தேவமாதாவின் வணக்கமாதம் - மே 16

தேவமாதா சுத்திகரத்தின் பேரில்!

கீழ்ப்படிதல்!

பிள்ளையைப் பெற்ற சில பெண்களும் சுத்திகரம் பண்ணவேண்டுமென்ற வேதகற்பனையை தேவமாதா அனுசரிக்கிற வேளையில் கீழ்ப்படிதல் என்ற புண்ணியத்தின் சுகிர்த மாதிரிகளை அனைவருக்கும் காட்டினார்கள். சர்வேசுரனுடைய திருமாதாவும் சகல கன்னியர்களிலும் பரிசுத்த கன்னிகையுமாகி, மற்ற பெண்களைப்போல், தமது குமாரனைப் பெறாமல் பரிசுத்தாவியின் கிருபையால் அற்புதமாக பெற்றது சத்தியமானதால், அவர்கள் சுத்திகரம் செய்ய கடமையும் தேவையும் இல்லாதிருந்தது. ஆகிலும் வேதத்தில் கற்பித்திருந்த சடங்குகளெல்லாவற்றையும் ஒன்றும் தவறாமல் நிறைவேற்றி, சர்வேசுரன் கட்டளையிட்ட படியே தமது கடமைக்குமேல் அதிகமாய்ச் செய்தார்கள். நீங்களோவெனில், உங்கள் கடமையைச் செய்யாமல் சர்வேசுரன் கற்பித்ததை புறக்கணித்து, கீழ்ப்படிய வேண்டிய சமயத்தில் கட்டாயத்தோடும் கீழ்ப்படிகிறதினால், ஞானப் பிரயோசனம் அடையாதிருக்கிறீர்கள். ஆனால் தேவமாதா கீழ்ப்படிந்த விதத்தை மனதில் எண்ணி அன்னையைப் பின்பற்றி பிரியமான புண்ணியத்தை அனுசரிக்கக்கடவீர்கள்.

தாழ்ச்சி!

தேவமாதா காட்டின தாழ்ச்சியாவது: கன்னிமாமரியாள் தாம் பரிசுத்த கன்னிகையும் தேவமாதாவும் என்று காண்பியாமல், சகல வணக்கத்துக்கும் பாத்திரமாயிருந்தாலும் மற்றப் பெண்களைப்போல் சுத்திகரம் செய்ய தம்மைத் தாழ்த்திக்கொண்டார்கள். மேலும் தமது வறுமையைக் காண்பிக்கச் சம்மதித்து தாம் அரச வம்சத்தில் பிறந்தவர்களுமாய், பரலோக பூலோக இராக்கினியுமாயிருந்தாலும், எளிய மக்கள் வழக்கமாய் கோவிலுக்குக் கொடுக்கிற காணிக்கையைத் தாமும் கொடுத்து, உலக மகிமையைத் தேடாமல், தமக்குக் கீர்த்தி வருவிக்கக்கூடிய அனைத்தையும் விலக்கினார்கள். மனிதரோவெனில் பாவிகளாயிருந்தாலும் உலக கீர்த்தியைப் பெற ஆவலுடன் நாடி தாங்கள் குற்றமில்லாதவர்களும் புண்ணியவான்களுமென்று பிறரால் எண்ணப்படுவதற்குப் பிரயாசைப்பட்டு தாழ்ச்சியுள்ள கிரிகை எல்லாவற்றையும் அருவருத்து மகிமை பெருமைகளை அடைந்து தங்களைப் பெரியவர்களாக எண்ணி, மற்றவர்களை மேற்கொள்ள ஆசைப்படுகிறார்கள், அத்தகைய ஆங்காரமுள்ள மனிதர் தாழ்ச்சியுள்ள தேவமாதாவுக்கு உகந்த பிள்ளைகளாய் இருப்பதெங்ஙனம்?

பிறர் சிநேகம் ஆகிய இம்மூன்று புண்ணியங்களும் தேவமாதாவிடத்தில் விளங்கின.

தேவமாதா காண்பித்த பிறர் சிநேகமாவது: பரிசுத்த கன்னிமாமரியாள் சுத்திகரம் செய்த பின்னர், தமது திரு மைந்தனான இயேசுநாதரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார்கள். அப்படிக் காணிக்கையாகக் கொடுத்ததினால் மனிதர் பேரில் தமக்கு உண்டான அளவுகடந்த அன்பை காண்பித்தார்கள். இயேசுநாதர் சிலுவையில் மரணித்து தமது இரத்தமெல்லாம் சிந்தினால்தான் மனிதர்கள் மீட்கப்படுவார்கள் என்ற தேவ ஆலோசனையைக் கன்னிமரியாள் அறிந்து, அந்த ஏற்பாட்டுக்கு முழுவதும் சம்மதித்து, மனிதர்மேல் இரக்கப்பட்டு அவர்களை மீட்க வேண்டுமென்ற மிகுந்த ஆசையோடு தேவ சித்தத்துக்கும் தேவ நீதிக்கும் தமது மைந்தனை பலியாக ஈந்தார்கள். அத்தகைய பலியைக் கொடுக்கும் வேளையில் தேவமாதா மனிதர் மட்டில் காண்பித்த சிநேகம் எவ்வளவென்று ஒருவராலும் சொல்ல முடியாது. இத்தகைய நேசத்தை நமக்குக் காட்டின தாயை சிநேகியாமல் இருக்கலாமோ? இத்தகைய நேசம் கொண்ட மாதாவின் மட்டில் சிநேகமில்லாதவன், நன்றி கெட்டவனும் துஷ்டனும் ஆவான்.

