தேவமாதாவின் வணக்கமாதம் - மே 21

இயேசுகிறிஸ்து நாதர் கல்லறையிலிருந்து உயிர்த்து எழுந்தருளித் தம்முடைய திருத்தாயாருக்குக் காண்பிக்கிறார்!

தேவமாதா தமது திருமைந்தன் உயிர்த்ததைக்கண்டு அடைந்த பேரானந்தம்.

நம்முடைய ஆத்துமங்களுக்கு இரட்சகரான இயேசுக் கிறிஸ்துநாதர் நரகக் கொடுமையையும் சாவினுடைய கொடூரத்தையும் வென்று கல்லறையைவிட்டு அளவில்லாத பிரதாபத்தோடு வெற்றி வீரராக உயிர்த்து எழுந்தார். அவ்வேளையில் தம்முடைய திருமாதாவை மறக்காமல் அன்னைக்குத் தாம் அடைந்த மகிமையோடு காணப்பட்டார் என்பது பக்தியுள்ள சத்தியமாம். இயேசுக்கிறிஸ்துநாதர் சொல்லொணா கஸ்தி அவமானப்பாடுகளை அனுபவிக்கும் பொழுது அந்தப் பரம நாயகி அவரை விடாமல் மனோவாக்குக் கெட்டாத துக்க சாகரத்தில் அமிழ்ந்திருந்தார்கள். தமது திருச் சரீரத்தில் அனுபவித்த வருத்தம் அனைத்தையும் அன்னை தம்முடைய இருதயத்தில் அனுபவித்தார்கள். ஆகையால் உயிர்த்து எழுந்த இயேசுக்கிறிஸ்துநாதர் அடைந்த கஸ்தி துன்பங்களுக்குத் தகுதியான ஆனந்த சந்தோஷத்தை அளிக்க வேண்டுமென்று எண்ணி அன்னைக்குத் தம்மைக் காண்பிக்கச் சித்தமானார். அவ்வாறே சர்வ நீதியுள்ள தயாபர சர்வேசுரன் தாம் மனிதருக்கு வழங்குகிற ஞான நன்மைகளை அவர்கள் தம்மைப்பற்றி அனுபவித்த வருத்தங்களுக்குத் தகுதியானபடி வழங்குகிறார். ஆகையால் உலக மீட்பரை முழு மனதோடு நேசித்து அவர் அடைந்த துன்பங்களுக்கு இரங்கி அவருடைய திருச்சிலுவையை சுமக்கிறது போல் அவரைப் பின்பற்றிக் கல்வாரி மட்டும் பின் செல்வோமானால் அவர் பொழிகிற ஞான சந்தோஷத்துக்கும் கொடுக்கிற உன்னத மகிமைக்கும் பங்குபற்றுபவர்களாக இருப்போம்.

தேவமாதா தம்முடைய திருமைந்தன் மட்டற்ற மகிமை பெற்றதைக் கண்டு அடைந்த ஆனந்தம்.

இயேசுக்கிறிஸ்துநாதர் மட்டற்ற மகிமையோடு உயிர்த்ததைக்கண்டு தேவமாதா அடைந்த சொல்லிலடங்காத சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் ஆராய்ந்து பார்க்கக்கடவோம். அந்தப் பரமநாயகி தமது திருமைந்தன், சூரியனை மங்கச் செய்யும் பிரகாசத்தை அடைந்த அட்சம், சூட்சம், இலகு, பிரகாசம் என்ற மகிமை வரங்களைப் பெற்றதைக் கண்டு, தாம் முன்னர் அடைந்த வியாகுல வேதனைகளுக்குப் பதிலாக மட்டற்ற மகிழ்ச்சியால் பூரிக்கப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய திரு உடலில் வெற்றி அடையாளங்களைப் போல் இருக்கிற திருக்காயங்களை முத்தமிட்டார்கள். மோட்சவாசிகள் பேரின்ப வீட்டில் உணருகிற இன்ப சந்தோஷத்தை அனுபவித்தார்கள். அநித்திய உலகில் இருந்தபோதிலும் அவர்கள் மேலான இராச்சியத்திற்குரிய மனோவாக்குக் கெட்டாத பேரின்பத்தை, நுகர்ந்தார்கள். நமது ஒப்பற்ற அன்னை சொல்லொணா ஆனந்தத்தை அனுபவிக்கிறதைப்பற்றி வாழ்த்தி, நம்மை இவ்வுலக பாக்கியங்களை வெறுக்கச் செய்து தாம் அடைந்த மோட்ச ஆனந்தத்தை நாமும் அடையும்படி கிருபை செய்ய வேண்டுமென மன்றாடுவோமாக.

தேவமாதா தமது திருமைந்தனிடத்தில், அவரை விட்டுவிட்ட சீஷர்கள் திரும்பிச் சேருவதைக்கண்டு அடைந்த ஆனந்தம்.

