தேவமாதாவின் வணக்கமாதம் - மே 22

இயேசுக்கிறிஸ்துநாதர் மோட்சத்துக்கு எழுந்தருளின பிற்பாடு தேவமாதா ஜீவித்த ஜீவியம்!

தேவமாதா மோட்சத்தை மாத்திரமே விரும்பிக் கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது நாம் அனைவரும் தேவமாதாவுடனும் இயேசுநாதருடைய சீடர்களுடனும் ஒலிவேத் மலைக்கு நினைவினால் சென்று அதில் நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்க்கக்கடவோம். அனைத்துலகிற்கும் ஆண்டவராயிருக்கிற பரம இராஜாவாகிய இயேசுநாதர் தம்முடைய திருத் தாயாருக்கும், பிரியமான சீஷர்களுக்கும் சுகிர்த புத்திமதிகளைச் சொல்லி அவர்களை ஆசீர்வதித்துத் தமது மட்டற்ற வல்லபத்தைக் கொண்டு நிகரில்லாத மகிமைப் பிரதாபத்தோடு மோட்சத்துக்கு ஜெயசீலராய் எழுந்தருளிப் போகிறார். அச்சமயத்தில் தேவமாதா அடைந்த மகிழ்ச்சிப் பெருக்கையும் தம் மைந்தனோடு கூடப் போக வேண்டுமென்று அவர்களுக்கிருந்த அளவுகடந்த ஆசையையும் எவரும் சொல்லுந்தரமன்று. அந்த நாள் துவக்கி தமது திருமரணம் வரையிலும் மோட்ச பேரின்ப இராச்சியத்தில் எப்பொழுது வந்தடைவேனோவென்றும் எனது திரு மைந்தனை எப்பொழுது மீண்டும் காண்பேனோவென்றும் விரும்பிக் கொண்டிருந்தார்கள். நாமும் பரிசுத்த தேவதாயைப்போல் இவ்வுலகை பரதேசமா எண்ணி இதனுடைய சம்பத்துக்களையும் செல்வ பாக்கியங்களையும் வெறுத்து, நம்முடைய மெய்யான இராச்சியமான வான்வீட்டை நாடி விரும்பி நித்திய கிரீட முடிகளை அடைய நம்மாலான பிரயாசைப்படக் கடவோம்.

தேவமாதா மோட்சத்தை மாத்திரமே நாடிக் கொண்டிருந்தார்கள்.

தேவமாதா தம்முடைய திருக்குமாரன் மோட்சத்துக்கு எழுந்தருளி போனதைப் பார்த்த பின்னர் மோட்சத்தை மட்டுமே நாடிக் கொண்டிருந்தார்கள். அன்னையின் நினைவு விருப்பம் உணர்ச்சியாகவும் அதன்மீது வைத்திருந்தார்கள். இப்பூமியையும் அதனுடைய பற்பல பொருள்களையும் ஒரு சிறிதும் விரும்பாமல் தாம் புண்ணியத்தில் அதிகரிக்க வேண்டுமென்றும், தாம் சர்வேசுரனுக்கு அதிகப் பிரியப்பட வேண்டுமென்றுள்ள தமது திருமைந்தனுடன் ஐக்கியமாகப் போக வேண்டுமென்றும், கவலையாயிருந்தார்கள். நாமோவென்றால் நம்முடைய திருத்தாயார் நமக்குக் காண்பித்த நல்ல மாதிரிக்கைகளின்படி பின்பற்றாமல், நம்முடைய மெய்யான வீடாகிய மோட்சத்தை நோக்காமல் அழிந்து போகும் இந்தப் பூமியில் அருவருப்பான புழுக்களைப்போல் தவழ்ந்து திரிந்து நிலையற்ற செல்வத்தை அக்கறையோடு தேடி முடிவில்லாத மோட்ச பேரின்ப செல்வ பாக்கியத்தை அடைவதற்கு சிறிதேனும் முயலாதிருக்கிறோம். இதைப்போல் மதியீனம் இவ்வுலகில் வேறு ஏதாவது உண்டா?

