தேவமாதாவின் வணக்கமாதம் - மே 20

தேவமாதாவின் கடைசி வியாகுலங்களின் பேரில்!

கன்னி மாமரி பட்ட வியாகுலங்கள் எவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கிறது.

இயேசுநாதர் தம்மை பலியாகத் திவ்விய பிதாவுக்கு ஒப்பு கொடுக்கும் காலம் வந்துற்றபொழுது தம்முடைய தாயாகிய கன்னிமரியாயிடத்தில் வந்து, நான் மனிதரை மீட்கும் பொருட்டு சாகப்போகிறேன் என்று சொல்லி உத்தரவு கேட்டுப் போனார். தேவமாதாவோவெனில், கொடிய யூதர் தமது திருமைந்தனை கொல்லுவார்களென்று மகா துக்கத்தோடு இருந்து மறுநாள் அவரை இன்னும் ஒருமுறை காண வேண்டுமென்று வெளியிலே புறப்பட்டு போனார்கள். அப்பொழுது தமது மாசில்லாத குமாரன் துஷ்ட மனிதனைப் போல பின் கட்டு முறையாக கட்டப்பட்டு எருசலேம் பட்டணத்தின் தெரு வீதிகளில் இழுக்கப்பட்டதையும் அவர் பேரில் சொல்லப்பட்ட பொய்சாட்சிகளையும் அவருடைய திருச்சரீரம் ஐயாயிரம் அடிபட்டு இரத்தத்தினால் வேறுபட்டிருக்கிறதையும் கொடியவனான பிலாத்து என்பவன் அநியாயமாக தீர்ப்பை சொன்னபிறகு இயேசுநாதர் சிலுவையை சுமந்து கபால மலைக்கு போகிறபொழுது சுமத்தப்பட்ட சிலுவையின் பாரத்தை தாங்காது சோர்ந்து களைத்து தரையில் விழுந்ததையும், மலையில் சேர்ந்து இரண்டு கள்ளருக்கு நடுவில் சிலுவையில் அறையுண்டு மூன்று மணி நேரம் அவஸ்தையாயிருந்து பாவிகளுக்காக கடின மரணத்தை அடைந்ததையும் கண்டு தேவமாதா அனுபவித்த வியாகுலப் பெருக்கமானது வேத சாட்சிகள் எல்லோரும் பட்ட கொடூரமான வேதனைகளை விட ஆயிரமடங்கு கொடூரமாயிருந்தது. அப்பேர்ப்பட்ட வியாகுலமானது மனிதர் செய்த பாவங்களினால் உண்டானதென்பது நிச்சயம். ஆகையால் பாவத்தின்பேரில் மெய்யான மனஸ்தாபத்தை உங்கள் மனதில் வருவிக்க வேண்டுமென மன்றாடுவீர்களாக.

அவற்றின் முகாந்தரம் என்னவென்று ஆராய்ந்து பார்க்கிறது.

தேவமாதா அவ்வளவு வியாகுலம் அனுபவித்ததற்கு முகாந்தரம் என்னவென்றால் மகா கொடிய பாடுகள் பட்ட தமது குமாரனாகிய இயேசுநாதருடன் வேதனை அனுபவிக்கும் படியாகவும் அன்னைக்கு மோட்ச இராச்சியத்தில் அதிக பாக்கியம் கிடைக்கும் படியாகவும் அன்னையை பார்க்கும்பொழுது மனிதர் தங்களுக்கு ஏற்படும் துன்பமனைத்தையும் பொறுமையோடு அனுபவிக்கும் படியாகவும் இம்மூன்று முகாந்தரங்களினால் சர்வேசுரன் தேவமாதாவுக்கு அதிக வியாகுலத்தை அளிக்க திருவுளம் கொண்டார். ஆகையால் இவ்வுலகில் பிறந்த நாள் முதல் மரிக்கும் வரையிலும் சொற்ப குற்ற முதலாய் கட்டிக்கொள்ளாத தேவமாதா வியாகுல சாகரத்தில் அமிழ்ந்திருக்கையில் நீசப்பாவிகளான மனிதர் மட்டும் ஏதாவது துன்பப்படும்போது குறைபடுவானேன்? தனது சிலுவையை சுமந்து என்னை பின் செல்லுகிறவன் மோட்சம் அடைவானென்று இயேசுநாதர் திருவுளம் பற்றினார். தனது சிலுவையாகிய துன்பம், நோவு முதலான நிர்ப்பந்தங்களை பொறுமையில்லாமல் அனுபவிக்கிறவன் மோட்சத்தை அடைவது அரிது என அறிந்து பொறுமை என்னும் புண்ணியத்தை தர வியாகுலமாதாவை பார்த்து மன்றாடுவோமாக.