இயேசுநாதர் உயிர்த்ததற்குப் பின்னர் அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் அவரிடத்தில் திரும்பி வந்து சேருகிறதைக் கண்டு, தேவமாதா எவராலும் கண்டு பிடிக்கக்கூடாத சந்தோஷத்தை அடைந்தார்கள். அவர்கள் எல்லோரும் அர்ச். அருளப்பர் நீங்கலாகப் பயந்து ஓடிப்போய்த் தங்களுடைய மேய்ப்பன் சாகிற வேளையில் ஆட்டுக்குட்டிகள் சிதறிப் போகிறது போல் சிதறி இருந்தார்கள். இயேசுக் கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்ததின் பின் அவர்கள் மன உறுதி அடைந்து புது மனிதராகித் தங்களது மேய்ப்பனிடத்தில் வந்து சேர்ந்தார்கள். நாமும் அடிக்கடி பாவங்கட்டிக் கொண்டு பசாசுக்கு அடிமையாகி இயேசுக் கிறிஸ்துநாதரை மறுதலித்து விட்டு நமது திருத்தாயாருக்கு மிகுந்த கஸ்தி வருவித்தோம். எப்பொழுதும் மிகுந்த அன்போடும் ஆண்டவரை நேசித்துவரும் பரம நாயகிக்கு சந்தோஷம் வருவிப்போமாக. பரிசுத்த கன்னிகையே, எங்களுடைய பலவீனத்தால் ஒன்றும் கூடாமையால் எங்களைக் கைதூக்கி நாங்கள் பாவத்தில் ஒருக்காலும் வீழாதபடிக்குக் கிருபை செய்தருளும்.

செபம்

எவ்வித சுகிர்த பாக்கியத்தாலும் நிறைந்த தாயாரே! உமது திருமைந்தன் உமக்குக் காணப்படும்பொழுது அந்த மகிமையான இராஜாவைத் தொடர்ந்து பிதா பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் ஆதித்தகப்பன், ஆதித்தாய் முதற்கொண்டு நாலாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்த புண்ணிய ஆத்துமாக்கள் எல்லாரும் உம்மைத் தங்கள் இராக்கினியாகவும், நல்ல உபகாரியாகவும் வாழ்த்திக் கொண்டிருந்தார்கள். நீர் அவர்களுக்குள்ளே ஆண்டவளாய் நின்று அவர்களைப் பார்க்க அதிக சந்தோஷமும் பாக்கியமும் அனுபவித்தீரே. நீசப் பாவியாகிய நானும் அவர்களோடு உம்மை மோட்ச இராக்கினியாக வாழ்த்தி, உமது திருமைந்தன் உயிர்த்ததினால் சந்தோஷப்படுகிறேன். நான் மீட்புப் பெறும் வரையிலும் என்னைக் கைவிடாதேயும் என்று பிரார்த்திக்கிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

பரிசுத்த கன்னிகையே! இயேசுநாதருக்குப்பின் நீரே என் உறுதியான நம்பிக்கையாயிருக்கிறீர்.

இருபத்தி ஒன்றாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :

ஆலயத்திற்கு கொஞ்சம் எண்ணெய்யாவது ஓர் மெழுகு திரியாவது கொடுக்கிறது.

புதுமை!