தேவமாதா மோட்சத்தைக் குறித்து மாத்திரமே பேசிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பரம நாயகி அப்போஸ்தலர்கள் மற்றும் விசுவாசிகள் இவர்களுடன் இருக்கும்பொழுது மோட்சத்துக்குப் போக வேண்டுமென்ற நம்பிக்கையைக் கொண்டு அவர்கள் படுகிற கஸ்திகளில் அவர்களைத் தேற்றி ஆறுதல் கூறி வந்தார்கள். மோட்சமானது அவர்களுடைய உடைமையும் சொந்த இராச்சியமும் இளைப்பாறும் இடமாயிருக்கிறதாகச் சொல்லி, அவர்கள் துவக்கின வேலைகளிலும் அனுபவித்த துயரங்களிலும் அவர்களை உற்சாகப்படுத்தி வந்தார்கள். மோட்சத்துக்கு போவதற்கென்றே நாமும் பிறந்திருக்கிறோம். அப்பரிசுத்த ஸ்தலத்தில் நாம் சேரும் பொருட்டு நமக்கு வேண்டிய உதவிகளை நல்க இயேசுக்கிறிஸ்துநாதரும் தேவமாதாவும் காத்திருக்கிறார்கள். ஆனால் மோட்சத்தை அடைய ஒன்றும் செய்யாமலும் கஷ்டப்படாமலும் உலக பற்றுதல்களைக் கொண்டிருப்போமானால் நிச்சயம் நாம் ஒருநாளும் ஈடேற்றத்தை அடைய மாட்டோம்.

செபம்.

பரிசுத்த கன்னிகையே! இவ்வுலகத்தில் பட வேண்டிய பாடுகளும் கஸ்தியும் வருத்தமும் கொஞ்சக் காலத்திற்காக இருந்த போதிலும் அவை பேரின்ப வீட்டில் அமர்வற்ற நித்திய ஆனந்தமும் மட்டற்ற மகிமையும் எங்களுக்குப் பெறுவிக்குமென்பது குன்றாத சத்தியமாம். ஆகையால் எங்கள் தாயே! உங்கள் உள்ளமெல்லாம் மகிழ்ந்து மிகுதியான சந்தோஷத்தை அனுபவிக்கின்றது. இத்துன்பம் நிறைந்த ஜீவியகாலம் எப்பொழுது முடியுமோவென ஆவலுடன் காத்திருக்கிறோம். உமது அண்டையில் சேர்ந்து சகல மோட்சவாசிகளுடன் உம்மை வாழ்த்திப் புகழ்ந்து, அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் அமிழ்ந்து ஆனந்திக்கும் பாக்கியம் எங்களுக்கு எப்பொழுது கிடைக்கும்? எங்கள் தாயே! பாவம் அறியாத இடமும், புயலடிக்காத துறைமுகமும், இருள்படாத பிரகாசமும், மரணமில்லாத ஜீவியமுமான மோட்சத்தில் நாங்கள் சேருமளவும் எங்களைக் கைவிடாமல் மகா அன்போடு நடப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது: 

எங்கள் தாயே! நாங்கள் சாகிற வேளையில் எங்கள் ஆத்துமம் மோட்ச பேரின்பத்தை அடைய கிருபை செய்தருளும்.

இருபத்தி இரண்டாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது:

ஞானவாசகப்(வேதாகமம்) புத்தகத்தை வாசித்து சிந்திக்கிறது.

புதுமை!