அவற்றை எப்படி அனுபவித்தார்கள் என்றும் ஆராய்ந்து பார்க்கிறது.

சிலுவை அடியில் நிற்கும் வியாகுலமாதாவிடம் விளங்கின புண்ணியங்களை ஆராய்ந்து பார்க்கக்கடவோம். வேதசாட்சிகளின் இராக்கினியான கன்னிமரியாயே சிலுவையில் அறையுண்டு மரண அவஸ்தைப்படுகிற இயேசுநாதரோடு கூட இருக்கிற பொழுது அவர் மாசில்லாதவரென்றும், அவர் பெயரில் இட்ட தீர்வை அநியாயமான தீர்வை என்றும், அவரைக் கொல்லுகிற யூதர்கள் பெரிய பாதகம் கட்டிக் கொள்கிறார்களென்றும் அறிந்திருந்தாலும் அப்பேர்ப்பட்ட அநியாயத்தின் பேரில் முறைப்படாமல் தேவசித்தத்துக்கு கீழ்ப்படிந்து தமது பிராணனை பார்க்க அதிக உருக்கமாய்த் தாம் சிநேகித்த தமது நேசக்குமாரனை மனிதர் இரட்சணியத்துக்காக தேவ நீதிக்கு ஒப்புக்கொடுத்தார்கள். அவ்வேளையில் கன்னிமரியாள் அனுபவித்த வியாகுல பெருக்கம் எவ்வளவென்று கேட்டால், அந்த வியாகுலத்தை உலகத்திலிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சர்வேசுரன் கொஞ்சங் கொடுக்க சித்தமானால் எல்லாரும் சாவதற்கு போதுமென்று வேதபாரகர் எழுதி வைத்திருந்தார்கள். ஆகையால் உங்கள் ஆத்துமத்துக்காக அப்பேர்ப்பட்ட வியாகுலத்தை அதிசயமான பொறுமையோடு அனுபவித்தவர்களுமாய் மனிதர்பேரில் வைத்த அளவுகடந்த பாசத்தினால் உங்களுக்காக தமது குமாரனைப் பலியாக ஒப்புக்கொடுத்தவர்களுமாய் இருக்கிற தேவமாதாவின் பேரில் முழு நம்பிக்கையாயிருந்து பாவத்தால் இனி துன்பம் வருவிக்காமல் புண்ணியத்தை செய்து உகந்த பிள்ளைகளாகக் கடவீர்களாக.

செபம்.

வியாகுலமாதாவே! சிலுவையிலிருந்து இயேசுநாதர் அருளப்பரைக் காட்டி இதோ உம்முடைய மகனென்று சொன்னபொழுது கிறிஸ்தவர்கள் எல்லாரையும் உமக்கு பிள்ளைகளாக ஒப்புக்கொடுத்தாரென்பது மெய்யான சத்தியமாகையால் நீர் எனக்கு தாயாராயிருக்கிறீரென்று நிச்சயிக்கிறேன். ஆனால் இன்றுவரையில் நான் உம்முடைய பிள்ளை என்பதற்கு தக்க பிரகாரமாய் நடவாமல் என் பாவத்தினால் உமக்கு அநேகம் விசை துன்பம் வருவித்தேன். இனி நான் பசாசின் தந்திரத்தில் அகப்படாதபடிக்கு என் பேரில் இரங்கி என்னைக் காப்பாற்றி உம்மோடு கூட மோட்ச இராச்சியத்துக்கு கூட்டிக் கொண்டு போகவேண்டுமென்று மன்றாடுகிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

தயாளமுள்ள தாயாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

இருபதாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரியையாவது :

தேவமாதாவைக் குறித்து ஒரு திருப்பலி செய்விக்கிறது. அல்லது திருப்பலி காண்கிறது.

புதுமை!