முற்காலத்தில் லீயோ இசோரியா என்னும் அரசன் அப்பொழுது வாழ்ந்து வந்த பதிதர்களுக்கு உதவி செய்து, தானும் பதிதனாகி, தேவமாதா முதலான அர்ச்சியஷ்டவர்களுடைய அர்சியஷ்ட பண்டங்களையும் சுரூபங்களையும் வணங்க வேண்டாமெனப் பணித்து கிறிஸ்தவர்களுக்கு அநேக விதங்களில் இன்னல் விளைவித்து வந்தான். அப்பொழுது புனித தமாஸென் அருளப்பர், கலிப் என்ற அரசரின் அமைச்சராக தமாஸென் பட்டணத்தை ஆண்டு கொண்டிருந்தார். அவர் பதிதான சிங்கம் என்ற அரசரை எதிர்த்து நின்று அவன் இராச்சியத்திலிருந்த கிறிஸ்தவர்களுக்குப் பற்பல நிரூபங்கள் எழுதி அவர்களைச் சத்திய வேதத்திலும் விசுவாசத்திலும் திடப்படுத்தினார். சிங்கம் என்ற அரசன் இதை அறிந்து அவர்மீது பகை வைத்து அவரைக் கெடுக்க வேண்டுமென்ற ஆசையினால் ஒரு கபடமான தந்திரம் செய்தான். பொய்யான ஓர் கடிதம் எழுதி அதில் சிங்கமென்ற அரசர் தமாஸென் பட்டணத்துக்கு படையோடு வந்தால், தான் அந்த பட்டணத்தை அவருக்குக் கையளிப்பேனென்று எழுதி வைத்த, அந்தக் கடிதம் தமாஸென் அருளப்பர் தனக்கு அனுப்பினாரென்று பொய் சொல்லி அந்தக் கடிதத்தைக் கலிப் என்னும் அரசருக்கு அனுப்பினான். அரசர் அந்தக் கடிதத்தை வாசித்து இது நன்மை என்று ஏற்று தன் அமைச்சரால் தமாஸென் அருளப்பரை வரவழைத்து அவருக்கு அதை காண்பித்தான். அவர் தம் கையெப்பம் வைத்திருக்கிறதையும், தம் எழுத்துப் போலிருக்கிறதையும் கண்டு இது என் மீது உண்டான கபடமென்றும், நான் அத்தகைய காகிதத்தை ஒருக்காலும் எழுதவில்லையென்றும் எவ்வளவோ அவரிடத்தில் எடுத்துச் சொல்லியும் அவர் சொன்ன நியாயங்களை ஏற்றுக்கொள்ளாமல் அவரைக் கோபித்து அவருடைய வலது கையை அறுக்கக் கட்டளையிட்டான். அறுக்கப்பட்ட கையை, தெரு வீதியில் அவர் செய்த குற்றம் எல்லாரும் அறியும் வண்ணம் கழுமரத்தில் கட்டிவைக்கச் சொன்னான். அப்படியே செய்தார்கள். புனித தமாஸென் அருளப்பர் ஒரு கை இல்லாதவராக தமது வீட்டுக்கு சென்று அரசரின் கோபம் அமர்ந்தபிறகு அன்று மாலை மீண்டும் அரசரிடம் அறுக்கப்பட்ட கையை திரும்பத் தமக்கு கொடுக்க வேண்டுமென கெஞ்சி மன்றாடினார். அரசரானவர் இராசன் எழுதின காகிதம் கள்ளக் காகிதமென்று அறிந்து சந்தேகப்பட்டு, புனித தமாஸென் அருளப்பர்மீது மனமிரங்கி அறுக்கப்பட்ட கையை அவருக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான். அவர் அதை வாங்கித் தேவமாதாவின் கோவிலுக்குச் சென்று மிகுந்த பக்தியோடும் நம்பிக்கையோடும் மன்றாடினதாவது: என் ஆண்டவளே! உம்முடைய சுரூபங்களை வணங்காமல் இருக்கக்கூடாதென்று நான் எழுதினதினால் என் கை அறுக்கப்பட்டதே, அந்த, வணக்கம் உமக்கு ஏற்கும் வணக்கமென்றும் என் பேரில் எழுதின காகிதம் பொய்யான காகிதமென்றும் எல்லாரும் அறியும்படிக்கு என் கையை ஒட்ட வைப்பீரானால், அதைக்கொண்டு இனிமேல் உம்முடைய வணக்க ஸ்தோத்திரத்துக்காக எழுதுவேனென்று மன்றாடினார். அப்படியே மன்றாடின பிறகு தேவமாதாவை நம்பி தமது கைப்பட்டையில் துண்டிக்கப்பட்டக் கரத்தைக் கோர்த்து வைக்கவே அற்புதமாக இரண்டும் முன்னிருந்தாற்போல் ஒட்டிக் கொண்டன. அந்தப் புதுமை உடனே ஊர் முழுதும் பரம்ப அரசர் அதைக் கேள்விப்பட்டு அவரை அழைத்து அவருடைய கையை அறுத்ததற்கு மன்னிப்பு கேட்டதுமல்லாமல், என்னிடம் எதைக் கேட்பீரோ அதெல்லாம் கொடுப்பேன் என்று சொன்னான். அவரோவென்றால் எனக்கு வேறொன்றும் வேண்டாம். அமைச்சர் உத்தியோகத்தை விடுவதற்கு உத்தரவு கொடுத்தால் போதும் என்றார். அந்த உத்தரவைப் பெற்றபின் சாகும் வரையிலும் தேவமாதாவின் பேரில் நன்றியறிந்தவராய், மிகுந்த பக்தி வைத்ததினால் நல்ல மரணத்தை அடைந்து புனிதராய் கொண்டாடப்படுகிறார். சாகும்வரையில் அவரிடத்தில் தேவமாதா செய்த புதுமையின் அடையாளமாக அவருடைய கை ஒட்டின இடத்தைச் சுற்றிச் சிவப்பான ஓர் தழும்பு இருந்தது.

கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள சகோதர! சகோதரிகளே இடைவிடாமல் தேவமாதாவினுடைய திருப்படங்களையும். சுரூபங்களையும் நீங்கள் வாங்குவதுமின்றி அவைகளை உங்களால் இயன்ற அளவு மற்றவர்களும் வணங்கும்படி செய்யக்கடவீர்களாக.