பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட செபம்.

நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறுவதற்காக இயேசு கிறிஸ்துவின் பெயரால் ஒவ்வொருவரும் திருமுழுக்கு பெறுங்கள். அப்போது நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்" (திபா 2 : 38) என்பது புனித பேதுருவின் அறிவுரை . அதன்படி பரிசுத்த ஆவியார் நம்மில் நிரம்ப வேண்டுமெனில்

1. மூவொரு இறைவனில் உறுதியான விசுவாசம் கொள்வோம்
2. பாவங்களுக்காக மனம் வருந்துவோம்
3. பரிசுத்த ஆவியார் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தங்கியிருந்து நம்மை வழிநடத்த உருக்கமாக மன்றாடுவோம்.

அன்றாட செபம்.
(இந்த செபத்தை உறுதியான விசுவாசத்துடன் தினந்தோறும் 20 நிமிட நேரம் செபிக்கவும்)

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா என் அன்பில் கலந்த கருணாகரனே! நீர் வாக்களித்தபடி உமது பரிசுத்த ஆவியை என்மீது அனுப்பியருளும். உம் பரிசுத்த ஆவியின் கனிகளையும், கொடைகளையும் அருங்கொடைகளையும் எனக்கு ஏராளமாக வழங்கி என்னை புதுப்பித்தருளும். மூவொரு இறைவா, உமக்கு நன்றி! மூவொரு இறைவா, உமக்குப் புகழ் ! விண்ணுலகத் தந்தாய், உம் பரிசுத்த ஆவியை என் மேல் பொழிந்தருளும். நன்றி, தந்தாய்! நல்ல தந்தையே, என்றும் உமக்கே புகழ்.

ஆமென்.