடைய திருத்தாயாரை நோக்கி அபயமிட்டு மன்றாடுங்கள். அந்தப் பூர்வீக கிறிஸ்தவர்கள் செய்ததைப்போல் பக்தியோடு மன்றாடுவீர்களாகில், உங்களுடைய மன்றாட்டுக்களுக்கு இரங்குவாளென்பது நிச்சயம். சில சமயங்களில் நீங்கள் கேட்கிற காரியங்களை அடையாதிருந்ததினால் நீங்கள் பக்தியுடன் வேண்டிக்கொள்ளாமல் இருந்ததினால்தான் அவைகளை அடையவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

செபம்.

பரிசுத்த மரியாயே! என் தஞ்சமே! எத்தனையோ பாவத்தைக் கட்டிக்கொண்டு பசாசுக்கு அடிமையாகி நித்திய நரகத்திற்குப் போவதற்குப் பாத்திரவானானேன்! நீர் என் பாவக்கட்டுகளை அவிழ்த்து என் எதிரிகளின் கையில் நின்று என்னை மீட்டீர். ஆனால் கெட்ட பசாசு என்னைக் கொடுக்க இடைவிடாது எனக்குச் சோதனை கொடுப்பதினால் அதற்குத் திரும்பி அடிமையாய்ப் போவேன் என்று மிகவும் பயப்படுகிறேன். பரிசுத்த கன்னிகையே! எனக்கு ஆதரவாயிரும். தஞ்சமாயிரும், உமது உதவியுடன் என் எதிரிகளை வெல்லுவேன் என்பதற்குச் சந்தேகமில்லை. ஆனால் எனக்கு வரும் தந்திர சோதனைகளிலும், விசேஷமாய் என் மரணவேளையில் பசாசு என்னுடன் தொடுக்கும் கடின யுத்தத்திலும் நான் உம்மை மறந்து போகாமல் உமது அடைக்கலத்தை உறுதியான விசுவாச நம்பிக்கையுடன் தேடும் பொருட்டு எனக்கு விசேஷ உதவி செய்தருளும். அப்பொழுது இயேசுக்கிறிஸ்துநாதருடைய திருநாமத்தையும், உம்முடைய இன்பமான திருப்பெயரையும், ஜெபமாலையை பக்தியோடு சொல்லி இஷ்டப் பிரசாதத்தோடு நான் மரிக்கும்படிக்கு கிருபை செய்தருளும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

கன்னிகைகளுக்குள் உத்தம கன்னிகையே! நான் என் பாவங்களை வெறுத்து எப்பொழுதும் உம்மை நோக்கி சிந்திக்கும்படியாக உதவி செய்தருளும்.

இருபத்தி மூன்றாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :

ஏழைக்கு, உணவளிக்கிறது.

புதுமை!

