திருச்சபை கட்டளைகளின் பேரில்

152. திருச்சபையின் பிரதான கட்டளைகள் எத்தனை?

ஆறு.


153. ஆறும் சொல்லு.

1. ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுபூசை காண்கிறது
2. வருடத்திற்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது
3. பாஸ்கா காலத்தில் பாவசங்கீர்தனம் செய்து திவ்விய நற்கருணை உட்கொள்கிறது.
4. சுத்தபோசன நாட்களில் சுத்தபோசனமும், ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது.
5. விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும் விக்கனமுள்ள உறவு முறையாரோடும் கலியாணம் செய்யாதிருக்கிறது
6 .நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.


154. ஞாயிற்றுக்கிழமையிலும் கடன் திருநாட்களிலும் பூசை காணாமல் தவறிப்போகிறது சாவான பாவமா? 

ஆம். சரியான முகாந்திரம் இல்லாமல் பூசை காணாமல் தவறிப் போகிறது சாவான பாவந்தான்.


155. நமது மேற்றிராசனத்தில் வழங்கும் கடன் திருநாட்கள் எவை? 

1. யேசுநாதர் பிறந்த திருநாள் 
2. தேவமாதா மோட்சத்துக்கு ஆரோபணமான திருநாள் ஆகிய இரண்டுமாகும்.


156. இரண்டாம், மூன்றாம் கற்பனைகளால் திருச்சபை நமக்கு கற்பிக்கிற தென்ன? 

வருஷத்துக்கு ஒரு முறையாவது புத்திவிவரம் தெரிந்த சகல கிறிஸ்துவர்களும் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து, பாஸ்கு காலத்தில் தேவ நற்கருணை வாங்க வேண்டும் என்று கண்டிப்பாய் கற்பிக்கிறது.


157, சுத்தபோசனக் கடனை அனுசரிப்பதெப்படி?

முந்தின இராத்திரி நடுச்சாமம் துவக்கி குறிக்கப்பட்ட நாளின் நடுச்சாமம் வரை மாம்ச பதார்த்தங்களைச் சாப்பிடாமலிருப் பதினாலே தான்.


158. சுத்த போசனக் கடன் எந்தப் பிராயத்தில் துவக்கும்?

14 பிராயம் பூர்த்தியானது முதற்கொண்டு துவக்கும்.


159. ஒருசந்திப் பிடிப்பதென்றால் என்ன?

ஒரு வேளை மாத்திரம் முழுப்போஜனம் சாப்பிடுவதாம்; காலையில் சொற்ப ஆகாரமும். மாலையில் சிற்றுணவும் கொள்ளலாம்.


160. எந்த வயதில் ஒருசந்தி துவக்கும்?

21 வயது முதற்கொண்டு 60 வயது வரையில், 


161. கலியாணத்துக்கு இருக்கும் விக்கினங்களை வெளிப்படுத்துவது கடமையா? 

ஆம். ஒரு கலியாணத்துக்கு விக்கினம் உண்டு என்று அறிந்த கிறிஸ்துவர்கள் யாவரும் பங்கு சுவாமியாரிடம் அதை வெளிப்படுத்தக் கடமைப்பட்டவர்களாயிருக்கிறார்கள்.


162. நமது ஞான மேய்ப்பர்களுக்கும். கோயிலுக்கும் நாம் செய்ய வேண்டிய உதவி என்ன? 

1-வது அந்தந்தப் பங்கு விசாரணையில் ஆயருடைய அனுமதி அல்லது கட்டளைப் பிரகாரம் கற்பிக்கப்பட்ட சந்திப்பு, கோயில்வரி, தலைக்கட்டு பணம் முதலியவைகளை யாகிலும் செலுத்த வேண்டும். 

2-வது நமது ஞான மேய்ப்பர்களுடைய தர்மக் காரியங்கள் அநுகூலம் பெறும்படி, செல்வாக்குப் பேச்சினாலும், மாதிரிகையாலும், செபத்தாலும் உதவி செய்ய வேண்டியது.