செபம்.

மிகவும் இரக்கமுள்ள கன்னிமரியாயே, உம்மை மகா அன்புக்குப் பாத்திரமான மாதா என்னும் பெயரால் கிறிஸ்தவர்கள் கூப்பிடுகிறதை நான் கேட்கும் பொழுதெல்லாம் மகிழ்ச்சியுறுகிறேன். எங்கும், எல்லா மனிதராலும் நேசிக்கப்படத்தக்க மாதாவே! இராஜாதி இராஜாவாகிய சர்வேசுரன் உமக்குண்டான சவுந்தரியத்தையும் நற்குணங்களையும் அளவில்லாத விதமாய் நேசிக்கும் பொழுது எண்ணப்படாத உபகாரங்களை எனக்குச் செய்த தாயை நான் சிநேகியாதிருப்பேனோ? அப்படியல்ல, மற்றவர்களைவிட அதிகமாய் உம்மை சிநேகிக்க, என்னால் கூடாததால், கஸ்திப்பட்டு நான் உமக்கு கொடுக்கிற என் இருதயத்தையும் உமது சித்தத்தின்படியே நடந்து, அதில் தாழ்ச்சி, கீழ்ப்படிதல் பிறர் சிநேகம் என்ற இம்மூன்று புண்ணியங்களையும் விளைவிக்க வேண்டுமென்று மன்றாடுகிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

நேசத்துக்குரிய தாயாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பதினாறாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

பிற மதத்தவரிடம் வேதத்தைப்பற்றி பேசுகிறது.

புதுமை

ஐரோப்பா தேசத்தில் கர்கசோன் என்ற பட்டணத்தில் புனித சாமிநாதர் பிரசங்கித்துக்கொண்டு வரும்பொழுது ஒரு மனிதனை அவரிடத்தில் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அந்த மனிதன் தேவமாதாவைக் குறித்து நூற்றைம்பத்து மூன்று மணிச் செபம் ஆகாதென்று சொன்னதின் காரணதால், பிசாசானது அவன்மேல் ஆவேசம் கொண்டது. பசாசானது அவன்மேல் ஆவேசம் கொண்டதை அறிந்து தாம் நாற்றைம்பத்து மூன்றுமணிச் செபத்தைக் குறித்துப் பிரசங்கித்ததெல்லாம் மெய்யோ பொய்யோ என்று சர்வேசுரன் பெயரால் சொல்லக் கற்பித்தார். அப்போது அந்தப் பசாசு அந்த மனிதன் வாயினால் ரத்தத்தத்தோடு சொன்னதாவது: சூழ நிற்கிற கிறிஸ்தவர்களே! நான் சொல்லப் போகிறதைக் கேளுங்கள். எனக்குக் கொடிய விரோதியாக இருக்கும் சாமிநாதர் தேவமாதாவின் பேரிலும் நூற்றைம்பத்து மூன்று மணிச் செபத்தின் பேரிலும் பிரசங்கித்த யாவும் சரிதான். அதனன்றியும் கன்னி மரியாயை வணங்குகிறவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் செய்ய என்னால் முடியாது. அவர்களுக்குள் மோட்சமடைய அபாத்திரவான்களாக இருந்தாலும் தேவமாதாவை வேண்டிக்கொண்டு கரையேறுவார்கள். அவள் பேரில் பக்தி வைத்து நூற்றைம்பத்து மூன்று மணிச் செபம் வழக்கமாய்ச் செய்கிறவர்கள் எல்லோரும் சாகிற வேளையில் தேவமாதாவின் உதவியால் உத்தம மனஸ்தாபப்பட்டு மோட்சம் சேருவார்களென்று சொல்ல சர்வேசுரன் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். பசாசானது அப்படிச் சொன்னதைக் கேட்டு, கூட நின்றவர்கள் எல்லாரும் பிரமித்து, அவர்களும், புனித சாமிநாதரும் அந்தப் பசாசை அந்த மனிதனிடத்தினின்று ஓட்டும்படிக்கு நூற்றைம்பத்து மூன்று மணிச் செபத்தைத் தொடங்கினார்கள். அவர்கள் வேண்டிக் கொள்ளுகையில் அந்த மனிதனிடத்தில், அனேகம் பசாசுகள் இருந்ததினால் ஒவ்வொரு அருள்நிறை செபத்திலும் ஒவ்வொரு பசாசு நெருப்புத்தணல் ரூபமாய் ஓடிப்போனது. செபம் முடிந்தவுடன் அந்த மனிதன் சௌக்கியமாய் இருந்தான். அக்காலத்தில் இருந்த பதிதரில் அநேகம் பேர் அந்தப் புதுமையைக் கண்டு மனந்திரும்பினார்கள்.

கிறிஸ்தவர்களே, பசாசு உங்களுக்கு எந்த விதத்திலும் தீமை விளைவிக்காதபடிக்கு தேவமாதாவின் அடைக்கலத்தை எப்போதும் தேடக்கடவீர்கள்.