புனித சிலுவை அருளப்பர் தேவமாதாவின் பேரில் பக்தியுள்ளவராய் நடந்து பலமுறை அன்னையுடைய உதவியைப் பெற்றுக்கொண்டார். விசேஷமாய் அவருக்கு வந்த மரண ஆபத்திலிருந்து தேவமாதாவின் உதவியால் அற்புதமாய்த் தப்பித்துக்கொண்டார். பதிமூன்று வயதில் அவர் சில பிணியாளருக்கு சேவை செய்ய பல இடங்களுக்குச் செல்லும்பொழுது ஆழமான ஓர் கிணற்றில் கால் தவறி விழுந்து விட்டார். அருகில் நின்ற சிலர் தண்ணீர் நிறைந்த கிணற்றில் அவர் விழுந்ததைக் கண்டு அவர் இறந்திருப்பாரென்று நிச்சயித்து கிணற்று ஓரத்திலிருந்து அழுது கூப்பிட்டார்கள். அதில் விழுந்த அருளப்பரோ வென்றால் அவர்கள் கூப்பிட்டதற்கு மறுமொழியாக நீங்கள் அழ வேண்டாம், எனக்கு ஒன்றும் ஆபத்து ஏற்படவில்லை. எனக்கு ஓர் கயிற்றை விட்டால் உடனே ஏறி வருவேன் என்றார். அவர் சொல்லிய படியே அவர்கள் போட்ட கயிற்றைப் பிடித்துக்கொண்டு எத்தகைய ஆபத்துமின்றி மேலே ஏறினார். அவரைக் கண்ட சனங்கள் ஆழத்திலே விழுந்தும் ஆபத்து இல்லாமல் ஏறினதெப்படியென்று கேட்க அவர் அவர்களை நோக்கி : நான் விழுந்த கணத்தில் செளந்தரியமுள்ள ஓர் இராக்கினி தமது ஆடையை விரித்து அதில் என்னைத் தாங்கினார்கள். மற்றும் நான் தண்ணீரில் அமிழ்ந்திப்போகாதபடிக்கு நீங்கள் கயிறு போடும் வரையில் என்னைத் தமது கையால் தூக்கிக்கொண்டார்கள் என்றார். இந்தப் புதுமையைக் கேட்டவர்கள் மிகவும் அதிசயப்பட்டு தேவ மாதாவுக்குத் தோத்திரம் பண்ணினார்கள். புனித சிலுவை அருளப்பர் தம்மைக் காப்பாற்றின தேவமாதாவின் பேரில் நாளுக்குநாள் அதிக பக்தி வைத்து அன்னையுடைய திருநாட்களையும் அவைகளில் விசேஷமாய் அன்னை ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த திருநாளையும் மிகுந்த விசுவாசத்தோடு கொண்டாடி மற்றவர்களும் நம்பிக்கையாய் இருக்கும் படிக்கு வெகு பிரயாசையோடு பிரசங்கித்து கடைசியில் தேவமாதாவின் உதவியினால் நல்ல மரணம் அடைந்து புனிதராய் விளங்கினார்.

இரண்டாவது

சோமாஸ் என்கிற சந்நியாசிகளுடைய சபையை உண்டாக்கின புனித ஏரோணிமூஸ் என்பவர் ஒரு பட்டணத்துக்கு அதிபதியாயிருந்து ஆளுகிறபொழுது, பகைவர்கள் பெரிய படையோடு வந்து அந்தப் பட்டணத்தை முற்றுகையிட்டுப் பிடித்தார்கள். இவரும் அவர்கள் கையில் அகப்பட்டு அடிமையாய்ச் சிறையில் தள்ளப்பட்டார். இதிலிருக்கும்பொழுது தேவமாதாவை வேண்டிக்கொண்டு, தான் அந்த அடிமைத்தனத்தை விட்டு நீங்கி விடுதலை அடைந்தவுடன் தேவமாதாவின் கோயிலுக்குப்போய் வேண்டுதல் செலுத்துவேன் என வார்த்தைப்பாடு கொடுத்தார். அவர் அப்படி வேண்டிக்கொண்டவுடனே தேவமாதா அவருக்குக் காட்சியில் காண்பித்து அவர் கையிலும் காலிலுமிருந்த விலங்குகளை ஒடித்து சிறைச்சாலையின் திறவுகோலை அவர் கையில் கொடுத்து மறைந்து போனார்கள். அவர் கதவைத் திறந்து வெளியே வந்து பகைவர்களைக் கண்டதினால் பயந்து போனார், திரும்ப வேண்டிக்கொண்டார். அன்னையும் திரும்பி வந்து, அவர் கையைப் பிடித்து பகைவர்கள் அவரைக் காணாத படி அவர்கள் நடுவிலேயே அவரைக் கூட்டிக் கொண்டுபோய் அவருக்கு குறித்த ஊரில் விட்டு விட்டார்கள். அவர் தேவமாதாவின் கோவிலுக்குச் சென்று தன்னோடு கொண்டு வந்த விலங்கை, தேவமாதா செய்த புதுமையின் ஞாபகமாக வைத்து புண்ணிய சாங்கோபாங்கத்தில் நிலை கொண்டு புனிதராக மரித்தார்.


கிறிஸ்தவர்களே! நீங்கள் படும் இன்னல்களில் தேவமாதாவை நம்பி அன்னையிடம் பக்தியோடு வேண்டிக் கொள்ளுங்கள்.