விதவையாக இருந்த ஓர் சீமாட்டி தான் பெற்ற மகனை அதிகம் நேசித்து வந்தாள். அந்தப் பையன் ஒருநாள் தெருவீதியில் போகும் பொழுது ஓர் துஷ்ட மனிதன் அவனுடன் சண்டையிட்டு அவனைக் கொன்று போட்டான். பின்னர் அக்கொலைபாதகன் சேவகர் தன்னை பிடிக்க வருவார்களென பயந்து ஓர் வீட்டில் புகுந்து ஒளிந்து கொண்டான். அந்த வீடு மேற்சொல்லிய சீமாட்டியின் வீடாக இருந்தாலும் அந்த மனிதன் உள்ளே இருந்தது அவளுக்கு தெரியாது போயிற்று. சிறிது நேரத்திற்குப் பிறகு கொல்லப்பட்ட மகனை அவளிடத்தில் கொண்டு வந்தபோது அவள் தன் மகனெனக் கண்டு சொல்லொணா துயரம் அடைந்து அவனைக் கொன்ற துஷ்டன் தன் வீட்டில் இருக்கிறதையும் அறிந்து முதலில் இவனை சேவகருக்குக் காட்ட வேண்டுமென்று நினைத்தாள். ஆனால் தேவமாதா தம்முடைய திருமைந்தனை கொன்றவர்களுக்கு மன்னிப்பு அளித்ததையும், சிலுவை அடியிலிருக்கும் பொழுது அன்னை அடைந்த சொல்லிலடங்காத வியாகுலத்தையும் நினைத்து வியாகுலமாதாவைப் பார்த்து அந்த துஷ்ட கொலை பாதகனுக்கு முழுமனதோடு மன்னிப்பு அளித்ததுமன்றி பணத்தையும், வஸ்திரங்களையும் அளித்து அவனைப் பிடிக்க வந்தவர்கள் கையினின்றும் அவன் தப்பிச் செல்ல ஓர் குதிரையையும் அவனுக்கு தயார் செய்து கொடுத்தாள். அப்பேர்பட்ட நற்கிரிகையை செய்தபிறகு அன்று இரவில் மரித்த தன் மகனுடைய ஆத்துமம் அவளுக்கு தோன்றி சொன்னதாவது: நான் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு வருஷம் இருக்க பாத்திரமாயிருந்தேன். ஆனால் நீங்கள் அந்த துஷ்ட மனிதனுக்கு வியாகுலமாதாவைக் குறித்து செய்த உபகாரத்துக்கு சம்பாவனையாக தேவமாதா இன்றுதானே என்னை மோட்சத்துக்கு கூட்டிச் சென்றார்கள் என்றான்.

ஆம் கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே பிறர் உங்களை புறம் கூறினால் அவர்களுக்காக ஜெபியுங்கள் பிறர் உங்களை காயப்படுத்தும் போது அவர்களை மன்னியுங்கள் ஏனென்றால் அடுத்த நொடிப்பொழுது கூட நமக்கு நிச்சயம் இல்லை இந்த உலகில் என்பதை மனதில் இருத்திக் கொள்வோம் - ஆமென்

இரண்டாவது : 

ஓர் பிரபுவின் மகன் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் மெய்யான வேதத்தை அனுசரியாமல் பசாசுக்கு ஊழியம் செய்து பாவச்சேற்றில் இருபது வருஷமாக உழன்று வந்தான். அவன் சாகிற வேளையில் இயேசுநாதர் அவன் மேல் மனமிரங்கி அப்பொழுது வாழ்ந்து வந்த புனித விறிசித்தம்மாளுக்கு தம்மை காண்பித்து ஓர் குருவானவரை அந்த மனிதனிடத்தில் போகும்படிக்கு சொல்ல கற்பித்தார். குருவானவர் வியாதிக்காரனிடத்தில் வந்து அவனைப் பாவசங்கீர்த்தனம் செய்யச் சொன்னார். அதற்கு அவன் சம்மதியாமல் குருவானவர் சொன்னதை மறுதலித்து அவரைப் போகச் சொன்னான். மூன்று விசை அப்படி நடந்தது. கடைசியில் இயேசுநாதர் விறிசித்தம்மாளுக்கு காண்பித்த காட்சியை குருவானவர் வியாதிக்காரனுக்கு வெளிப்படுத்தி அவன் மனந்திரும்பினால் சர்வேசுரன் பொறுப்பாரெனச் சொன்னார். வியாதிக்காரன் அந்த செய்தியைக் கேட்டு வியந்து அழுது, நான் இருபது வருஷ காலம் பசாசுக்கு ஊழியஞ் செய்தேனே; எண்ணிக்கையில்லாத பாவங்களைச் செய்த பிறகு கரையேறுவது எப்படி என்றான். குருவானவர் நீ செய்த பாவங்களை வெறுத்து மெய்யான உத்தம மனஸ்தாபப்பட்டால் சர்வேசுரன் பொறுப்பார் என்பதற்குச் சந்தேகமில்லையென்று சொல்ல, அப்பொழுது அந்த பிரபுவின் மகன் அதைக்கேட்டு ஆறுதல் அடைந்து குருவானவரைப் பார்த்து, சுவாமி நான் அவநம்பிக்கையாயிருந்து, நான் செய்த பாவம் எண்ணிக்கையில்லாததினால் நரகத்துக்கு தப்பி மோட்சத்தை அடைய முடியாதென்று இருந்தேன். ஆனால் நான் இப்பொழுது உத்தம மனஸ்தாபப்படுகிறதினால் சர்வேசுரன் பொறுப்பாரென்று முழுதும் நம்பியிருக்கிறேன்.

