தேவமாதாவின் வணக்கமாதம் - மே 18

தேவமாதா தமது திருமைந்தனிடம் அடைந்த சந்தோஷத்தின் பேரில்!

கன்னிமரியாள் தமது மைந்தனைப் பார்த்த பொழுது அடைந்த சந்தோஷம்.

மிகுந்த நேசமுள்ள கன்னிமரியாள் அளவில்லாத அன்புக்குரிய தமது மைந்தனாகிய இயேசுவைப் பார்த்த பொழுது ஆத்துமமானது மிகுதியான சந்தோஷத்தால் நிரப்பப்பட்டது. எல்லா மனிதரிலும் செளந்தரியமுள்ளவராய் இருக்கிற இயேசுநாதரிடத்தில் சகல இஷ்டப்பிரசாதங்களும், ஞானத்திரவியங்களும், தேவ இலட்சணங்களும், அடங்கியிருக்கிறதென்றும், அவர் உலகத்தை இரட்சிக்கிறதற்கு அனுப்பப்பட்டவரென்றும், எண்ணிக்கையில்லாத ஆத்துமங்களை மோட்சத்துக்குக் கூட்டிக்கொண்டு போவாரென்றும், அவர் மெய்யான சர்வேசுரனாகையால் மனுக்குலத்தார் எல்லோரும் அவரை ஆராதிப்பார்களென்றும் கன்னிமரியாள் அறிந்து, மகிமையை அவர் அடைந்ததினால் சொல்லிலடங்காத மகிழ்ச்சி வணக்கத்துடன் அவருக்கு ஊழியம் செய்து வந்தார்கள். இவ்வாறு நாமும் திவ்விய நன்மை வாங்கும் பொழுது தேவமாதாவின் திருமைந்தனாகிய இயேசுநாதர் நமது அத்துமத்தில் வருகிறாரென்பது நிச்சயமாகையால், மிகுந்த பக்தி வணக்கத்தோடும் சிநேகத்தோடும் அவரை உட்கொள்ளக்கடவோம்.

அவரோடு பேசினபொழுது அடைந்த சந்தோஷம்.

கன்னிமரியாள் தமது திருக்குமாரனோடு சல்லாபித்த பொழுது மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். வேதத்துக்கடுத்த சத்தியங்கள் திருச்சபையில் ஸ்தாபிக்கப்படும் ஒழுங்குகள், அதில் நடக்கப்போகும் அதிசயமான வர்த்தமானங்கள், வேதசாட்சிகள் தங்கள் பிராணனைக் கொடுக்கப்போகும் அதிசயத் துணிவு, உலக முடிவு பரியந்தம் எண்ணிக்கையில்லாத மகாத்துமாக்கள் செய்யும் புண்ணியங்கள் ஆகிய இவைகள் எல்லாவற்றையும் இயேசுநாதர் தமது அன்னைக்கு வெளிப்படுத்தினார். கன்னிமரியாயோ அவருடைய வார்த்தைகளை மிகுந்த வணக்கத்தோடு கேட்டு, அவர் திருவுளம் பற்றினவைகளை எல்லாம் இடைவிடாது தியானித்து மிகவும் மகிழ்ந்தார்கள். வேதத்திலுண்டான சத்தியங்களைக் கிறிஸ்தவர்கள் அடிக்கடி தியானித்தால் ஞான சந்தோஷத்தை அடைவார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை. ஆனால் அழிந்துபோகிற உலக காரியங்களின் மேல் கவலை வைத்து அழிவில்லாத வேத காரியங்களின் மட்டில் அசட்டையாக இருந்தால் பிரயோசனமென்ன? அழிந்து போகிற சரீரத்துக்காக வெகு பிரயாசைப்பட்டு முடிவில்லாத நித்திய வாழ்விற்கு வழியாயிருக்கிற வேதத்தை அறியாதிருந்தால் பலனேது? ஆகையால் வேத ஒழுங்கின்படி நடக்கும்படிக்கும், வேதகாரியங்களைப் பக்தியோடு தியானித்து அறியவும், அவைகளை உறுதியாய் விசுவசிக்கவும், வேண்டிய உதவிகளைத் தேவதாயாரிடம் கேட்கக்கடவீர்களாக.

அவர் தம்முடைய வேதம் போதிக்கிறதைக் கேட்ட பொழுது அடைந்த சந்தோஷம்.

இயேசுநாதர் வேதத்தைப் போதிக்கும் பொழுது கன்னிமரியாள் சந்தோஷமடைந்து தமது குமாரன் எண்ணிலடங்காத அற்புதங்களைச் செய்கிறதையும், அவரைப் பின் செல்லத் திரளான சனங்கள் வருகிறதையும் ஆரோக்கியத்தை அடைவதற்காக அவரை பிணியாளர் தேடுகிறதையும், எங்கும் உள்ள மனிதர் அவருக்கு புகழ்ச்சி, நமஸ்காரம், ஆராதனை செய்கிறதையும், தேவமாதா கண்டு மிகுந்த சந்தோஷமடைந்தார்கள் அன்றியும் இயேசுநாதருடைய சீஷர்களும், அவருடைய திருவாக்கியங்களை அதிசயத்தோடு கேட்டவர்களும், அவரால் பிணி தீர்க்கப்பட்டவர்களும், ஏன் உயிர் பெற்றவர்களும் தேவ மாதாவிடத்தில் வந்து வணங்கி அப்பேர்ப்பட்ட குமாரனைப் பெற்றதினால் தோத்திரம் சொல்லி, பேறுபெற்றவர்களென்றும், ஆசீர்வதிக்கப் பட்டவர்களென்றும், புகழ்ந்து வருகையில் அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷம் இருந்திருக்கும்! நாமும் கன்னிமரியாயிக்கு மகிழ்ச்சி வருவிக்க வேண்டுமென்ற ஆசையோடு நமக்காகப் பெற்ற குமாரனைக் குறித்து அன்னைக்குத் தகுதியான மங்கள வார்த்தையைச் சொல்லக்கடவோம்.

