கடவுளும் நாமும் - வாக்கு செயல், ரூபிகரம் (கற்பனாசக்தி)

140. மேற்கூறியவற்றைத் தவிர, இன்னும் வேறு எதையாவது நாம் அடக்கவேண்டிய துண்டா?

ஆம். நமது நாவையும், மெய்யசைவுகளையும், கற்பனா சக்தியையும் அடக்க வேண்டும்.

141. நாக்கை ஏன் அடக்கவேண்டும்?

நாவானது வழுவழுப்பாய் இருந்து கொண்டு வழவழ வெனச் சொல்லத்தகாத காரியங்களைச் சொல்லிவிடுகிறது. அது சுழலத் துவக்கின பிறகு அதை அடக்குவது மிகவும் கடினம். மேலும், "நா அசைய நாடு அசையும்"- என்பது அறிஞர் கண்ட உண்மை . 

142. உடல் அசைவுகளை ஏன் அடக்கவேண்டும்?

ஏதாவது ஒரு ஆசை தோன்றிவிட்டால், உடனே உடலானது தன் விருப்பப்படி இயங்கி, செயல்பட ஆரம்பிக்கும்; அதைத் தடுக்காவிட்டால், தகாததை செய்தே முடிக்கும்.

143. ரூபிகரம் அல்லது கற்பனாசக்தி என்பது யாது? 

ரூபிகரம் மனதின் 'கண்' என்று சொல்லப்படும். நாம் காரியங்களைக் கண்ணால் கண்டது போல, அது நினைவில் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

144. ரூபிகரத்தை ஏன் அடக்கவேண்டும்?

ஏனெனில், ஐம்புலன்களை விட அதிக வேகமாக ரூபிகரம் ஆசாபாசத்தை எழுப்பக்கூடியது.

145. ரூபிகரத்தை அடக்கிக் கட்டுப்படுத்துவது கடினம் அல்லவா? 

ஐம்புலன்களைக் கட்டுப்படுத்துவதைவிட இது அநேக சமயங்களில் மிகவும் கடினமானதே. ஆகையால் ஆசாபாச நெருப்புக்கு விறகுபோன்ற பொருட்களை உற்றுப் பார்க்காமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அப்படிச் செய்யா விட்டால், பார்த்த அந்தப் பொருள்கள் நமது ரூபிகரத்தில் தோன்றிப் பாவத்துக்கு ஏதுவாகும் ?

146. ஆசாபாசம் அதி தீவிரமாகவும், அடக்கக்கடினமாயும் இருப்பதைப் பற்றி, அதனால் ஏற்படும் செயல் பாவம் அல்ல என்று சொல்லலாமா?

ஒருவன் பாவத்தில் விழுந்ததற்குக் காரணம். ஆசா பாசத்தின் வேகம் எனலாமே தவிர, அவனுக்குப் பாவம் இல்லை எனலாகாது. ஏனெனில் ஆசாபாசம் எவ்வளவு தான் வேகங்கொண்டாலும், அவனுக்கு அதை எதிர்க்கும் தத்துவம் உண்டு. 

147. ஒரு தீய பழக்கம் ஏற்பட்டுப் போனதை முன்னிட்டு நான் என்ன செய்வேன். அது எனக்குப் பாவம் இல்லை எனலாமா? 

நீ பாவத்தில் மிக எளிதாய் விழுவதற்குக் காரணம் உன் தீய பழக்கம் என்பது சரியாகுமேயல்லாது. அதனால் உனக்குப் பாவம் இல்லை என்பது சரியல்ல. ஏனெனில், பழக்கத்தைப் பழக்கத்தால் மேற்கொள்ள முடியும். 

148. பாவத்தை தடுக்க மிக சிரமமாயிருந்தால், அந்த செயல், பாவம் அல்ல என்று சொல்லக்கூடாதா? 

ஒருபோதுமில்லை. எத்தகைய சிரமமும், பாவத்தை இல்லை என்று சொல்ல முடியாது. சிரமமாயிருந்தால் அதை அதிக உறுதியுடன் எதிர்க்கக் கடமை ஏற்படுகிறதல்லாமல் வேறல்ல.

149. வேறுவிதமாய்ச் செய்ய நம்மால் இயலவில்லை என்றால் சாக்குப்போக்கு செல்லுமா? 

செல்லாது. நாம் இவ்விதம் சொல்லத் துவக்கினால் வெகு விரைவில் அதை நம்பி. பாவத்தை அற்பமாய் எண்ணி, ஒவ்வொரு தடவைக்கும் மிக எளிதாகப் பாவத்தில் விழுந்து. கடைசியாக முற்றும் தீயவராக மாறிவிடுவோம்.