ஆகையால் இப்பொழுதே பாவசங்கீர்த்தனம் செய்ய ஆசையாய் இருக்கிறேனென்று சொல்லி அன்றுதானே நன்முறை பாவசங்கீர்த்தனம் செய்து மறுநாள் நன்மை வாங்கி மிகுந்த சந்தோஷத்துடனே மரித்தான். அவன் இறந்த பிறகு இயேசுநாதர் புனித விறிசித்தம்மாளுக்கு தோன்றி: அந்தப் பாவியானவன் பாவச் சேற்றில் உழன்றபோது வியாகுல மாதாவை அடிக்கடி நினைத்து வேண்டிக்கொண்டதால், தேவமாதாவின் வேண்டுதலைக் குறித்து நாம் அவனை நரகத்தில் தள்ளாமல் அவன் உத்தரிக்கிற ஸ்தலத்தில் சிறிது நேரம் இருந்து, பிறகு மோட்சத்துக்கு அழைத்துக்கொள்வோம் என்று சொன்னார்.

மூன்றாவது : 

வாலிபன் ஒருவன் வியாகுலமாதாவின் மீது பக்திவைத்து சுரூபத்துக்கு முன்பாக தினமும் வேண்டிக்கொண்டு வந்தான். அந்த சுரூபத்தின் நெஞ்சில் தேவமாதாவின் ஏழு வியாகுலங்களைக் குறித்து ஏழு வாள்கள் இருந்தன. அவன் ஒரு இரவில் பசாசின் தந்திரத்தால் ஒரு சாவான பாவத்தை கட்டிக்கொண்டான். விடியற்காலையில் வியாகுல மாதா சுரூபத்துக்கு முன் வழக்கம்போல தான் குறித்த செபங்களை முடிக்க வருகையில் தேவமாதாவின் நெஞ்சிலே ஏழு வாள்களோடு எட்டாம் வாள் ஒன்று இருக்கிறதைக் கண்டான். அந்த அதிசயத்தை கண்டு யோசித்து கொண்டிருக்கும் பொழுது நீ இந்த இரவில் செய்த பாவமே தேவமாதாவின் எட்டாம் வாளாயிருக்கிறதென்ற சத்தத்தை அவன் கேட்டு அஞ்சி தன் பாவத்தால் தேவமாதாவுக்கு கஸ்தி வருவித்ததையும் சர்வேசுரனுக்கும், கோபம் வருவித்ததையும் நினைத்து மனஸ்தாபப்பட்டு கண்ணீர் விட்டு அழுது உடனே பாவசங்கீர்த்தனம் செய்தபின் சுரூபத்தின் முன்பாக திரும்பி வந்து அதில் முன் போல் ஏழு வாள்களைக் கண்டு தேவமாதாவின் இரக்கத்தால்தான் பாவம் பொறுக்கப்பட்டதென அறிந்து மகிழ்ச்சியுற்றான் பாவத்தில் மீண்டும் விழாது நல்லவன் ஆனான்.

கிறிஸ்தவர்களே! உங்களுக்கு கிருபையுள்ள தாயாராயிருக்கிற தேவமாதாவின் வியாகுலங்களை நினைத்திரங்கி உங்களுடைய பாவங்களால் அவளுக்கு கஸ்தியை உண்டாக்காதீர்கள்.