செபம்.

என் திவ்விய தாயாரே! என் பேரில் மிகுந்த அன்புவைத்து எனக்கு எண்ணிக்கையில்லாத உபகாரங்களைச் செய்து, இஷ்டப்பிரசாதத்தால் வருகிற மன அக்களிப்பை என் ஆத்துமத்தில் விளைவிக்கும்படிக்கு எவ்வளவு பிரயாசைப்பட்டீர்! நான் உமக்கு சந்தோஷம் வருவிக்கத் தக்கதாக இன்றுவரையில் எதிலும் பிரயாசைப்பட்டவனல்ல. ஆகையால் உமது திருமைந்தனாகிய இயேசுநாதர் வெளிப்படுத்தின வேத சத்தியங்களை இனியேனும் அறிந்து விசுவசிக்கவும், அதன்படி நடக்கவும் ஆசையாயிருக்கிறேன். இயேசுநாதரிடத்தில் நீர் அடைந்த சந்தோஷத்தைப் பார்த்து என் ஆசை நிறைவேறும்படி என்பேரில் தயவாயிருந்து எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

கிறிஸ்தவர்களுடைய சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பதினெட்டாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

உங்களுடைய காவலான சம்மனசையும் அவரால் உங்களுக்கு வந்த உபகாரங்களையும் நினைத்து அவருக்குத் தோத்திரம் சொல்லுகிறது.

புதுமை!

மகா பேர்பெற்ற சில்வெய்ரா கோன்சலேஸ் என்னும் இயேசுசபைக் குருவானவர் ஆப்பிரிக்காவிலுள்ள மோனோமோத்தப்பா என்னும் நாட்டுக்கு மெய்யான வேதத்தைப் பிரசங்கிக்கப் போன பொழுது தம்மோடு தேவமாதாவின் ஓர் படத்தை எடுத்துச் சென்றார். அவ்விடத்தில் சேர்ந்த தம் அரசரின் பிரதானிகளில் ஒருவன் அவரைக் காண வந்தபோது அவர் அறையில் இருந்த படத்தைக் கண்டு, இது உயிருள்ள உருவமோ, உயிரில்லாத உருவமோ என கண்டுகொள்ள முடியாததால் அரசரிடத்தில் வந்து, அந்தக் குருவானவரிடத்தில் நான் அழகுள்ள ஒரு பெரிய இராக்கினியைக் கண்டேன் என்று சொன்னான். அரசர் அந்த இராக்கினியைக் காண வேண்டுமென்ற ஆர்வத்தோடு குருவானவரிடத்தில் ஆளனுப்பி, ஆண்டவரே! நீர் நம்மண்டைக்கு உம்முடன் இருக்கும் இராக்கினியைக் கூட்டிக் கொண்டு வர வேண்டுமென்று மன்றாடினார். குருவானவர், மன்னரின் வேண்டுகோளின்படி அவரண்டையில் வந்து தேவமாதாவின் படமல்லாமல் தம்மோடு வேறு இராக்கினியில்லாமையால் அதை எடுத்து மன்னருக்கு காண்பித்தார். மன்னர் அப்படத்தைக் கண்டு அளவிள்ளாத ஆனந்தங்கொண்டு தம்முடைய அறையில் மிகுந்த அலங்காரத்தோடு வைக்கச் சொன்னார்.

அன்று இரவில் தேவதாய் மிகுந்த பிரகாசத்தோடு அந்தப் படத்தின் வடிகரூபமாய் அவரது நித்திரையில் தம்மைக் காண்பித்து அவரிடம் பேசினார்கள். ஆனால் அரசரால் இவைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப்போல் ஐந்து நாள் இரவிலும் சம்பவித்ததைக் கண்ட அரசர் குருவானவரிடத்தில் வந்து அந்த இராக்கினி என்னோடு அறியாத மொழியில் பேசுகிறதினால் நான் கஸ்திபடுகிறேன், அதை அறியும்படி என்ன செய்யலாமென்று கேட்டதற்கு குருவானவர் பதில் மொழியாக: அந்தப் பரம இராக்கினி பேசுகிற மொழி பரலோக மொழியானதால், அதை அறிய வேண்டுமானால் ஞானஸ்நானம் பெற்று மெய்யான வேதத்தை அனுசரித்தால் அறியலாமென்று சொன்னார். அதைக் கேட்ட அரசர் அந்த மொழியை அறிய ஆசையுள்ளவராய் இருந்ததால் ஞானஸ்நானத்திற்கு சம்மதித்து செபங்களும், வேதப் பிரமாணங்களும் படித்த பிறகு, அவரும் அவருடைய தாயாரும் பிரதானிகள் அநேகரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்பொழுது தேவமாதா பேசுகிற மொழியை அறிந்து தாம் ஞானஸ்நானம் பெறுவதற்கு அந்தப் பரம இராக்கினி தெரிந்து கொண்ட வழி இதுதான் என்று நிச்சயித்து அன்னைக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லி அது முதல் மெய்யான வேதத்தில் பிரமாணிக்கமாயிருந்தார்.

கிறிஸ்தவர்களே! உங்கள் மனதில் பரிசுத்தாவியாகிய சர்வேசுரன் கொடுக்கிற ஞான ஏவுதல்களை நீங்கள் கேட்கும்படியாக தேவ மாதாவின் அனுக்கிரகத்தை மன்றாடுங்கள்.