பெரிய அல்பேர்த் என்பவர் சிறு வயதிலிருந்தே தேவமாதாவின் மீது அதிகப் பக்தியுள்ளவராயிருந்தார். தேவதாயைக் குறித்துத் தினமும் பற்பல செபங்களை வேண்டிக்கொள்வதுமின்றி 16-ம் வயதில் புனித சாமிநாதர் சபை உடையை தரித்துக்கொண்டு அந்தச் சபையில் உட்பட்டுக் கல்வி சாஸ்திர மடத்துக்குப் படிக்கப் போனார். அதில் இருக்கும்பொழுது மற்ற பிள்ளைகள் நல்ல படிப்புள்ளவர்களாய் இருக்கிறதைக்கண்டு, கல்வி சாஸ்திரத்துக்குத் தகுதியான புத்தி தமக்கு இல்லாததினால் மிகவும் மனம் தளர்ந்து அதைப் பொறுக்க முடியாதவராய் ஒருநாள் பசாசு சொன்ன தூர்ப் புத்தியால் மடத்தைவிட்டு வீட்டுக்கு போக தீர்மானித்து இருந்தார். அவ்வாறு செல்ல ஆசையாய் இருக்கும்பொழுது தேவமாதா அவர்மேல் இரங்கி, அவருக்கு ஒரு காட்சியைக் காண்பித்தார்கள். இரவிலே நித்திரை செய்யும் பொழுது அவர் ஓர் ஏணியை எடுத்து மடத்து சுவரின் மேல் சாற்றி அதில் ஏறினதாகவும், அப்பொழுது ஓர் இராக்கினி அவரை கீழே தள்ளினதாகவும் அவர் திரும்பி ஏறின்பிறகு அந்த இராக்கினி ஏன் இந்த மடத்தை விட்டுச் செல்ல எண்ணி இருக்கிறாயென அவரைக் கேட்க, அதற்கு அவர், எவ்வளவு முயற்சித்தும் கல்வி சாஸ்திரங்களைப் படிக்க என்னால் கூடவில்லை. ஆனதினாலே இனி முயற்சித்துப் பயனில்லை என்று தப்பி ஓட வழிபார்க்கிறேன் என்றார். நீ தைரியமாயிருந்து கவனமாய்ப் படித்தால் தேவமாதாவின் உதவியினால் ஓர் பெரிய சாஸ்திரியாக ஆவாய். அந்த சாஸ்திரமெல்லாம் முயற்சியினால் அல்ல, பரமநாயகியின் இரக்கத்தினால்தான் வந்ததென்று அறிந்துகொள், நீ இனிமேல் மற்றவர்களுக்கு வெகு முதன்மை கல்வி புகட்டியபின் கடைசி காலத்தில் உன்னுடைய கல்வி சாஸ்திரமெல்லாம் திடீரென உன்னை விட்டு நீங்கிப்போகும் என்றதாகவும் கண்டார். அவர் அந்தக் காட்சியைக் கண்டு ஆறுதல் அடைந்து வெகு பிரயாசையோடு படித்து தர்க்க சாஸ்திரத்திலேயும் தேவ சாஸ்திரத்திலேயும் மற்ற சாஸ்திரங்களிலேயும் மிகவும் தேர்ந்த நிபுணராகி அநேக புஸ்தகங்களை எழுதினார். ஆனால் பல வருஷங்களுக்குப்பிறகு அவர் மரிப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் கொலோனியா என்ற பட்டணத்தில் திரளான சனங்களுக்கு படிப்பித்துக் கொடுக்கும் பொழுது முன் அவர் படித்த கல்வி சாஸ்திரங்களை முழுதும் திடீரென மறந்துபோய் ஒன்றும் அறியாதவரைப் போல் ஆகி விட்டார். அப்பொழுது தேவமாதா அவருக்கு சிறுவயதில் காண்பித்த காட்சியை நினைத்து அதை மக்களுக்கு வெளிப்படுத்தி மடத்துக்குச் சென்று செபத்திலும் தியானத்திலும் மூன்று வருஷமளவாக நிலைபெற்று பாக்கியமான மரணத்தை அடைந்தார். இப்போது அவர் புனித அல்பெர்த்து என்ற வேத சாஸ்திரியாய் விளங்குகிறார்.

கிறிஸ்தவர்களே! உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நமது பரிசுத்த வேதத்தின் மெய்யான அறிவு வரும் படியாக தேவமாதாவின் அனுக்கிரகத்தைக் கேட்டுக்கொள்வீர்களாக.