செப்டம்பர் 05

அர்ச். லாரென்ஸ் ஜுஸ்டினியன். ஆயர் - (கி.பி. 1456).

ஜுஸ்டினியன் வெனிஸ் நகரத்தில் சிறந்த குடும்பத்தில் பிறந்து, குழந்தையாயிருக்கும்போதே அர்ச்சியசிஷ்டதனத்தைக் காட்டினார். ஒரு தரிசனையில் தேவ ஞானஸ்நானத்தைப் பற்றிக்கொள்ளும்படி ஏவப்பட்டார்.

தமது 19-ம் வயதில் ஒரு நிலையைத் தெரிந்துக்கொள்ள விரும்பி, இதற்காக ஜெப தபத்தால் ஆண்டவரை மன்றாடி வந்தார். இவருடைய தாயார் இவருக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதைக் கண்ட ஜுஸ்டினியன் ஒருநாள் இரவு  தேவ ஏவுதலால் தமது வீட்டைவிட்டு ஒரு துறவற மடத்திற்கு ஓடிப்போனார்.

அவ்விடத்தில் புண்ணியச் செயல்களால் இவர் சகலருக்கும் ஞானக் கண்ணாடியாய் விளங்கினார். இவருடைய சிநேகிதனான ஒரு பிரபு இவரிடம் போய், துறவற வாழ்க்கையின் கஷ்டத்தை இவருக்கு அறிவித்து, அதை விட்டு உலகத்திற்கு திரும்பும்படி துர்புத்திமதி சொன்னபோது, ஜுஸ்டினியன் மனிதருடைய குறுகிய வாழ்நாளையும், ஒன்றுமில்லா இவ்வுலக நன்மையைப்பற்றியும் எவ்வளவு உற்சாகத்துடன் பேசினாரெனில், மேற்கூறப்பட்ட பிரபுவும் உலகத்தைத் துறந்து துறவியானார்.

ஜுஸ்டினியன் தாழ்ச்சி, பொறுமை முதலிய புண்ணியங்களை அனுசரித்து, தமது மடத்தின் பெரிய அதிபராகவும், பிறகு வெனிஸ் நகரின் ஆயராகவும் நியமிக்கப்பட்டார். இவர் இந்த உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்ட போதிலும், முன்பு இவர் செய்துவந்த புண்ணியச் செயல்களை இரு மடங்காக்கினார்.

பிரசங்கத்தாலும், நற்புத்திமதியாலும், சன்மார்க்கத்தாலும் கிறீஸ்தவர்களுடைய நடத்தையைத் திருத்தினார். ஏழைகளை அன்புடன் விசாரித்து, அவர்களுக்கு உதவிகள் பல செய்தார். பாவிகளைத் திருத்தித் திக்கற்றவர்களைக் காப்பாற்றி, ஆடம்பரமாய் உடைகளையும் ஆபரணங்களையும் அணியும் பெண்களைக் கண்டித்தார்.

இவர் சகலராலும் அன்புடன் நேசிக்கப்பட்டு, நல்ல ஆயத்தத்துடன் மரணமடைந்து, நித்திய சம்பாவனையைப் பெற்றுக்கொண்டார். இவருடைய சரீரம் இரண்டு மாதத்திற்குமேல் அழியாதிருந்ததுடன் அதிலிருந்து பரிமள வாசனை புறப்பட்டது.

யோசனை.

ஆடை அணிவதில் ஆடம்பரம் காட்டாமல், மரியாதையும் அடக்க ஒடுக்கமும் காட்ட வேண்டும்.