1-ம், 2-ம், 3-ம் தேவ கற்பனைகளின் பேரில்

124. (62) மோட்சத்தை அடைகிறதற்கு வேத சத்தியங்களை விசுவசிக்கிறதல்லாமல் இன்னும் செய்ய வேண்டியதென்ன?

சர்வேசுரனுடைய கற்பனைகளையும் திருச்சபையின் கட்டளைகளையும் அனுசரித்துப் பாவத்தைத் தள்ளிப் புண்ணியத்தைச் செய்யவும் வேண்டியது.


125. (63) சர்வேசுரனுடைய கற்பனைகள் எத்தனை?

பத்து.


126. (64) பத்தும் சொல்லு.

சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த தேவகற்பனைகள் பத்து.

1-வது. உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே;  நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக.

2-வது. சர்வேசுரனுடைய திருநாமத்தை வீணாகச் சொல்லாதிருப்பாயாக.

3-வது. சர்வேசுரனுடைய திருநாட்களைப் பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக.

4-வது. பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக.

5-வது. கொலை செய்யாதிருப்பாயாக.

6-வது. மோகபாவம் செய்யாதிருப்பாயாக.

7-வது. களவு செய்யாதிருப்பாயாக.

8-வது. பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

9-வது. பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.

10-வது. பிறர் உடமையை விரும்பாதிருப்பாயாக.


இந்தப் பத்துக் கற்பனைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்.

1-வது. எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது.

2-வது. தன்னைத்தானே நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பது. 

ஆமென்.